இந்த கோயில் எங்கு உள்ளது?
அருள்மிகு சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயில் சென்னை மாவட்டம் வில்லிவாக்கத்தில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
சென்னை எக்மோரில் இருந்து சுமார் 8 கி.மீ., தூரத்தில் வில்லிவாக்கம் உள்ளது. பஸ் ஸ்டாப்பிற்கு அருகில் கோயில் அமைந்துள்ளது. நகரின் பிரதான பகுதியில் இருந்து வில்லிவாக்கத்திற்கு பஸ் வசதி உண்டு.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இத்தலத்தில் சுவாமியை குழந்தைக் கண்ணனாகவே பாவித்து வழிபடுகிறார்கள்.
மூலவர், உற்சவர் இருவரின் இடுப்பிலும் கயிறு அழுந்திய தடம் இருக்கிறது.
திருப்பதி தலத்தைப் போலவே இங்கும், சுவாமிக்கு வடக்கு திசையில் (குபேர மூலையில்) அமிர்தபுஷ்கரிணி தீர்த்தம் உள்ளது.
தாயார் அமிர்தவல்லி, தனிச்சன்னதியில் இருக்கிறாள்.
வேறென்ன சிறப்பு?
பெருமாள் நின்ற கோலத்தில் அருளுகிறார்.
விமானம் ஆனந்த விமானம் எனப்படுகிறது.
3 நிலை ராஜகோபுரத்துடன் கூடிய கோயில் பிரகாரத்தில் ராமர், கண்ணன், ஆண்டாள், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், ராமானுஜர் சன்னதிகள் உள்ளது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
ஆடி பௌர்ணமியில் கஜேந்திர மோட்ச விழா நடக்கிறது. அப்போது, சுவாமி கருட வாகனத்தில் தீர்த்தத்திற்கு எழுந்தருளி யானை, முதலைக்கு மோட்சம் கொடுக்கிறார்.
ஆண்டுதோறும் தமிழ் மாதப் பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி, திருவோண நட்சத்திரம், ஏகாதசி திதி ஆகிய நாட்களில் பெருமாளும், தாயாரும் தோட்டத்தில் உலாவந்து, மாலை ஏழு மணிக்கு ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இக்கோயிலில் தை மாதத்தில் நடக்கும் உற்சவத்தின் நான்காம் நாளில் தாயாருக்கு மோகினி அலங்காரம் செய்கின்றனர். இவ்விழாவின் போது இவள் கோயில் வளாகத்திலுள்ள நந்தவனத்திற்கு எழுந்தருளும் வைபவமும் நடக்கிறது.
முதலாழ்வார்களின் ஜென்ம நட்சத்திர விழா 3 நாட்களும், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், தேசிகர் ஆகியோரின் திருநட்சத்திர விழா 10 நாட்கள் நடப்பது விசேஷம்.
மகர சங்கராந்தி அன்று (தைப்பொங்கல்) சுவாமி, ஸ்ரீவில்லிப்புத்தூர் ராஜமன்னார் அலங்காரத்தில் ஆண்டாளுடன் அருள்பாலிக்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன பிரார்த்தனைகள் செய்யலாம்?
சௌமிய தாமோதரரிடம் வேண்டிக்கொள்ள அறிவான குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
வேண்டுதல் நிறைவேறியவர்கள் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
இவருக்கு வெண்ணெய், பால்பாயசம் படைத்து வழிபட புத்திரபாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக