Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 11 டிசம்பர், 2019

’கைலாசா’ எங்கிருக்கிறது தெரியுமா? நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

நித்யானந்தாவின் “கைலாசா” தீவு எங்கிருக்கிறது என்று இந்தியர்கள் தேடி வரும் நிலையில் அதற்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருபவர் நித்யானந்தா. இவரை பிடிக்க கர்நாடக மாநில போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் அவர் “கைலாசா” என்ற தீவை விலைக்கு வாங்கி அங்கு குடியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதுதொடர்பாக இணையதளம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு நாட்டிற்கு தேவையான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையில் வரும் 12ஆம் தேதிக்குள் நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்று கண்டறிய வேண்டும் என்று கர்நாடக போலீசாருக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சூழலில் நித்யானந்தாவை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். ஆனால் வழக்கம் போல் கூலாக தனது YouTube-ல் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். இவரது ஒவ்வொரு வீடியோவிலும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ”உண்மையான கைலாசத்தை நாம் தான் உருவாக்குகிறோம். எனது உடலை பயன்படுத்தி பரமசிவன் இவ்வுலகில் கைலாசத்தை உருவாக்குகிறார்.

இ-ஸ்ரீகைலாசா திட்டத்தை தொடங்கியுள்ளோம். இது ஒரு நாட்டின் குடியுரிமை அல்ல. எல்லைகள் அற்ற ஆன்மிக பெருவெளி. கைலாசாவிற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

உங்கள் செல்லப் பிராணிகளையும் கைலாசாவில் இணைக்கலாம். அவற்றிற்கு சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு முறை நம் மீது பழி சுமத்தப்படும் போதும் நாம் நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்து காட்டுகிறோம்.
இதனால் நமது புகழ் ஓங்குகிறது. பலர் நம் மீது நம்பிக்கை வைக்கின்றனர். எப்போதுமே தாக்குதலை எதிர்கொள்பவர் தான் வரலாறு படைப்பார். முட்டாள்கள் தான் பிறரை தாக்குவார்கள். மனிதத்தின் எதிர்காலமே நாம் தான் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் தஞ்சாவூரை சேர்ந்த நித்யானந்தாவின் சீடர் விஜயகுமார் என்பவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் 2009ஆம் ஆண்டு தான் நித்யானந்தாவை நான் சந்தித்தேன்.

அவர் எனது பணம், நகைகளை மூன்று மடங்காக மாற்றி தருவதாக கூறினார். இதை நம்பி என் சொத்துகளை இழந்தேன். நித்யானந்தாவின் ஆசிரம ராஜ மாதாவாக நடிகை ரஞ்சிதா இருக்கிறார். அவரது கண் அசைவு இல்லாமல் ஆசிரமத்தில் எதுவும் நடக்காது.

பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் பாதாள அறையில் இருந்து கொண்டு வெளிநாட்டில் இருப்பது போல் வீடியோ கிராபிக்ஸ் செய்து காட்டுகிறார் என சந்தேகம் இருக்கிறது. எனவே அவரது ஆசிரமத்தில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளிடம் விசாரித்தால் நித்யானந்தா எங்கிருக்கிறார் என்று தகவல் தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக