Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 6 டிசம்பர், 2019

ஒரு லட்சம் கார்களைத் திரும்பப் பெறும் மாருதி சுஸுகி... ஏன் தெரியுமா?

 

பேட்டரிகள் தீப்பிடிப்பதாக எழுந்த புகார்களை அடுத்து, ஒரு லட்சம் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் திரும்பப் பெறவுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. 53 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ள இந்நிறுவனம் சியாஸ், எர்டிகா, வேகன் ஆர், ஆல்டோ கே-10, ஆல்டோ 800, ஸ்விஃப்ட், செலெரியோ, ஸ்விஃப்ட் டிசையர், பலேனோ, பலேனோ ஆர்.எஸ்., ஆம்னி, ஈக்கோ, இக்னிஸ், எஸ்-கிராஸ், விட்டெரா பிரெஸ்ஸா, எஸ்-பிரெஸ்ஸோ உள்ளிட்ட கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

மாருதி கார்களின் லித்தியம் அயன் பேட்டரிகளில் தீப்பற்றுவதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், அக்கோளாறுகளை சரிசெய்து தரும் பணியில் மாருதி சுஸுகி இறங்கியுள்ளது. அதன்படி, சியாஸ், எர்டிகா, எக்ஸ்.எல்.6 ஆகிய ஸ்மார்ட் ஹைபிர்ட் கார்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கார்கள் திரும்பப் பெறப்படவுள்ளன. சீட்களுக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கும் இந்த லித்தியம் அயன் பேட்டரிகள் சமீபத்தில் சில இடங்களில் தீப்பிடித்து எழுந்ததாகப் புகார்கள் வந்துள்ளன.

 
கடந்த ஒரு ஆண்டு காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட புதிய எர்டிகா, சியாஸ், எக்ஸ்.எல்.6 கார்களின் லித்தியம் அயன் பேட்டரிகளில் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேற்கூறிய பிரிவுகளின் கீழ் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்கள் இந்திய சாலைகளில் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அதில் ஒரு லட்சம் கார்கள் வரையில் திரும்பப்பெறப்படவுள்ளன.

இதற்கு முன்னர், 2018 நவம்பர் 15 முதல் 2019 ஆகஸ்ட் 12 வரையில் உற்பத்தி செய்யப்பட்ட 40,618 வேகன் ஆர் மாடல் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

கார்களின் விற்பனையைப் பொறுத்தவரையில், எக்ஸ்.எல்.6 கார்களின் மாதாந்திர விற்பனை எண்ணிக்கை 4,200 யூனிட்டுகளாகவும், எர்டிகா கார்களின் விற்பனை எண்ணிக்கை 7,000 யூனிட்டுகளாகவும் இருந்தது. எனினும், சியாஸ் கார் விற்பனை நவம்பர் மாதத்தில் சரிவைச் சந்தித்துள்ளது. 62 சதவீத சரிவுடன் 1,148 சியாஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக