Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 7




  சிவபெருமானின் உதயத்தை கண்ட தாட்சாயிணி தேவி அந்த கணத்தில் இருந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் மெய்யான மணமகளாக உண்மையான புன்முருவலுடன் காட்சியளித்தார். சிவனின் உதயத்தை சற்றும் எதிர்பார்க்காத அங்கு கூடி இருந்த அனைவரும் திகைப்புடன் இருந்தனர். ஏனெனில் யோகியான சிவபெருமான் சுயம்வரம் நிகழும் இடத்தில் கண்டதும் அனைவருக்கும் வியப்பே!

ஆனால், பிரஜாபதியான தட்சன் அழைப்பு இல்லாத வீட்டின் விழாவிற்கு வருகை தருவது என்பது அநாகரிகமான செயல் என்றும் அழைப்பு இல்லாதவர் எவ்வழியில் வந்தாரோ அவ்வழியே செல்வதே நல்லது என்றும் ஏளனத்துடன் கூறினார்.

பிரஜாபதியான தட்சனின் இந்த வாதத்தை சற்றும் எதிர்பார்க்காத சபையில் கூடியிருந்தோர் வியந்த அந்த கணத்தில் அங்கு தோன்றிய சிவபெருமான் எதையும் உறைக்காமல் அங்கு இருந்து மறைந்தார். பிரஜாபதியான தட்சன் சிவன் மறைந்ததை எண்ணி மகிழ்ந்த நேரத்தில் மணப்பெண் காணவில்லை என தோழிகள் அலறினர்.

தன் மகளை கவர்ந்து என் குலத்திற்கே இழிவை ஏற்படுத்தவே சிவபெருமான் இங்கு உதயமாகி உள்ளான் என்பதை அறிந்த தட்சன், பித்தனாகிய சிவபெருமானிற்கு சாபம் அளிக்கும் தருவாயில் அங்கு தேவர்கள் உதயமாகி தட்சனின் கோபத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

மூவுலக தேவர்களை கட்டுப்படுத்தும் வண்மை கொண்ட தட்சப் பிரஜாபதி அவர்களின் அறிவுரைகளை ஏற்க மறுத்தார். பின் தன் தந்தையான பிரம்ம தேவர் அங்கு உதயமானார். ஆனால், தன் தந்தையை மதிக்காமல் சிவனை அவமானப்படுத்தும் விதமாக தட்சப் பிரஜாபதி பேசி வந்தார்.

தாட்சாயிணி தேவியை கவர்ந்த சிவபெருமான் தான் வாழும் இடமான கைலாய மலைக்கு அழைத்து சென்றார். அங்கு சிவபெருமானுக்கும், தாட்சாயிணி தேவிக்கும் சிவபெருமானின் வாழ்விடத்தில் திருமணம் நடைபெற்றது. சிவனுக்கும், தாட்சாயிணி தேவிக்கும் திருமணம் நிகழும் அந்த கண்கொள்ளா காட்சியை பிரம்மாவும், விஷ்ணுவும் தன் மனைவிகளுடன் வந்து தரிசித்து சென்றனர்.

இவ்வேளையில் யாருடைய அறிவுரைகளாலும் சாந்தி அடையாத தட்சன் திருமாலை வணங்கி தன் மனக்குறையை கூறி வேண்டி கொண்டு இருந்தார். அங்கு திருமால் உதயமாகி தட்சப் பிரஜாபதிக்கு காட்சி அளித்தார். திருமாலை கண்ட தட்சன் எழுந்து பணிந்து நின்றார். பின் திருமால் உன் மனக்கவலையை யான் அறிவேன் என்று கூறினார்.

அதற்கு தட்சப் பிரஜாபதி அனைத்தையும் உணர்ந்த பரம்பொருளே அந்த பித்தான சிவபெருமான் என் மகளை கவர்ந்த போது நீங்கள் அங்கு தோன்றி உங்களின் பக்தனுக்கு ஏற்படும் துன்பத்தை தடுத்து இருக்கலாம் என்று கூறி திருமாலிடம் முறையிட்டார்.

காக்கும் கடவுளான திருமால் தாட்சாயிணியின் பிறப்பை பற்றி நீர் அறிவீர் என அறிவோம் என்று தட்சப் பிரஜாபதியிடம் கூறினார். உண்மையை அறிந்த நீர் அதை நடக்கா வண்ணம் இருக்க எவ்வளவு முயன்றாலும் அது முடியாது. பரம்பொருளான என்னாலும் உண்மைக்கு மாறாக எதுவும் செய்ய இயலாது.

உன் தந்தையான பிரம்ம தேவரின் அறிவுரைகளை ஏற்காமல் நீர் இழைத்த பிழையாலே இந்நிகழ்வானது அரங்கேறியது. ஆணவம் இன்றி உன் மகளான தாட்சாயிணி தேவியை சிவபெருமானுக்கு மணம் முடித்து கொடுத்து இருந்தால் இந்நிகழ்வானது அரங்கேறாமல் இருந்திருக்கும் என கூறினார்.

தான் அன்புடனும், பக்தியுடனும் வணங்கும் திருமாலிடமிருந்து உதிர்ந்த வார்த்தைகளால் எதையும் அவமோதித்து பேச இயலாமல் அமைதியாக நின்றார் பிரஜாபதியான தட்சன்.

தாட்சாயிணி தேவியை கொல்ல சென்ற அசுர வீரர்கள் தோல்வியுடன் வந்ததை கண்ட தாரகாசுரன் சினம் கொண்டு அவர்களை அழித்தான். தன்னுடைய அழிவு காலம் நெருங்கி விட்டது என்று அஞ்சி நின்றான். இதற்கு தீர்வு கூற தம் குருவான சுக்கிராச்சாரியாரை காண விரைந்தான் தாரகாசுரன்.

சிவபெருமானையும், தாட்சாயிணி தேவியையும் திருமண கோலத்தில் கண்டவர்கள் தம் பிறவி பலனை அடைந்ததாக எண்ணினார்கள். மூவுலகத்தில் உள்ள தேவர்கள் கைலாய மலையில் திருமண கோலத்தில் இருக்கும் சிவபெருமானை காண விரைந்தனர்.

திருமால் அருளிய அறிவுரைகளால் தான் செய்த பிழையை அறிந்தாலும் ஆணவத்தால் அதை உணர மறுத்தான் பிரஜாபதியான தட்சன். தவம் மேற்கொண்டு இருந்த தனது குருவான சுக்கிராச்சாரியாரை கண்டு பணிந்து நின்றான் தாரகாசுரன்.

தாரகாசுரனின் மனக்குழப்பத்தை அறிந்த சுக்கிராச்சாரியார் நீர் கொண்ட மனக்கவலையை அறிவேன் என்றும், நம் இனம் செழிப்புற வேண்டி இந்த தவநிலையை மேற்கொண்டு உள்ளேன் என்றும் தன் தவம் நிறைவேறும் வரை அமைதியுடன் இருக்குமாறு கூறி பின் மீண்டும் தன் தவத்தை மேற்கொண்டார்.

தனது குருவான சுக்கிராச்சாரியாரிடம் ஏதேனும் உபாயம் கிடைக்கும் என எதிர்பார்த்த தாரகாசுரனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இனியும் ஏதாவது செய்யவில்லை எனில் தன் அழிவு நிச்சயம் நேரிடும் என தாரகாசுரன் அஞ்சினான்.

நாட்கள் கடந்தோடின. தன் அன்பு மகளான தாட்சாயிணி தேவியின் பிரிவை தட்சன் உணர்ந்தார். செல்ல மகள் ஓடி விளையாடிய இடங்கள் மற்றும் தன்னுடன் உரையாடி கல்வி கற்ற இடங்கள் யாவும் தாட்சாயிணி பற்றிய நினைவுகளை தட்சனுக்கு அதிகப்படுத்தின.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!