Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 8



 தாட்சாயிணி தேவி தன் தந்தையின் சம்மதம் இல்லாமல் தன்னுடைய திருமணம் நிகழ்ந்ததால் தன் மீது தந்தை மிகுந்த கோபத்தில் இருப்பார் என்றும், தன்னை காண வர மாட்டார் என்றும் எண்ணினார். தான் விரும்பிய வாழ்க்கை அமைந்தாலும் தன் பெற்றோர்களின் ஆசிர்வாதம் இன்றி தன் திருமணம் நிகழ்ந்ததை எண்ணி மனம் வருந்தினார்.

தன் மனைவியான தாட்சாயிணியின் மனவருத்தத்தை அறிந்த சிவபெருமான் தேவியின் மனம் மீண்டும் வருத்தப்படாதவாறு நடந்துக்கொண்டார். அமைதியாக இருந்த கைலாய மலையில் பாடல்கள் பாடிய வண்ணம் இருந்தன.

எம்பெருமானின் இச்செய்கையால் தான் மனதில் அடைந்த கவலையை முழுவதும் மறக்க முடியாத பட்சத்திலும் தான் விருப்பப்பட்டு மணமுடித்த கணவர் முன்னிலையில் மகிழ்வாக இருப்பதாக புன்முறுவலுடன் காட்சியளித்தார் தாட்சாயிணி தேவி.

புன்முறுவலுடன் காட்சியளித்த தேவியை கண்ட எம்பெருமானான சிவபெருமான் தேவியே இனி நாம் சம்பந்தப்பட்ட முடிவுகள் எதுவாயினும் சரியோ, தவறோ அதை நீரே முடிவு செய்வாயாக எனக் கூறினார்.

சிவனின் அன்பு மிகுதியால் கூறிய இவ்வார்த்தைகளை கேட்டு அதிர்ச்சியுற்ற தாட்சாயிணி தேவி இது உசித்தம் அல்ல என்றும் என்னால் சரியான முடிவுகள் எடுக்க முடியாத பட்சத்தில் பிழைகள் ஏதோ உருவாகக்கூடும் என அஞ்சினார்.

சிவபெருமானோ என்னில் பாதியான நீர் சரியான முடிவை மட்டுமே எடுக்கக்கூடும் என்றும், ஒரு வேளை அதன் பொருட்டு ஏதேனும் விளைவுகள் உண்டாகுமானால் அதை நான் சரிசெய்வேன் என்றும் கூறினார்.

ஆனால், இனிவரும் காலங்களில் என் பொருட்டு முடிவுகளை நீரே எடுக்க வேண்டும் என்று திடமாக கூறினார். சிவபெருமானின் வார்த்தைகளை மீறி எதையும் கூற இயலாத நிலையில் என் பொருட்டு என் கணவரான நீங்கள் எவ்வித சங்கடங்களையும் அனுபவிக்க நேராமல் நான் காப்பேன் என்றும், எனினும் ஏதேனும் பிழைகள் உண்டாயின் அதற்கான முழு பொறுப்பும் என்னையே சாரும் என்றும் தாட்சாயிணி தேவி வாக்குறுதி அளித்தார்.

தாரகாசுரன் ஒன்றிணைந்த சிவபெருமானையும், தாட்சாயிணி தேவியையும் பிரிக்க ஏதேனும் வழியுண்டா என சிந்தனையில் ஆழ்ந்தான். ஏனெனில் தாட்சாயிணி தேவி இருப்பது எம்பெருமான் வாழும் இடத்தில். அவ்விடத்திற்கு அவரின் அனுமதியின்றி சென்றால் கண்டிப்பாக தோல்வியே உண்டாகும் என்பதை நன்கு உணர்ந்ததால் இந்த முறை செயல்படுத்தும் திட்டத்தில் எவ்வித தோல்வியும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என எண்ணினான்.

தாட்சாயிணியின் பிரிவை தாங்க முடியாமல் கைலாயத்தில் உள்ள தன் மகளை பிரஜாபதியான தட்சன் காண சென்றார். தன் மகள் மீது கொண்ட அன்பால் செருக்கினை மறந்தார். ஆனால், பரம்பொருளான சிவபெருமான் என் மருமகன் என ஆணவம் உண்டாற்று. இனி எம்பெருமானும் என் பேச்சை கேட்பார் என எண்ணினார்.

தன் தந்தை கைலாய மலைக்கு வரப்போகிறார் என்பதை அறிந்த தாட்சாயிணி தேவி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தன் தந்தையின் வருகையை அறிந்து அவரின் விருப்பம் போல் கைலாய மலையில் தன் கணவனான எம்பெருமானின் ஆதரவால் சில மாற்றங்களை செய்தார்.

தந்தையின் வருகையால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த தாட்சாயிணி தேவி தந்தையின் காலில் விழுந்து பணிந்து ஆசிர்வாதம் பெற்றார். ஆனால் எம்பெருமானான சிவபெருமான், அவர் அமர்ந்த இருக்கையில் இருந்து எழாமல் இருக்கும் இடத்தில் இருந்தே அவரின் வருகையை வரவேற்றார்.

இதனைக் கண்ட பிரஜாபதியான தட்சன் மிகுந்த சினம் கொண்டார். ஆனால், அதை வெளிக்காட்டாமல் அவரின் மனதிலே வைத்திருந்தார். நீண்ட நாட்கள் கழித்து தன் மகளை கண்டதால் அவள் செய்த தவறினை மறந்து ஏற்றுக்கொண்டார். பின் தன் மருமகனான எம்பெருமானிடம் தனக்கு ஒரு உபாயம் செய்ய வேண்டி பிரஜாபதியான தட்சன் சிவனிடம் நின்றார். என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் என எம்பெருமான் வினவினார்.

அதற்கு பிரஜாபதியான தட்சன் என் மகளின் பிரிவை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. எனவே என் மகளும் என் மருமகனான நீங்களும் என் இல்லத்திலே தங்கவேண்டும் என வேண்டினார்.

இதைக் கேட்டதும் அவருடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உலகிற்கு பரம்பொருளான சிவனை தன் இல்ல மருமகனாக அழைத்தது நன்றன்று என அங்கு தட்சனுடன் வந்த அனைவரும் எண்ணினார்கள்.

தன் தந்தை தன் மருமகனிடம் இவ்விதம் கேட்டதைப் பார்த்து தாட்சாயிணி தேவி அதிர்ந்தார். மேலும் தன் கணவர் இவருக்கு எவ்விதம் பதில் உரைப்பார் என்றும், அந்த பதிலால் தான் சினம் கொள்ளாமல் அமைதி காக்க வேண்டும் எனவும் தாட்சாயிணி தேவி எண்ணினாள்.

பிரஜாபதியான தட்சன் கேட்டதில் எவ்விதமான சினமுமின்றி அமைதியுடன் பிரஜாபதியே! தாங்கள் வேண்டிய கேள்விக்கான பதிலை என் மனைவியான தாட்சாயிணி தேவி கூறுவார் என்று சிவபெருமான் கூறினார். இனி தன் மனைவி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் நான் மனப்பூர்வமாக சம்மதிப்பேன் என்று கூறினார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!