Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 4 ஜனவரி, 2020

பால்-க்கு ஏற்பட்ட வருத்தம்!

 Image result for பால்
பால்-க்கு ஒரு பெரிய வருத்தம். பசுவின் வயிற்றில் நான் இருந்தேன். என்னை ஒருவர் கறந்து பாத்திரத்தில் ஊற்றுவார்கள். அடுப்பைப் பற்றவைத்து, அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்குவார்கள்.

என்னால் அந்த சூட்டை தாங்கமுடியாமல் துடித்துப்போவேன். பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை? என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கி வைப்பார்கள். பிறகு நான் ஆறியதும், மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்ப்பார்கள். இது என்னடா புது தண்டனை? என்று வருத்தப்பட்டேன். அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். பிறகு திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.

அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி, மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். நான் மறுபடி மோர் என்ற திரவமானேன். என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். பட்டர் என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை பெட்டர் ஆகுமா? என்று ஏங்கினேன். அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்? அந்த வெண்ணெய்யை, மறுபடியும் அடுப்பில் வைத்து உருக்கினார்கள்.

எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள். உருக்கிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி, வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள். பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், ஜன்னலுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித்தேன்.

ஒருவர் உங்க ஊர்ல பால் என்ன விலை? என்று கேட்டார். அதற்கு அடுத்தவர், அரை லிட்டர் ஆறு ரூபாய் என்றார். உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் பதினாறு ரூபாய் சொல்றார்! என்றாள்.

ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் ஆறு ரூபாய் தான், ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு பதினாறு ரூபாயாகக் கூடிவிட்டதே! இதை நினைக்கிறபோது, நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை! என்று ஆனந்தம் அடைந்தேன்.

நீதி :

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தையும், மதிப்பையும் உயர்த்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!