Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 31 ஜனவரி, 2020

நீங்கள் வைத்த சாதத்தை காகம் சாப்பிடவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்?






காகத்திற்கு சாப்பாடு வைக்கும் பழக்கம் நம்முடைய வீட்டில் தாத்தா, பாட்டிக்கோ, வீட்டில் உள்ள பெரியவர்களுக்கோ அல்லது நமக்கோ கூட இருக்கலாம். சிலரையெல்லாம் பார்த்திருப்போம் காக்கைக்கு உணவு வைக்காமல் சாப்பிடவே மாட்டார்கள். சிலரோ குறிப்பிட்ட தினங்களில் மட்டும் வைப்பார்கள்.அப்படி வைக்கிற சாதத்தை காக்கை சாப்பிடாமல் போய்விட்டதென்றால் அதற்கு என்ன அர்த்தம் என்று இங்கே பார்க்கலாம்.
காக்கைக்கு உணவு
காக்கைக்கு சிலர் சனிக்கிழமை தோறும் கட்டாயம் சாப்பாடு வைத்து விட்டு சாப்பிடுவார்கள். சிலர் தினமும் வைப்பார்கள். சிலருக்குச் சாதாரணமாகவே காக்கைக்கு சாப்பாடு வைத்து விட்டு சாப்பிடும் பழக்கம் இருக்கும். சிலர் பரிகாரங்களுக்காகவும் முன்னோர்களான பித்ருக்களுக்காகவும் சாப்பாடு வைக்கும் பழக்கம் உண்டு.
வராத காகம்
பொதுவாக காகத்திற்கு சாதம் வைத்தவுடன் கா கா என்று நாம் அவற்றைக் கத்திக் கூப்பிட்டால், தங்கள் கூட்டத்துடன் வந்து சாப்பிட ஆரம்பிக்கும். சில சமயம் முன்னோர்கள் என்று சொல்லப்படுகின்ற தினசரி வீட்டில் வந்து உணவுக்காக காத்திருக்கும் காகம் வந்து சாப்பிடும். ஆனால் இதுவே சில சமயங்களில் சாப்பாடு வைத்துவிட்டு எவ்வளவு தான் சத்தமாகக் கத்திக் கூப்பிட்டாலும் காகம் வருவதில்லை. அதுவே சில சமயங்களில் வருகின்ற காகம் வழக்கம் போல சாப்பாட்டை சாப்பிடாமல் நிற்கும். அல்லது திரும்பிப் போகும். அப்படி நீங்கள் உங்களுடைய பித்ருக்களாக நினைக்கும் காகம் நீங்கள் வைக்கும் உணவை சாப்பிடாமல் இருந்தால் அதற்கு என்ன தான் அர்த்தம்?
குழப்ப மனநிலை
சாதாரணமாக சாப்பாடு வைக்கும் பழக்கம் இருக்கின்றவர்கள் காகம் சாப்பிடாமல் போவதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அதற்குப் பிடிக்கவில்லை போல என்று கடந்து விடுவார்கள். இதுவே பரிகாரத்திற்காகவோ அல்லது பித்ருக்களான முன்னோர்களுக்காகவோ உணவை வைப்பவர்கள் அது சாப்பிடாமல் போனால், ஒரு நிமிடம் அப்படியே மனம் பெரும் குழப்பத்திற்குள் போய் விடும். எதனால் சாப்பிடாமல் போகிறது என்ற குழப்பமும் ஏதேனும் நாம் தவறு செய்து விட்டோமோ என்ற பயமும் தொற்றிக் கொள்ளும். அப்படி செல்லும்போது என்ன பரிகாரம் செய்தால் காகம் மீண்டும் வந்து சாப்பிடும்?
பித்ருக்களின் கோபம்
பித்ருக்களாக நீங்கள் நினைக்கும் காகம் நீங்கள் வைக்கும் உண்வை எடுக்காமல் போகிறது என்றால், உங்களுடைய முன்னோர்கள் உங்கள் மீது அதிக கோபத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அதாவது நீங்கள் வழக்கமாக முறையாக உங்களுடைய பித்ருக்களுக்குத் திதி கொடுக்கிறீர்களா என்று யோசித்துப் பாருங்கள். அதனால் கூட, உங்கள் மீது கோபமாக இருக்கலாம்.
திதியின் முக்கியத்துவம்
உங்கள் வீட்டில் இறந்து போன முன்னோர்களான பித்ருக்களுக்கு திதி கொடுப்பது என்பது மிக முக்கியம். சிலருக்கு முன்னோர்களின் இறந்த தேதி தெரியாமல் இருக்கும். அதனால் கூட, சிலர் திதி கொடுக்காமலே இருப்பார்கள். இறந்த தேதி மறந்து போனால் கூட பரவாயில்லை. புரட்டாசி, தை, ஆடி அமாவாசை ஆகிய இந்த மூன்று அமாவாசை நாட்களில் பித்ருக்களை நினைத்து வழிபட்டு, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய திதியைக் கொடுக்கலாம். அப்படி நீங்கள் திதி கொடுக்கத் தவறினால் கூட காகம் வந்து நீங்கள் வைக்கும் சாதத்தை எடுக்காது.
குலதெய்வம்
நம்மில் நிறைய பேருக்கு அவரவர்களுடைய குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் இருக்கிறது. நீங்கள் செய்யும் எல்லா பாவங்களையும் விட, குலதெய்வங்களை மறக்கும் பாவம் மிகவும் கொடியது. அதை ஒருபோதும் உங்கள் குலதெய்வமும் உங்களை மன்னிக்காது. மற்ற தெய்வங்களும் மன்னிக்கப் போவதில்லை. அதற்கு முதலில் பரிகாரம் செய்யுங்கள். உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு போய்வாருங்கள். தொடர்ந்து 11 நாட்களுக்கு நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி, இதுவரை உன்னை வந்து பார்க்காமல் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்து விடு என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
இந்த பரிகாரங்களையெல்லாம் முறையாக செய்து முடித்து விட்டு வந்து பித்ருக்களான காகங்களுக்கு சாதம் வைத்துப் பாருங்கள். உடனே வந்து சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!