Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

சிவபுராணம்..!பகுதி 117

வேந்தர் இருக்கும் அரண்மனைக்கு சென்று வேந்தரை வணங்கி அந்தப்புரத்தில் நிகழும் மாற்றங்களையும், தேவியின் நடவடிக்கையில் காணப்பட்ட சிறு மாற்றங்களையும், எவரும் அறியாவண்ணம் நமது தேவியர் குடியிருக்கும் அந்தப்புரத்தில் ஒரு ஆடவன் வந்து சென்று கொண்டிருப்பதையும் அச்சம் கொண்ட வார்த்தைகளால் சிரம் தாழ்ந்து எடுத்துரைத்தனர்.

தனது மகள் இருக்கும் அந்தப்புரத்தில் எவரும் அறியாமல் ஒரு ஆடவன் வந்து செல்கின்றானா? இதைச் சொல்லவா நீங்கள் அங்கு காவல் காத்து கொண்டிருக்கிறீர்கள்? இக்கணமே அவனைப் பிடித்து இரும்பு சங்கிலியால் விலங்கிட்டு என் முன் இழுத்து வாருங்கள் என்று மிகுந்த சினத்துடன் ஆணையிட்டார் அசுரர்களின் வேந்தனான பாணாசுரன்.

மன்னனின் கட்டளைக்கிணங்கி காவல் வீரர்கள் அனைவரும் அநிருத்தனைக் கைது செய்வதற்காக அந்தப்புரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். இச்செய்தியை அந்தப்புரத்தில் உள்ள மற்ற தேவிகள் மூலம் அறிந்த உஷை, தன் காதலனிடம் சென்று தங்களை கைது செய்வதற்காக வீரர்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, நீங்கள் இக்கணமே புறப்படுங்கள் என்று கூறினாள்.

ஆனால், அநிருத்தனோ எதற்கும் கவலைக்கொள்ள வேண்டாம். நான் அவர்கள் அனைவரையும் பார்த்துக் கொள்கின்றேன் என்று கூறி தன் காதலியை தைரியப்படுத்தினார். பின்பு வீரர்களின் வருகைக்காக அந்தப்புரத்தின் வாயிற்கதவுகளை நோக்கி புன்னகையுடன் காத்துக்கொண்டிருந்தார்.

வீரர்கள் அனைவரும் அந்தப்புரத்தில் நுழைந்து அநிருத்தன் இருக்கும் இடத்தை அடைந்தனர். பின்பு காவல் வீரர்களின் தலைவன், அநிருத்தனை கண்டு இச்சங்கிலியை அணிந்து தங்களுடன் வருமாறு கட்டளையிட்டான். இல்லாவிடில் உன்னை தாக்கி அடித்து இழுத்து இச்சங்கிலியை அணிவித்து எங்களின் வேந்தன் முன்னிலையில் நிற்க வைப்பேன். எது உன் விருப்பம்? என முடிவெடுத்துக்கொள் என்று ஆணவத்துடன் கூறினான்.

அநிருத்தன், காவல் வீரர்களுடைய தலைவனின் பேச்சுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், தங்களால் முடியும் எனில் என்னை வென்று நீங்கள் கொண்டு வந்த இச்சங்கிலியால் என்னை பூட்டி உங்களுடைய வேந்தர்களிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார்.

அநிருத்தனின் இந்த பேச்சானது அங்கிருந்த காவல் வீரர்களின் தலைவனுக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. எனவே, வீரர்களை தாக்க ஆணையிட்டான் காவல் வீரர்களின் தலைவன். பின்பு, வீரர்கள் அனைவரும் அநிருத்தனை ஆவேசமாக தாக்கத் தொடங்கினர். அவர்களின் தாக்குதலை தைரியத்துடனும், அதேசமயம் விவேகத்துடனும் செயல்பட்டு தன்னை கைது செய்ய வந்த அனைத்து வீரர்களையும் தோற்கடித்து புறமுதுகுக்காட்டி ஓட வைத்தார் அநிருத்தன்.

வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்தும் அநிருத்தனை கைது செய்ய இயலவில்லை. உயிர் பிழைத்த சில வீரர்கள் மந்திரியான குபாண்டனிடம் சென்று அந்தப்புரத்தில் உள்ள அநிருத்தன் மிகுந்த பராக்கிரமம் கொண்டவர் என எடுத்துரைத்து எங்களால் அநிருத்தனை வெல்ல இயலவில்லை என்று கூறினார்கள்.

மிகவும் அமைதியுடன் இருந்த மந்திரி இவர்களின் பேச்சுகளால் சிறிதுநேரத்தில் மிகுந்த சினம் கொண்டு அற்பமான ஒரு மானிட பிறவியிடம் தோற்றுவிட்டு இங்கு உரைக்க வந்தீரோ? என்று சினத்துடன் கூறினார். பின்பு, வீரர்களிடம் நீங்கள் என்ன செய்வீரோ?... ஏது செய்வீரோ?... எனக்கு தெரியாது. ஆனால், அவனை எவ்விதத்திலாவது கைது செய்து வர வேண்டும்.

உங்களின் தேவைக்கேற்ப வீரர்களையும், ஆயுதங்களையும் எடுத்துச்சென்று அவனை உயிருடன் கைது செய்து வர வேண்டும். இல்லையேல் உயிருடன் யாரும் இருக்க இயலாது என்று மந்திரியான குபாண்டன் உத்தரவிட்டார்.

உடனே அங்கு அதிக அளவிலான அசுர வீரர்கள் தோன்றினர். பின்பு, அவர்களுக்கு தேவையான ஆயுதங்கள் வழங்கப்பட்டன. ஆயுதங்களை ஏந்திய வீரர்கள் அனைவரும் அநிருத்தன் இருக்கும் இடத்தை நோக்கி செல்லத் தொடங்கினர். இம்முறை அவனை கைது செய்தே ஆக வேண்டும், இல்லாவிடில் தங்களது உயிருக்கு ஆபத்து நேரிடும் என அறிந்த ஒவ்வொரு வீரனும் மிகுந்த வெறியுடன் அங்கு சென்று கொண்டிருந்தார்கள்.

குபாண்டனின் உத்தரவை அறியாத அநிருத்தன் தனது காதலியுடன் மகிழ்ச்சியாக இருந்தார். பின்பு, சில தேவிகளின் உதவிகளுடன் அரண்மனையில் நிகழ்ந்த உரையாடல்களை அறிந்து கொண்டாள் உஷை. அதாவது முன்பு வந்த வீரர்களின் எண்ணிக்கையை விட இம்முறை வரும் வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது என்பதையும், அதே சமயம் உயிரைப் போக்கும் கொடூரமான ஆயுதங்களை கரங்களில் ஏந்தி இங்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்பதையும் அறிந்து கொண்டாள் அரசகுமாரியான உஷை.

பின்னர், தன் நாயகனிடம் இம்முறையாவது எனது கூற்றுகளை கேளுங்கள் என்று மனதில் பதற்றத்துடன், அதே சமயம் நீர் கசிந்த விழிகளுடன் கூறினாள். அதாவது தாங்கள் இனி இங்கு இருப்பது என்பது உசிதம் அல்ல என்றும், தாங்கள் செல்வது உத்தமம் ஆகும் என்றும், மனதில் தன் நாயகனை காக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், பயத்துடனும் கூறினாள்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக