Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 73

  கைலாயத்தில் எம்பெருமானுடன் இருந்த அன்னை பார்வதி தேவி தேவர்களின் இடர்பாடுகளை நீக்கி அவர்களை காத்தருள வேண்டும் என்று கூறினார். ஆனால், எம்பெருமானோ எவ்விதமான பதிலும் கூறாமல் அமைதி காத்தார்.

இவை யாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த கணபதியும், கந்தனும் தன் தந்தையிடம் பணிந்து ஏன்? இவ்விதம் அமைதி கொண்டுள்ளீர்கள் என கேட்டனர்.

எம்பெருமானோ அனைத்திற்கும் காலம் உள்ளது. ஏனென்றால் தேவர்களுக்கு இன்னல்களை உண்டாக்கி மானிடர்களை காரணமின்றி அழித்து வரும் அந்த திரிபுரத்தை ஆளும் வேந்தர்கள் சிறந்த பக்தர்கள் ஆவார்கள்.

நான் அமைதி கொள்ள காரணமும் இதுவே. ஒருவர் செய்யும் பாவங்களை கொண்டு மட்டும் அவர்களை அழித்தல் என்பது சரியானதொரு தீர்வாக அமையாது. அவர்கள் செய்த நற்பலன்கள் மற்றும் தீய பலன்கள் ஆகியவற்றை உணர்ந்து அதற்கு தகுந்தாற்போல் நாம் வாய்ப்புகளை அளிக்க வேண்டும்.

திருமாலால் தோற்றுவிக்கப்பட்ட மாய புருஷர்களின் வலைகளில் விழுந்த அவர்கள் மீண்டு தன் பழைய பயணத்தை தொடர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மேலும், அவர்கள் என் மீது கொண்ட பக்தியால் அவர்கள் செய்த புண்ணியங்களே அவர்களை இதுவரையும் காத்துக்கொண்டு வருகின்றது.

அவர்கள் செய்யும் பாவங்கள் அவர்களால் செய்யப்பட்ட புண்ணியத்தை விட அதிகரிக்கும்போது அவர்களின் அழிவானது ஆரம்பமாகும் என்று கூறினார். அப்படியானால் அசுரர்களின் அழிவு காலம் இன்னும் உருவாகவில்லையா தந்தையே? என்று கணபதி எம்பெருமானிடம் வினவினார்.

கணபதியின் வினாவிற்கு எம்பெருமான் காலம் அனைத்திற்கும் பதில் உரைக்கும். அதுவரை நாம் அமைதி கொள்ள வேண்டும் என்று கூறினார். மாய வித்தகர்கள் விதைத்து விதையான அதர்மம் அசுரர்களை தர்மத்தின் வழி நடக்கவிடாமல், அவர்கள் செய்து வந்த புண்ணியத்தின் பலன்கள் யாவற்றையும் அழித்தது.

மென்மேலும், அவர்கள் புரிந்து வந்த பாவச் செயல்கள் அவர்களை முழுமையாக அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் சென்றது.

விதையான அதர்மம் காலத்தின் ஓட்டத்தால் விருட்சகமாக வளர்ந்தது. மேலும், திரிபுர வேந்தர்களின் அரசாட்சியில் தர்மம் என்பது அழிந்து அதர்ம செயல்கள் வெளிப்பட்டன. இவர்கள் பெற்ற வரமானது அறமற்ற செயல்களால் அழிவுக்கு இட்டுச் சென்றது.

மறுபக்கமோ இவர்களால் பல இன்னல்களுக்கு ஆளான தேவர்கள் எம்பெருமானை நோக்கி செய்த தவமானது பூர்த்தியடையும் காலமும் உதயமானது. திருமாலும், தேவர்களும் எம்பெருமானை எண்ணி செய்த தவத்தால் அகம் மகிழ்ந்த சர்வேஸ்வரன் திருமாலுக்கும், தேவர்களுக்கும் காட்சி அளித்தார்.

சிவபெருமானை காண பல கோடி ஆண்டுகள் தவமிருந்து தவத்தின் பயனாக காட்சியளித்த எம்பெருமானின் திருவுருவத்தை கண்ட தேவர்கள் பணிந்து வணங்கினார்கள். பின்பு, அவர்களை நோக்கி என்னை எண்ணி தவம் மேற்கொள்ள என்ன காரணம் என்று அனைத்தும் அறிந்த எம்பெருமான் வினவினார்.

தங்களை எண்ணியவரின் சங்கடங்களை அறிந்து, அதை களையக்கூடியவரான சர்வேஸ்வரா! அனைவரிடத்திலும் குடி கொண்டுள்ள பரம்பொருளான தங்களை, வழிபடுபவர்கள் அடைந்த இன்னல்களை போக்கும் கருணைக் கடலே, இந்த பிரபஞ்சத்தின் ஆதியும், அந்தமுமாக இருக்கும் ஜகத்குருவே தாரகாசுரனின் புதல்வர்களான அசுரர்கள் மூவரும் அவர்களின் தவத்தின் பயனாக எங்கும் தன் விருப்பப்படி பறந்து செல்லும் திரிபுரங்களை கொண்டு தேவர்களுக்கும், பூமியில் வாழும் உயிரினங்களுக்கும் செய்யும் இன்னல்கள் என்பது மிகவும் அதிகமாக உள்ளது பிரபுவே.

அவர்கள் இழைத்த இச்செயலினால் உயிர் மீது கொண்ட அச்சத்தினால் பூமியில் வாழும் உயிர்கள் யாவும் தங்களின் கர்மாக்களை சரிவர செய்ய இயலாமல் இருக்கின்றனர்.

அதனால் எங்களின் பலமானது வலிமை இழந்து கொண்டே வருகிறது. ஆனால், திரிபுர அசுரர்களை எளிதில் அழிக்க இயலாதவாறு வரங்களை கேட்டுப் பெற்றுள்ளனர். அதனால் அவர்களை அழிப்பது என்பது எங்களால் செய்ய இயலவில்லை என்று கூறி திரிபுர அசுரர்களை அழித்து எங்களை காக்க வேண்டும் என்று கூறினார்கள்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக