Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 22 பிப்ரவரி, 2020

துவாரகை செல்லும் அர்ஜூனன்...!

 ர்ஜூனன் பிராமணன் வேடமணிந்து, காஞ்சிபுரம், திருப்பதி என பல கோவில்களுக்கு யாத்திரை சென்றான். கடைசியில் மதுரைக்கு சென்றான். அங்கு மதுரை மன்னன் அர்ஜூனனை சில காலம் தன்னுடன் தங்க வைத்தார். ஒரு மாலை பொழுதில் அர்ஜூனன் தோட்டத்திற்கு சென்றான். அங்கு மன்னனின் மகள் தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அர்ஜூனன் அவளைக் கண்டதும் அவளின் அழகில் மயங்கினான். அதன்பிறகு தான் அர்ஜூனனுக்கு அப்பெண் மன்னனின் மகள் சித்திராங்கதை என்பதை தெரிந்துக் கொண்டான். அவள் மேல் அர்ஜூனன் காதல் கொண்டான். சிறிது நேரம் அங்கேயே நின்று இளவரசியை பார்த்துக் கொண்டிருந்தான்.
 அதன்பின் அர்ஜூனன் தன் பிராமண வேடத்தை கலைத்து ஒரு ஆணழகன் போல் அவள் முன் நின்றான். அவனை பார்த்த இளவரசி சிறிதும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அர்ஜூனனின் அழகில் மயங்கி இளவரசி அர்ஜூனன் மேல் காதல் கொண்டாள். அதன்பின் இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்துக் கொண்டனர். இச்செய்தி மதுரை மன்னனுக்கு தெரிய வந்தது. பிராமண வேடத்தில் வந்தது அர்ஜூனன் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தான். தன் மகள் சரியான கணவரைத் தான் தேர்ந்தெடுத்து இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பிறகு தனது மகளுக்கும், அர்ஜூனனுக்கும் முறைப்படி திருமணம் செய்து வைத்தார்.

 அதன்பிறகு மதுரை மன்னன் அர்ஜூனனிடம், அர்ஜூனரே! எங்கள் முன்னோர்களின் தவத்தின் பயனாய், அவர்களுக்கு பின் பிறந்த ஆண் வாரிசுகள் அனைவரும் சிறப்பாக ஆட்சி செய்தனர். ஆனால் என் தலைமுறையில் எனக்கு பிறந்தவள் இளவரசி சித்திராங்கதை தான். அதனால் அவள் பெற்றெடுக்கும் குழந்தை மதுரையை ஆள வேண்டும். அந்த குழந்தையை தாங்கள் உரிமைக் கொள்ள கூடாது. அக்குழந்தையும் இந்திரப்பிரஸ்தத்துக்கு வரமாட்டான். அதனால் இதற்கு நீங்கள் சம்மதம் தர வேண்டும் என வேண்டினான். அர்ஜூனனும் இதை மகிழ்ச்சியுடன் ஏற்று சம்மதம் தெரிவித்தான். சில மாதங்கள் கழித்து அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

 அக்குழந்தைக்கு பப்புருவாகனன் எனப் பெயர் சூட்டினர். அதன்பிறகு அக்குழந்தையை சித்திராங்கதையிடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து விடைப்பெற்றான். அங்கிருந்து சென்ற அர்ஜூனன் புனித தலங்களில் நீராடி பாவங்களை கழித்தான். அங்கிருந்து கன்னியாகுமரி சென்று புனித தலங்களில் நீராடி வடதிசை நோக்கிச் சென்றான். அர்ஜூனன் வடதிசை நோக்கி பயணம் செய்து துவாரகையை அடைந்தான். அங்கு கண்ணனின் இருப்பிடத்திற்கு சென்றான். கண்ணனின் தாய் தேவகி, கண்ணனின் அண்ணன் பலராமன் மற்றும் கண்ணனிடம் ஆசிப்பெற்று அங்கேயே தங்கினான். அங்கு கண்ணனின் சகோதரி சுபத்ரா அர்ஜூனனை கண்டு காதல் கொண்டாள்.

 அர்ஜூனனும் சுபத்ரா மேல் காதல் கொண்டான். கண்ணனும் தன் சகோதரி சுபத்ராவை அர்ஜூனனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். ஆனால் பலராமன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பலராமன் யதுகுலத்தை சேர்ந்தவருக்கே திருமணம் செய்து வைக்க விரும்பினார். சுபத்ரா தேரை செலுத்துவதில் அவளுக்கு நிகர் அவளே. கண்ணன் அர்ஜூனனிடம், அர்ஜூனா நீ என் சகோதரியை திருமணம் செய்துக் கொள்வதில் எனக்கு முற்றிலும் சம்மதம். அதனால் நீ சன்னியாசி வேடம் அணிந்து அந்தபுரத்தில் தங்குமாறு கூறினார். அர்ஜூனன் சன்னியாசி வேடம் அணிந்து வந்தததை பார்த்து இவன் சன்னியாசி தானே என நினைத்து அந்தபுரத்தில் தங்க சம்மதம் தெரிவித்தார் பலராமர்.

 பலராமர், சுபத்ராவிடம் வந்திருக்கும் சன்னியாசிக்கு தகுந்த உபசரிப்பை அளிக்குமாறு கூறினான். ஆனால் சுபத்ரா வந்திருப்பது அர்ஜூனன் என்பதை பார்த்தவுடன் அறிந்து கொண்டாள். பிறகு சுபத்ரா அர்ஜூனனுக்கு தேவையான உபசரிப்பை செய்தாள். கண்ணன் அர்ஜூனை பார்த்து பார்த்திபா! நீ என் சகோதரி சுபத்ராவை இங்கிருந்து கடத்தி சென்று திருமணம் செய்துக் கொள். சுபத்ராவுக்கு நன்கு தேரோட்ட தெரியும். அதனால் அவள் தேரோட்டட்டும், நீ உன்னை எதிர்க்கும் வீரர்களை எதிர்த்து போரிடுவாயாக என்றார். அர்ஜூனனும் கண்ணன் கூறியது போலவே சுபத்ராவை கடத்திச் சென்றான். இதை அறிந்து யது குலத்தவர்கள் அர்ஜுனனிடம் போரிட ஆயத்தமாயினர்.

பலராமர் கண்ணனிடம், அர்ஜுனனின் இந்த செய்கையினால் யாதவ குலத்தினர் பெரும் அவமானத்தை சந்தித்துள்ளனர். இப்பொழுது யாதவர்கள் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கேட்கிறார். கண்ணன், நீங்கள் குறிப்பிடுவது போல அர்ஜுனன் நமது குலத்திற்கு இழிவையோ அல்லது அவமானத்தையோ ஏற்படுத்தவிலை. மாறாக நமது குலப் பெருமையை உயர்த்தி இருக்கிறான். அர்ஜுனன் சுபத்திரையை வெல்வதற்கான அனைத்து வழிகளையும் ஆராய்ந்து பார்த்த பின்பு முடிவாகத்தான் இந்த முறையை மேற்கொண்டுள்ளான். எனவே இந்த திருமணம் நமது இரண்டு குலத்திற்கும் ஏற்புடையது என்றே நான் கருதுகிறேன். இது அர்ஜுனனுக்கு கிடைத்த வெற்றி இல்லை. சுபத்திரைக்குக் கிடைத்த வெற்றி. ஏன் என்றால் சுபத்திரையைக் கவர்ந்து சென்றவன் உயர் குலத்தை சேர்ந்தவன். சிறந்த கல்விமான், மிகவும் புத்திசாலி என்றார்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக