Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 13 பிப்ரவரி, 2020

வெற்றிக்குக் காரணம்!

Image result for வெற்றி


திருவல்லம் என்ற ஊரில் முத்துநகரம் என்ற ஒரு சிறிய நகரம் இருந்தது. அந்த நகரத்திற்கு என்று ஒரு சட்டம் வகுத்திருந்தனர். அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு மன்னராக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டு விடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால், உடனே வனவிலங்குகள் கொன்றுவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவர் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவர்கள். எனவே, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவர்களுக்கு ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே! என்று பதவி ஏற்பார்கள். அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மரணத்திற்கு அஞ்சி, மாரடைப்பால் மரணமடைந்தார்கள்.

இதுபோல் ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவரை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது. மன்னர் சிறப்பான ஆடைகளையும், நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி மக்கள் முன் நின்றார்.

மன்னர், தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன், மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்! என்று கட்டளையிட்டார். சிம்மாசனம் வந்ததும், சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கடந்து மறுகரையை நோக்கிப் பயணித்தது.

மன்னர் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்த படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல், மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா? என்று கேட்டான். தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்! என்றார் மன்னர். அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா? தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை! பின்பு எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது? என்று படகோட்டி கேட்டான்.

அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன், அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்! இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியவகைகள் பயிராகியுள்ளன. மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டிடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, சாலைகள் எல்லாம் இருக்கும். நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்கு செல்லவில்லை என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! என்று மன்னன் கூறியதும் படகோட்டி வியப்பில் ஆழ்ந்தான். மன்னனின் வெற்றிக்குக் காரணம் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும், அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது, அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது தான்.

தத்துவம் :

எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பு, ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை மேன்மையாக அமையும். நாம் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின்பு அதை செயல்முறைபடுத்தினால் வெற்றி கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!