Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

அங்க நாட்டின் மன்னனாகும் கர்ணன்...!

ர்ணன், அர்ஜூனனைப் பார்த்து, அர்ஜூனா! நாம் இருவரும் நேருக்கு நேர் நின்று போட்டியிடுவோம். இப்போட்டியில் யார் வெற்றி பெறுவது நானா? அல்லது நீயா என்று பார்ப்போம் என்று கூறினான். கர்ணா! நீயே போட்டியில் வெல்வாய் என்றும், உன்னை வெல்லக்கூடிய வல்லமைப் படைத்தவர்கள் ஒருவருமில்லை என்றும் துரியோதனன் கூறி, கர்ணனை அணைத்துக் கொண்டான். அதற்கு அர்ஜூனன், என்னோடு போட்டியிடுவதற்கு நீ தகுதியில்லாதவன் என்றான். அதற்கு கர்ணன், நான் இப்போட்டியில் உன்னை வீழ்த்தி வெற்றி பெறுவேன் என்றான்.

அப்போது துரோணர், கர்ணா! நீ அரச குலத்தில் பிறந்தவன் அல்ல. நீ ஒரு சாதாரண தேரோட்டியின் மகன். அரச குலத்தில் பிறந்தவர்கள்தான் அரச குலத்தவர்களுடன் நேருக்கு நேர் நின்று வீரம் பேச தகுதியுள்ளவர்கள். நீ அர்ஜூனனிடம் அவ்வாறு பேசியது தவறு என்று கூறினார். அப்போது துரியோதனன் குறுக்கிட்டு, பிறப்பை வைத்து தகுதியில்லை என்று பேசுவது முறையாகாது என்றான். அர்ஜூனனுடன், அரச குலத்தில் பிறந்தவர்கதான் சண்டையிட வேண்டுமென்றால், கர்ணனையும் அரசனாக்குகிறேன். இன்று முதல் அங்கநாட்டின் மன்னன் கர்ணன் என்று கூறி தன் கிரீடத்தை எடுத்து கர்ணனுக்கு சூட்டினான் துரியோதனன். அத்துடன் அன்றைய போட்டி வேளை நிறைவடைந்தது.

துரோணர் மாணவர்களிடம், நேற்று அரங்கத்தில் நான் கற்றுக்கொடுத்த வித்தைகளை சரியாக செய்தீர்கள். எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. நான் கற்றுக்கொடுத்த வித்தைகளுக்கு குரு தட்சணையாக பாஞ்சால தேசத்து மன்னனான துருபதனை கொன்றுவிடாமல் கைது செய்து உயிருடன் இழுத்து வாருங்கள் என்றார். உடனே பாண்டவர்களும், கௌரவர்களும் துருபதனுடன் போரிட முன் அறிவிப்பின்றி சென்று துருபதனுடன் போரிட்டனர். துருபதனின் வீரத்தின் முன்னால் கௌரவர்களான துரியோதனனும் அவனை சார்ந்தவர்களும் பின் வாங்கினர். அப்போது போர் புரிந்து கொண்டிருந்த துருபதனின் மேல் எதிர்பாராத நேரத்தில் அர்ஜூனனின் அம்பு நெஞ்சில் பாய்ந்தது. துருபதனன் மயங்கி விழுந்தான். அர்ஜூனன், துரோணர் கூறியவாறே, துருபதனை கைது செய்து, அஸ்தினாபுரத்திற்கு இழுத்துச் சென்றான்.

துரோணர், துருபதனை ஏளனமாகப் பார்த்து சிரித்தார். துருபதன் தலை குனிந்து நின்றான். அவனைப் பார்த்து நம்பிக்கை துரோகியே, நான் அன்று என் பிள்ளைக்கு பசிக்கிறது என்று உன்னைத் தேடி வந்து நின்றேன். நீ என்னை ஒரு அந்தணன் என்று கூடப் பார்க்காமல் விரட்டியடித்தாய். இப்போது உன் நிலைமையைப் பார்த்தாயா? நீ எனக்கு சமமானவன் அல்ல என்பதை இப்போது நீ உணர்ந்திருப்பாய். என் சிஷ்யர்கள் உன்னை வென்றதால், இனி பாஞ்சால தேசம் எனக்குச் சொந்தம். நான் உன்னைப்போல் நம்பிக்கை துரோகி அல்ல. நீ வாக்களித்தப்படி பாதி ராஜ்ஜியத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். பிழைத்துப் போ என்று கூறி விடுதலை செய்தார். துருபதன் அங்கிருந்து அவமானத்துடன் திரும்பிச் சென்றான்.

செல்லும் வழியில் துரோணரை பழி தீர்க்க எண்ணினான் துருபதன். தன் வாழ்நாளில் துரோணரை கொல்ல முடியாவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தான். தனக்கு பின் தன் வாரிசுகாளாவது வந்து துரோணரை கொல்ல வேண்டும் என்று நினைத்தான். துருபதனுக்கு குழந்தைகள் இல்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே பாஞ்சால நாட்டிற்கு செல்லாமல், கங்கைக் கரைக்குச் சென்றான். அங்கே ஒரு ஆசிரமத்தில் தங்கி இருந்த முனிவர்களிடம் தன் நிலையை எடுத்துக் கூறினான். முனிவர்கள் துருபதனுக்காக புத்திரகாமேஷ்டி யாகம் செய்தனர்.

துரியோதனன், திருதிராஷ்டிரனிடம் தர்மனை நாட்டை விட்டே துரத்தப் போவதாகக் கூறினான். அதைக் கேட்ட திருதிராஷ்டிரன், துரியோதனா! இந்த நாடு என்னுடையது அல்ல. இறந்து போன என் தம்பி பாண்டுவினுடையது. அவனுடைய பிள்ளைகள்தான் இந்த ராஜ்ஜியத்தை ஆள்வதற்கு உரிமை உள்ளது. அவர்கள் சிறியவர்களாக இருப்பதால் இந்த நாட்டின் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன் என்றான். ஆகையால் அவர்களுடன் அனுசரித்து செல் என்றான்.

ஒரு வருடம் கழிந்தது. யுதிஸ்டிரன் அஸ்தினாபுரத்தின் இளவரசனாக முடிசூட்டப்பட்டான். யுதிஸ்டிரன் தன் திறமையாலும், பண்பாலும் மக்கள் மனதை கவர்ந்தான். யுதிஸ்டிரன் மற்ற நாடுகளுடன் போர் புரிந்து அஸ்தினாபுரத்தை விரிவுப்படுத்தினான். பீமன், அர்ஜூனன். நகுலன், சகாதேவன் தங்கள் கலைகளில் மென்மேலும் சிறந்து விளங்கினர். இவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு அஸ்தினாபுரத்தை நல்லாட்சியுடன் நடத்தினர்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!