Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 2 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி 120


நான் யாரென்று நீர் அறிவீரோ?. மூன்று லோகங்களும் வணங்கி வரும் என் பாட்டனாரான கிருஷ்ண பரமாத்மாவின் பேரன் ஆவேன். அத்தகைய வம்சத்திலிருந்து பிறந்த நான் வாழ்வதற்காக உன்னை தோத்திரம் செய்து வாழ்வதா? என்று கூறினார் அநிருத்தன்.
அதுவரை மந்திரி குபாண்டனின் கூற்றில் இருந்த உண்மையை உணர்ந்த பாணாசுரன் அமைதிக்காத்தான். ஆனால், அநிருத்தனின் கூற்றுகளோ பாணாசுரனை சினப்படுத்தின. பாணாசுரன் அநிருத்தனை நோக்கி உன்னைக் காக்க எவன் வருவான் என்றும், அவனை அழித்தே தீருவேன் என்றும் கூறினார். உன்னை என்னிடம் இருந்து காக்க இயலாது என்பதை நினைவில் வைத்துக்கொள் என்று உரைத்து தன் படைவீரர்களை அழைத்து அவனை சிறையில் அடையுங்கள் என்று கட்டளையிட்டான். அசுர குல வீரர்கள் பாணாசுரனின் கட்டளைக்கிணங்கி அநிருத்தனை இழுத்து சென்று சிறையில் அடைத்தனர்.
அநிருத்தனோ சிறையில் நாக அஸ்திரத்தால் சூழப்பட்டு இருக்கையிலும், தன் மனதை ஒருநிலைப்படுத்தி தன்னுடைய விருப்ப கடவுளான பார்வதி தேவியை எண்ணி தியானித்துக் கொண்டிருந்தான். உன்னை என்றும் நினைத்து தியானிக்கும் எனக்கு இவ்விதமான தீங்கை அளித்துவிட்டாயே... நானும், உஷையும் இணைந்தது தங்களின் அருளால் மட்டுமே. ஆனால், இன்றோ நான் என் சகியை பிரிந்து தனிமையில் வாடுகின்றேன். என்னை தாங்கள் அறிவீர்கள் என்றே கருதுகிறேன் என்று மனமுருகி வேண்டினார்.
அநிருத்தனின் வேண்டுதலை உணர்ந்தார் பார்வதி தேவி. பார்வதி தேவியும், அநிருத்தன் அடைந்த இன்னல்களை கடந்து, அவனை பிரியசகியுடன் சேர்க்க அநிருத்தன் இருக்கும் சிறைச்சாலையை வந்தடைந்தார். பின்பு அநிருத்தனை கட்டியிருக்கும் நாகாஸ்திரத்தை உடைத்தெறிந்து அதிலிருந்து அவனை விடுவித்து, சிறைச்சாலையிலிருந்து அவனின் மனம் கவர்ந்த உஷை இருக்கும் அந்தப்புரத்தில் சேர்ப்பித்தார்.
தன் தந்தையினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அநிருத்தனின் நிலை என்னவாயிற்று? என்று தெரியாமல் மிகவும் அச்சம் கொண்டு தனிமையில், விழிகளில் நீர் திவளைகளுடன் என்ன செய்வது? என்று அறியாமல் வாடிக்கொண்டிருந்தாள். அவ்வேளையில் அநிருத்தன் பார்வதி தேவியின் அருளால் சிறையிலிருந்து, உஷை இருக்கும் அந்தப்புரத்தை வந்தடைந்ததும் சோகங்கள் யாவும் மறைந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டான்.

பின்பு பார்வதி தேவியை வணங்கி, தங்களது மனதில் இருந்த கவலைகளை குறைத்து வைத்ததற்கு இருவரும் நன்றி கூறினார்கள். பார்வதி தேவியும், அவர்களுக்கு ஆசி வழங்கி அவ்விடம் விட்டு மறைந்து சென்றார். தேவி மறைந்ததும் தனது மனம் கவர்ந்த நாயகனை இறுக்க அணைத்து தங்களை காணாமல் தான் மிகுந்த அச்சம் அடைந்ததாக கூறி, அவனுடன் தனது அன்பை பரிமாறி கொண்டாள். சிறைச்சாலையில் இருந்த அநிருத்தன் மாயமாக மறைந்ததை கண்டறிந்த சிறைக்காவலர்கள் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தனர். பின்பு நிகழ்ந்தவற்றை காவல் வீரர்களின் தலைவனிடம் எடுத்துரைத்தனர்.
தலைவனும் மிகுந்த அதிர்ச்சிக்கொண்டு சிறைச்சாலையில் கைதியான அநிருத்தன் இருந்த இடத்தை சென்று பார்வையிட்டார். பின்பு என்ன செய்வது? எவ்விதம் தன் வேந்தனிடம் உரைப்பது? என்று மனதில் ஒருவிதமான பயம் கொண்டான் காவல் வீரர்களின் தலைவன். பின்பு வீரர்களை கொண்டு சிறைச்சாலை முழுவதும் தேடினார்கள். ஆனால், அநிருத்தன் இருக்கும் இடத்தை கண்டறிய இயலவில்லை. பின்பு அந்தப்புரத்தில் பணிபுரியும் சில சேவகர்கள் மூலம் அநிருத்தன் அந்தப்புரத்தில் இருப்பதை அறிந்து கொண்டனர்.
காவலர்களின் தலைவன் தங்களின் வேந்தனான பாணாசுரனை அடைந்து ஒருவிதமான பதற்றத்துடன் நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்தார். அதாவது, சிறைச்சாலையில் வீரர்கள் அனைவரும் மிகுந்த விழிப்புடனும், உரிய பாதுகாப்புடனும் இருந்த அவ்வேளையில் தனது மாய சக்தியால் சிறைச்சாலையை விடுத்து அந்தப்புரத்தை அடைந்து விட்டான் என்று எடுத்துரைத்தார். பலத்த காவலர்களுக்கு மத்தியில் சிறைச்சாலையில் இருந்த கைதியான அநிருத்தன் அந்தப்புரத்திற்கு மாயமாக மறைந்து சென்றுவிட்டதை கேள்விப்பட்டதும் மிகுந்த சினம் கொண்டு அவனை உயிருடன் இனி வைப்பது என்பது சரியானதாக இருக்காது என்று முடிவு செய்தார் பாணாசுரன்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!