Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 27 மார்ச், 2020

துர்வாச முனிவரை உபசரிக்கும் துரியோதனன்...!

துரியோதனன், பாண்டவர்களை நினைத்து மனம் புழுங்கினான். பாண்டவர்களை வீழ்த்த ஏதேனும் வழி உள்ளதா என யோசித்தான். துரியோதனன், தருமர் முன் செய்த ராஜசூயயாகம் போல ஒரு யாகம் செய்ய விரும்பினான். உடனே தனது விருப்பத்தை கர்ணனிடம் தெரிவித்தான். 

ராஜசூயயாகம் செய்வதற்கு ஒரு நிபந்தனை உண்டு. ராஜசூயயாகம் செய்பவரது தலைமையை பல நாட்டு மன்னர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கர்ணன், நான் பல நாடுகளுக்குச் சென்று அம்மன்னர்களை உனது தலைமையை ஏற்றுக் கொள்ளும்படி செய்கிறேன் எனக் கூறி விட்டு அங்கிருந்துச் சென்றான். 

அதேபோல் கர்ணன் பல நாடுகளுக்கு சென்று, வென்று வந்தான். துரியோதனன், பல நாடுகளை வென்று வந்த தன் நண்பண் கர்ணனை அன்போடு தழுவிக் கொண்டான்.

ராஜசூயயாகம் நடத்த புரோகிதர்கள் அழைக்கப்பட்டனர். ஆனால் புரோகிதர்கள் வருவதற்கு மறுத்துவிட்டனர். ராஜசூயயாகம் நடத்திய தருமர் இன்னமும் உயிருடன் இருக்கும்போது, அதை வேறொருவர் செய்வது மரபல்ல எனக் கூறி மறுத்துவிட்டனர். அதற்கு பதிலாக வைஷ்ணவ வேள்வி வேண்டுமென்றால் செய்யலாம் என்றனர். 

பொன் கலப்பையால் நிலத்தை உழுது இயற்றும் வேள்வி அது. இவ்வேள்விக்கு பல நாட்டு மன்னர்களுக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டது. இவ்வேள்விக்கு பாண்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. பாண்டவர்களுக்கு அழைப்பு விடுக்க ஒரு தூதுவனை அனுப்பினான் துரியோதனன். தூதுவர்கள் பாண்டவர்களிடம் சென்று வைஷ்ணவ வேள்விக்கு அழைப்பு விடுத்தனர்.

பாண்டவர்கள், நாங்கள் எங்களின் வனவாசம் காலம் முடியாமல் அரண்மனை திரும்பமாட்டோம் என உறுதியுடன் கூறினர். தூதுவர்கள் அரண்மனைக்கு சென்று துரியோதனனிடம் பாண்டவர்கள் கூறியதை தெரிவித்தனர். துரியோதனன் இதைக்கேட்டு கோபம் அடைந்தான். 
உடனே கர்ணனை அழைத்து, கர்ணா! நீ எனக்கு உதவி செய்ய வேண்டும். நிச்சயம் நாம் பாண்டவர்களை போரில் தோற்கடித்துவிடுவோம். அதன் பிறகு நான் யுதிஷ்டிரனை போல் ராஜசூயயாகம் செய்ய வேண்டும். இதற்கு நீ தான் எனக்கு உதவி புரிய வேண்டும் என்றான். கர்ணன், நண்பா! நிச்சயம் நான் உனக்கு உதவி செய்வேன். நான் போரில் அர்ஜூனை வீழ்த்தும் வரை மது, மாமிசம் போன்றவற்றை தீண்டமாட்டேன் என சபதம் செய்தான். இதைக்கேட்டு துரியோதனன் மகிழ்ச்சி அடைந்தான்.

கர்ணனின் சபதம் பாண்டவர்களுக்கு தெரிய வந்தது. தர்மர் இதை நினைத்து வருத்தம் கொண்டான். கர்ணனிடம், கவச குண்டலங்கள் இருக்கும்வரை அவனை வீழ்த்துவது கடினம் என நினைத்து வருந்தினான்.

துரியோதனனின் வைஷ்ணவ வேள்விக்கு பல நாடுகளில் இருந்தும் மன்னர்கள் வந்தனர். வைஷ்ணவ வேள்வி, இனிதே நடைப்பெற்று முடிந்தது. துரியோதனன், வைஷ்ணவ வேள்வி சிறப்பாக நடந்து முடிந்ததற்கு காரணம் கர்ணன் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தான். சில நாட்கள் கழிந்தது. பாண்டவர்கள் மென்மேலும் வளர்ச்சி அடைந்து வருவதை துரியோதனன் வெறுத்து வந்தான். பாண்டவர்களை தடுத்து நிறுத்த ஏதேனும் வழி செய்ய நினைத்தான்.

ஒரு நாள், துர்வாச முனிவர் அட்சய திருதி நாளன்று, அவரது பத்தாயிரம் சீடர்களுடன் துரியோதனனின் அரண்மனைக்கு வந்தார். துர்வாச முனிவருக்கு அருளும் சக்தியும் உண்டு. சபிக்கும் சக்தியும் உண்டு. இதை அறிந்த துரியோதனன், துர்வாச முனிவர் மூலம் பாண்டவர்களை பழி வாங்க நினைத்தான். அதனால் துர்வாச முனிவரை நன்றாக உபசரித்தான். துரியோதனனின் உபசரிப்பில் மகிழ்ந்த துர்வாசர், துரியோதனனை வாழ்த்தினார். துரியோதனனிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் எனக் கேட்டார்.

துரியோதன், துர்வாசர் பாண்டவர்கள் இருப்பிடத்திற்கு சென்றால் அவரை நன்றாக உபசரிக்க வேண்டும். அவர்களிடம் அள்ள அள்ள உணவு குறையாத ஓர் அட்சயப் பாத்திரம் உண்டு. ஒரு நாளில் ஒரு முறை அதைப் பயன்படுத்திய பின்பு, அதைக் கழுவி வைத்துவிட்டால், அதை மீண்டும் மறுநாள் தான் பயன்படுத்த முடியும். துர்வாசர், பாண்டவர்களின் இருப்பிடத்திற்கு செல்வதற்குள், திரௌபதி அட்சய பாத்திரத்தைக் கழுவி வைத்திருப்பாள். துர்வாசரை அவர்களால் உபசரிக்க முடியாது. துர்வாசர் பசியினால் கோபம் கொண்டு பாண்டவர்களை சபிப்பார். இதனால் பாண்டவர்களும் அழிவார்கள் என நினைத்தான்.

துரியோதனன், முனிவரே! காட்டில் எனது சகோதரர்கள் பாண்டவர்களின் இருப்பிடத்திற்கு சென்று அவர்களின் உபசரிப்பையும் ஏற்றுக் கொண்டு அவர்களையும் தாங்கள் ஆசிர்வதிக்க வேண்டும் என வேண்டினான். துரியோதனனை வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட துர்வாசர், அவர்களிடம் இருந்து விடைப்பெற்று பாண்டவர்களின் இருப்பிடத்தை நோக்கிச் சென்றார். பாண்டவர்கள், அன்றைய நாளுக்கான உணவை அருந்திவிட்டனர். மேலும் அந்தணர் யாரேனும் வந்தால் அவர்களுக்கும் உணவளித்தனர்.

அன்றும் அனைவரும் அருந்திய பின், திரௌபதி அட்சய பாத்திரத்தை நன்றாக கழுவி பத்திரப்படுத்தி வைத்தாள். அப்பொழுது அவளுக்கு துர்வாச முனிவர், தங்கள் இருப்பிடத்திற்கு வரும் செய்தி தெரிவிக்கப்பட்டது. துர்வாச முனிவர் இருப்பிடத்திற்கு வந்தால் அவரை நன்றாக உபசரிக்க வேண்டும். ஆனால் அட்சயபாத்திரத்தில் இனி உணவு பெருகாதே என திரௌபதி கலக்கம் அடைந்தாள்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக