Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 28 மார்ச், 2020

பாண்டவர்களை காப்பாற்றும் கிருஷ்ணர்....!

திரௌபதி, தன் கணவர்களிடம், துர்வாச முனிவர் நம் குடிலை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறார். அவரை உபசரிக்க நம்மிடம் எதுவும் இல்லை. அட்சய பாத்திரத்தையும் நான் கழுவி வைத்துவிட்டேன். இனி என்ன செய்வது? துர்வாசரை நாம் நன்றாக உபசரிக்கவில்லையென்றால் அவர் நம்மை சபித்து விடுவார் எனக் கூறி துன்பம் அடைந்தாள். பாண்டவர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர். திரௌபதி, இதிலிருந்து நாம் மீள வாசுதேவனால் மட்டுமே முடியும் எனக் கூறினாள். அனைவரும் கண்ணனை மனதார நினைத்தனர். கிருஷ்ணர், பாண்டவர்களின் குடிலுக்கு வந்தார். திரௌபதியிடம், எனக்கு மிகவும் பசியாக உள்ளது. எனக்கு சிறிது உணவு அளிப்பாயா எனக் கேட்டார். இதைக் கேட்டு திரௌபதி மிகவும் மனச்சங்கடத்திற்கு உள்ளானாள்.


கிருஷ்ணரிடம், வாசுதேவரே! நீங்களும் எங்களை சோதிக்கிறீர். நாங்கள் உணவு அருந்தும் அட்சய பாத்திரத்தை முழுவதுமாக கழுவிக் வைத்துவிட்டேன். தங்களுக்கு உணவை நான் எவ்வாறு கொண்டு வருவேன். நீங்கள் தான் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என வேண்டினாள். கிருஷ்ணர், திரௌபதி, அட்சய பாத்திரத்தை எடுத்து கொண்டு வா! என்றார். திரௌபதிக்கு ஒன்றும் புரியவில்லை. அட்சய பாத்திரத்தை எடுத்து வந்து கிருஷ்ணரிடம் கொடுத்தாள். கிருஷ்ணர், அட்சய பாத்திரத்தை பார்த்தார். அதில் ஓர் அன்னப்பருக்கை இருந்தது. கிருஷ்ணர், இது தான் என் உணவு எனக் கூறி அந்த பருக்கையை தன் வாயில் போட்டுக் கொண்டார். திரௌபதிடம், என் பசி தீர்ந்துவிட்டது எனக் கூறினார். இதைப் பார்த்து திரௌபதியும், பாண்டவர்களும் ஆச்சர்யம் அடைந்தனர்.

அங்கு பாண்டவர்களின் குடிலை நோக்கி வந்துக் கொண்டிருந்த துர்வாசருக்கும், அவரது பத்தாயிரம் சீடர்களுக்கும் பத்து நாள் உணவை ஒரே நாளில் சாப்பிட்டது போல் வயிறு கனத்தது. அவர்கள் அனைவருக்கும் பசி உணர்வு இல்லாமல் போனது. பசி உணர்வு இல்லாததால் துர்வாசருக்கும் ஒன்றும் புரியவில்லை. பாண்டவர்களின் குடிலுக்கு நாம் வந்துக் கொண்டிருக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று அவர்களின் உபசரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாயிற்றே என நினைத்து வருந்தினார். பாண்டவர்களின் குடிலுக்கு விரைந்து சென்றார். தர்மரிடம், யுதிஷ்டிரா! என்னை மன்னிக்க வேண்டும். இன்று என்னால் உங்களின் உபசரிப்பை ஏற்றுக் கொள்ள இயலாது. எனக்கும், எனது சீடர்களுக்கும் சுவையறியாத உணவை உண்டது போல் திருப்தி ஏற்பட்டது என்றார்.

இதைக் கேட்டு பாண்டவர்களும், திரௌபதியும் ஆச்சர்யமடைந்தனர். துர்வாசர், பாண்டவர்களை வாழ்த்திவிட்டு அங்கிருந்து விடைப்பெற்று சென்றார். கிருஷ்ணரின் மகிமையை பாராட்டி பாண்டவர்கள் மகிழ்ந்தனர். துர்வாச முனிவரை வைத்து பாண்டவர்களை பழிவாங்க நினைத்த துரியோதனனின் எண்ணம் தோல்வியில் முடிந்தது.

ஒரு நாள் திரௌபதி குடிலில் தனியாக இருந்தாள். பாண்டவர்கள் ஐவரும் வேட்டைக்கு சென்றுவிட்டனர். அச்சமயம் சிந்து நாட்டின் மன்னன் ஜயத்ரதன் அவ்வழியே சென்றான். அப்பொழுது அங்கு குடிலில் தனியாக இருந்த திரௌபதியை கண்டு காதல் கொண்டான்.

ஜயத்ரதன் :

சிந்து நாட்டு அரசன் மற்றும் கௌரவர்களின் தங்கை துச்சலையின் கணவன். இவனது தந்தை விருத்தக்ஷத்ரன். ஜயத்ரதன் பிறந்தபோது ஓர் அசரீரி 'இவன் போரில் புகழ்படைத்து வீர சொர்க்கம் அடைவான் எனக் கூறியது கேட்டு ஜயத்ரதன் தந்தை, என் மகன் தலையை தரையில் விழும்படி செய்பவன் தலை சுக்கு நூறாக வேண்டும்" என்றான்.

திரௌபதியிடம் சென்று தன் காதலை வெளிப்படுத்தினான். திரௌபதி, நான் திருமணமானப் பெண். திருமணமானப் பெண்ணை விரும்புவது கொடிய செயல். எனது கணவர் தருமர் வடக்கு நோக்கியும், பீமன் தெற்கு நோக்கியும், அர்ஜூனன் மேற்கு நோக்கியும், நகுலன், சகாதேவன் கிழக்கு நோக்கியும் வேட்டைக்கு சென்றுள்ளனர். நீ என்னுடன் தகாத முறையில் இவ்வாறு நடந்ததை அவர்கள் அறிந்தால் உன்னை கொன்று விடுவார்கள். அதனால் நீ இங்கிருந்து சென்று விடு எனக் கூறினாள். ஆனால் ஜயத்ரதன் அதை கேட்பதாய் இல்லை. அவளை வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்துச் சென்றான். அவனை தடுக்க பலரும் முயன்றனர். அவன் அதை கேட்கவில்லை.

காட்டில் பாண்டவர்களுக்கு ஏதோ ஆபத்து நேருவது போல் மனதில் தோன்றியது. அதனால் அனைவரும் ஒன்று கூடினர். விரைந்து குடிலை நோக்கிச் சென்றனர். அங்கு திரௌபதி இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு ஜயத்ரதன், திரௌபதியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதை அவர்கள் அறிந்தனர். குடிலுக்கு அருகில் தேர் சென்றிருக்கும் சுவடை பார்த்தனர். தருமர் பீமனை பார்த்து! பீமா! நீ உடனே விரைந்து சென்று திரௌபதியை விடுவித்து அழைத்து வா எனக் கூறினான்.

உடனே பீமன் அங்கிருந்து ஜயத்ரதன் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்துச் சென்றான். அவனுடன் கடுமையாக போரிட்டான். திரௌபதியை அவனிடம் இருந்து விடுவித்தான். பீமனின் தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் ஜயத்ரதன் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டான். பீமன், அவனை விடாமல் தாக்கி கயிற்றால் கட்டி தருமர் முன் கொண்டு வந்து நிறுத்தினான்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக