Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

சிவபுராணம்..!பகுதி 186

திருமண மேடைக்கான படிக்கட்டுகள் பொன்னால் செய்யப்பட்டு அதிலும் வேலைப்பாடுகள் நிறைந்து காணப்பட்டிருந்தன. மக்கள் அமர்வதற்கான திண்ணைகள் யாவற்றிலும் மாணிக்கக் கற்களும் பதிக்கப்பட்டு இருந்தன. 

திருமண மேடையானது பளிங்கு கற்களால் கட்டப்பட்டு அவைகளுக்கு இடையே உள்ள சாளரங்களில் மரகத மணிகளைக் கொண்டு இழைக்கப்பட்டு மிகுந்த பொலிவுடன் காணப்படும் வகையில் திருமண மேடை அமைக்கப்பட்டிருந்தன.

பவளங்களால் நுட்பமான வேலைகளும் காண்போரைக் கவரும் வகையிலான சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட பல ஆயிரம் தூண்கள் அவ்விடத்திலே நிரம்பி காணப்பட்டிருந்தன. மண்டபத்தின் கோபுரங்கள் சந்திரகாந்தக் கற்களால் செய்யப்பட்டிருந்தன. திருமண மேடையைச் சுற்றிலும் மகிழ்ச்சி வெள்ளம் நிரம்பி இருக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் அவ்விடத்தில் நிறைந்து காணப்பட்டன.

தேவலோகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கற்பக விருட்சம் கொடுத்த பல வகையான மணிகளையும், ஆபரண நகைகளையும் கொண்டு திருமண மேடையானது சாஸ்திர சம்பிரதாயங்களின் அடிப்படையில் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் யாவும் செய்யப்பட்டிருந்தன. பிராட்டியாரும், சோமசுந்தரரும் வீற்று இருப்பதற்கு நவமணிகளாலும், பொன்னாலும் இழைக்கப்பட்ட இருக்கை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது.

மலையத்துவச பாண்டிய மன்னன் மகளின் திருமண விழாவின் ஏற்பாடுகளை காணவும், விழாவில் பங்கேற்கவும் அனைத்து நாட்டு மக்களும், அனைத்து நாட்டு அரசர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடனும், ஆவலுடனும் தங்களால் இயன்ற அளவிலான பொருட்களுடனும் வந்திருந்தனர். திருமணத்திற்கு தேவையான அனைத்து ஆடை மற்றும் ஆபரணங்கள் யாவும் கற்பகவிருட்சம் தந்தருளியது. வந்திருப்பவர்களுக்கு அறுசுவை உணவை அளிக்கும் வகையில் தேவலோகத்திலிருந்து கவர்ந்து கொண்டு வரப்பட்ட காமதேனுவால் கிடைக்கப்பெற்றது.

தேவலோகமே மண்ணுலகில் இருப்பது போல் அனைத்து ஏற்பாடுகளும் மிகச் சிறந்த முறையில் மிகச்சிறந்த நபர்களைக் கொண்டு மேற்பார்வை செய்து சிறப்பானவையாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன.

எம்பெருமானுக்கும், பிராட்டியாருக்கும் நடைபெறும் திருமண விழாவில் கலந்துகொள்ள தேவலோக தேவர்கள், இந்திரன், அஷ்ட பைரவர்கள், சூரியன், சந்திரன் முதலிய தேவர்கள், நாரதர், வியாசகர் முதலிய மகரிஷிகள் என அனைவரும் வருகை தந்து மதுரை மாநகரம் முழுவதும் நிரம்பி காணப்பட்டனர். குபேரன், சிவபெருமானுக்கு திருமணம் என்பதால் தன்னிடமுள்ள செல்வங்களையும் சிவபெருமானிடம் அளித்து எம்பெருமானை மணமகன் கோலத்தில் புனைவித்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தார்.

மங்களகரமான திருமணக்கோலத்துடன் சிவபெருமான் ரிஷப வாகனத்தின் மீது எழுந்தருளி திருமணம் நடைபெறும் நகரமான மதுரை மாநகரத்திற்கு வருகை தந்திருந்தார். ரிஷப வாகனத்தில் சுந்தரர் வடிவத்தில் இருந்த எம்பெருமானை காண்பதற்கு இரு கண்கள் போதாது... இப்பிறவியே போதவில்லையே என்னும் அளவில் காட்சி அளித்துக் கொண்டிருந்தார். தேவாதி தேவர்களும் இக்காட்சியைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தனர்.

பிராட்டியாரின் முதலமைச்சராக சுமதி முதலியவர்கள் எம்பெருமானை சுந்தரர் வடிவத்தில் தரிசித்து அளவில்லா மகிழ்ச்சியை அடைந்து கொண்டிருந்தனர். எம்பெருமானை வரவேற்க அரண்மனையின் வாயிலில் அழகிய ஏற்பாடுகளுடன் மங்கையர்கள் கரங்களில் அஷ்ட மங்கலப் பொருட்களை ஏந்தி நின்றிருக்க... எம்பெருமான் வருகை தந்ததும் மங்கையர்கள் எம்பெருமானுக்கு கற்பூரம் காட்ட... மங்கல வாத்தியங்கள் ஒலிக்க... சிவபெருமான் அரச மாளிகைக்கு வருகை தந்திருந்தார்.

மணப்பெண்ணான தடாதகை பிராட்டியாரின் அன்னையான காஞ்சனமாலை, எம்பெருமானின் சுந்தரர் வடிவத்தைக் கண்டு தனது மகளுக்கு கிடைத்திருக்கும் வரனை எண்ணி மிகவும் மகிழ்ச்சி கொண்டிருந்தார். பின்பு, தனது மருமகனை அன்புடன் வணங்கி வரவேற்று அவரிடம் ஒரு சிறு வேண்டுகோளையும் விண்ணப்பித்திருந்தார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக