Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 11 ஏப்ரல், 2020

அவசரம் வேண்டாம் !

இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் அவசரம் தான். கோபமாக இருந்தாலும், பிரச்சனையாக இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு எதை நினைக்கிறோமா அதை செய்து விடுகிறோம். இது முற்றிலும் தவறு. இங்கு ஒரு இளைஞன் எவ்வாறு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறான். அப்பிரச்சனையில் இருந்து எவ்வாறு வெளி வருகிறான் என்பதை பற்றி பார்ப்போம்.

காட்டில் இளைஞன் ஒருவன் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தான். போகும் வழியில் அவனுக்கு பசி கடுமையாக எடுத்தது. என்ன செய்தவதென்று தெரியாமல் இருந்த அவனுக்கு ஒரு மரத்தில் பழங்கள் கனிந்து இருப்பதை கண்டான். உடனே அம்மரத்தில் தாவி ஏறினான். சில கனிந்த பழங்களை பறித்து தின்றான். அங்கு மேலும் ஒரு கிளையில் பழங்கள் இருப்பதை கண்டு அக்கிளைக்கு தாவினான். 

அக்கிளை சிறியதாக இருந்ததால் அவனின் எடையை தாங்க முடியாமல் அக்கிளை ஒடிந்தது. கிளை ஒடிந்ததால் பக்கத்தில் இருந்த மற்றொரு கிளையை பிடித்துக் கொண்டான். அக்கிளையில் இருந்து கீழே பார்த்தால் தரை வெகுதூரம் இருந்தது. கிளையை விட்டுவிட்டு குதித்தால் நிச்சயம் கை, கால்கள் உடையும் என்பதை அறிந்த அவன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான். 

பின் யாராவது இருந்தால் என்னை காப்பாற்றுங்கள் என்று அலறினான். நேரம் ஆகாஆக அவனது உள்ளங்கை வியர்க்க ஆரம்பித்தது.

வெகுநேரம் சென்றபின் அவ்வழியே முதியவர் ஒருவர் வந்தார். அந்த இளைஞன் முதியவரை பார்த்து, என்னை காப்பாற்றுங்கள் என்று உதவி கேட்டான். முதியவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு, அந்த இளைஞன் மீது கல்லை தூக்கி எறிந்தார். 

கல் பட்டவுடன் இளைஞன் வலியை தாங்க முடியாமல் முதியவரை பார்த்து, உங்களை உதவ சொன்னால் நீங்கள் என்மேல் கல்லை தூக்கி எறிகின்றீர்கள் என கோபத்துடன் கேட்டான். அந்த பெரியவர் அமைதியாக இருந்தார். மறுபடியும் ஒரு கல்லை தூக்கி அவன் மேல் எறிந்தார். அந்த இளைஞன் கோபத்துடன், பெரியவரே, உமக்கு அறிவில்லையா என கேட்டான். 

அதன்பின் தன்னை சுதாகரித்து கொள்ள மற்றொரு கிளையை பற்றி கொண்டான். அந்த பெரியவர் மீண்டும் அந்த இளைஞன் மீது கல்லை தூக்கி எறிந்தார். அந்த இளைஞன் மிகுந்த கோபத்துடன், பெரியவரே நான் கீழே வந்தால் உங்களை சும்மா விடமாட்டேன் என கத்தினான். அதன்பின் பக்கத்தில் பலமாக இருந்த கிளை ஒன்றை பற்றிக் கொண்டான்.

மீண்டும் அப்பெரியவர் அந்த இளைஞன் மீது கல்லை தூக்கி எறிந்தார். கோபங்கொண்ட இளைஞன், இனி உங்களுக்கு வாயால் சொல்லி ஒரு பயனும் இருங்கள், நானே கீழே வருகிறேன் எனக் கூறி முயற்சி செய்து மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தான். அந்த இளைஞன் பெரியவரை பார்த்து சரமாரியாகத் திட்டினான். உங்களிடம் உதவி தானே கேட்டேன். ஏன் கல்லை தூக்கி எறிந்தீர் எனக் கேட்டான். பெரியவர் அமைதியாக சிரித்தார். பின், தம்பி! நான் உனக்கு உதவிதான் செய்தேன் என்றார். அந்த இளைஞன் திருதிருவென முழித்தான். பெரியவர், நான் உன்னை முதலில் பார்த்தபோது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். அதனால் உன் மூளை வேலை செய்யவில்லை.

நான் கல்லை விட்டு எறிந்ததும் உன் பயம் சிறிது மறைய ஆரம்பித்தது. அதன்பின் நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். மீண்டும் மீண்டும் கல்லை எறிந்தேன். அதனால் நீ உன்னை காப்பாற்றிக் கொள்ள பெருமுயற்சி செய்தாய். கடைசியாக உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. இதற்கு காரணம் உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. 

அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன் என்று கூறினார். உண்மையை தெரிந்து கொண்ட அந்த இளைஞன் அந்த பெரியவரிடம், தங்களை திட்டியதற்கு மன்னிப்பு கேட்டான். பின் தாங்கள் உதவி செய்ததற்கு மிக்க நன்றி எனக் கூறினான். அதன்பின் அப்பெரியவர் அங்கிருந்து விடைபெற்று சென்றார்.

தத்துவம் :

என்னதான் பிரச்சனை இருந்தாலும் கோபம் கண்ணை மூடிவிடும். அதனால் அப்பிரச்சனையில் இருந்து எவ்வாறு வெளி வருவது சிரமமாகிறது. சிறிது அமைதியாக இருந்து அப்பிரச்சனைக்கு உண்டான வழியை தேடினால் நிச்சயம் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக