Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 23 ஏப்ரல், 2020

அரவானை களப்பலி கொடுத்தல்...!

கிருஷ்ணர், சிறிதும் தயக்கமின்றி பதினைந்தாம் திதியாக வரவேண்டியதை முறைமாற்றிப் பதினான்காவது திதியாக வரவழைத்து காட்டுகிறேன் என்று பாண்டவர்களிடம் கூறினார். கிருஷ்ணர் கூறியபடி பதினான்காம் திதியாகிய சதுர்த்தசியன்றே முனிவர்களும் பெரியோர்களும் அமாவாசை திதிக்குரிய ஹோமங்களை மந்திரங்களுடன் நடத்தினர். முனிவர்கள் எல்லோருமே இப்படிச் செய்வதைக் கண்டு, சூரியனுக்கும், சந்திரனுக்கும் அமாவாசை இன்றைக்கா அல்லது நாளைக்கா? என்ற சந்தேகம் எழுந்துவிட்டது. சூரியனும், சந்திரனும் திகைத்துப் போய் ஒருவரை ஒருவர் சந்தித்து அமாவாசை என்றைக்கு என ஆராய்ந்தனர். அவர்கள் இருவரும் மறுநாள் அமாவாசை திதியில் சந்திக்க வேண்டியதை மறந்துவிட்டு குழப்பத்தினால் முறைதவறி அன்றைக்கே சந்தித்துவிட்டார்கள். அதனால் பதினான்காம் திதியாகிய சதுர்த்தசியன்றே அமாவாசை உண்டாகிவிட்டது.

🌾 பாண்டவர்கள் இதைக் கண்டு வியந்தனர். கிருஷ்ணர், தர்மரிடம் உங்களுக்கு வாக்களித்தபடியே அமாவாசையை ஒரு நாள் முன்பே வரவழைத்து விட்டேன். ஆனால் துரியோதனன் நாளைக்குத்தான் அமாவாசை என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். போர் நடப்பதற்கு முன்பு முதலில் யார் களப்பலி கொடுக்கிறார்களோ அவர்கள் தான் போரில் வெற்றி பெறுவார்கள். அதனால் தயங்காமல் துரியோதனனுக்கு முன் இன்றைக்கே நீங்கள் களப்பலி கொடுத்து விடுங்கள் என்று கூறினார். ஆனால் தர்மர் யாரை களப்பலி கொடுப்பது என்று புரியாமல் இருந்தார். அப்போது அரவானும் அருகில்தான் இருந்தான். அரவான் துரியோதனனுக்கு வாக்களித்திருந்ததால், அவன் உயிரைக் களப்பலியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்பதற்கு பாண்டவர்கள் தயங்கினார்கள்.

🌾 அரவானே முன் வந்து ஏற்றுக்கொள்வான் என்று எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் அவன் துரியோதனனுக்கு வாக்கு கொடுத்ததால் தயங்கி நின்றான். அரவானை வழிக்குக் கொண்டு வருவதற்காக கிருஷ்ணர் ஒரு நாடகத்தை நடத்தினார். அதனால் கிருஷ்ணரே முன்வந்து தன்னை களப்பலியாக தருகிறேன்! இந்த உடலை உங்கள் வெற்றிக்காகப் பலி கொடுப்பதற்கு நான் சிறிதும் தயங்கவில்லை. என்னை களப்பலி கொடுங்கள் என்று கூறினார். பாண்டவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பாண்டவர்கள் கிருஷ்ணரிடம்! உங்களைப் பலி கொடுத்து எங்களுக்கு கிடைக்கும் என்றால் வெற்றியைவிட நாங்கள் தோல்வி அடைந்தாலும் கவலையில்லை. நீங்கள் எங்களுடன் இல்லாதபோது எங்களுக்கு போர் எதற்கு? அரசாளும் உரிமையும் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் இப்போதே போர் எண்ணத்தைக் கைவிட்டு விடுகிறோம் என்று கூறினார்கள்.

🌾 கிருஷ்ணர் தனது மாய நாடகத்தை எண்ணித் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டார். அவரது நாடகம் எதிர்பார்த்த பலனைத் கொடுத்தது. கிருஷ்ணர், அரவானைப் பார்த்த போது அவன் விழிகள் கண்ணீரால் நனைந்திருந்தது. அரவான், கிருஷ்ணரையும், தர்மனையும் பார்த்து, நான் இருக்கிறேன் என்னைக் களப்பலி கொடுங்கள். துரியோதனன் செய்த சூழ்ச்சியால் அமாவாசையன்று களப்பலியாவதாக நேற்று அவனுக்கு வாக்குக் கொடுத்தேன். இன்றைக்கு நீங்கள் களப்பலி கொடுக்காவிட்டால் எப்படியும் நாளைக்கு அவன் என்னைக் களப்பலி கொடுத்து விடுவான். ஆனால் இன்று தான் அமாவாசை என்று அவனுக்கு தெரியாது. நீங்கள் குறித்த நல்லநேரம் தவறிவிடக் கூடாது. அவன் பலியாக்க வேண்டிய என் உடலை நீங்கள் பலியாக்கிக் கொள்ளுங்கள் என்று கூறினான்.

🌾 ஆனால் கிருஷ்ணர் மீண்டும் பாண்டவர்களுக்காக நானே பலியாகிவிடுகிறேன். நீ துரியோதனனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்று என்று அரவானிடம் கூறினார். ஆனால் அரவான்! கிருஷ்ணரிடம் நீங்கள் போருக்கு உறுதுணையாக இருந்து பாண்டவர்களுக்கு அனைத்து உதவியும் செய்து வெற்றி பெற வழிகாட்டுங்கள். நானே பாண்டவர்களுக்காக களிப்பலியாக இருக்கிறேன். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் நடக்க இருக்கும் இந்தப் போரை உயிரோடு இருந்து பார்க்கவேண்டும் என்று ஆசை உள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் நான் களப்பலியாகி இறந்துவிட்டால், போர் தொடங்கும் போது, உயிர்பெற்றுச் சில காலம் போர்க்களக் காட்சிகளை காண்பதற்கு வேண்டிய வரத்தை நீங்கள் எனக்கு வழங்க வேண்டும் என்று அரவான் வேண்டிக்கொண்டான்.

🌾 அரவானின் வேண்டுகோளுக்கு கிருஷ்ணர் இணங்கி, அதற்கு வேண்டிய வரத்தையும் தருவதாக ஒப்புக்கொண்டார். அரவானும் மனநிறைவு பெற்று மகிழ்ச்சி அடைந்தான். பின்பு இரவு நேரம் நெருங்கியது. அமாவாசை இருட்டு உலகம் கருமையில் மூழ்கியிருந்தது. பாண்டவர்கள் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் அரவானை அழைத்துக் கொண்டு அவர்கள் பரம்பரையாக வணங்கி வந்த குலதெய்வமான காளி கோவிலுக்குச் சென்றனர். பின்பு அரவானை ஈரம் உலராத ஆடையோடு பலிபீடத்தில் நிறுத்தினர். களப்பலியாகப் போகிறவர்கள், தன்னைத் தானே தன் கைவாளால் தன்னுடைய தலை முதலிய உறுப்புக்களை அறுத்து காளிதேவிக்கு முன் படைக்க வேண்டுமென்பது வழக்கம்.

🌾 பாண்டவர்கள் ஐந்து பேரும் கூப்பிய கரங்களுடன் காளிதேவியை தியானித்துக் கொண்டனர். அரவான் மலர்ந்த முகத்தோடு இடைவாளை உருவிக் கையில் எடுத்துக் கொண்டான். அடுத்த நிமிடம் அரவான் வாளைக் கொண்டு அவனது கழுத்தை நோக்கி வெட்டினான். சில விநாடிகள் கழிந்ததும் பலிபீடத்தில் இரத்தம் பாய்ந்து வழிந்து ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. அரவானின் உடலுறுப்புக்கள் சிதறி அறுபட்டுக் கிடந்தது. பாண்டவர்கள், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அடுத்து செய்ய வேண்டிய தெய்வக் கடன்களைச் செய்தனர். பாண்டவர்கள், ஐந்து பேரும் தனித்தனியே யானை, குதிரை முதலிய சில விலங்குகளையும் பலி கொடுத்தனர். பிறகு காளிதேவியிடம் போரில் வெற்றி பெறவேண்டும் என்று வேண்டிக் கொண்டு கோவிலிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக