Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 8 ஏப்ரல், 2020

சுயம்பிரபை மோட்சம் பெறுதல்...

சுக்ரீவன், இப்படி எல்லா இடங்களிலும் சீதையை தேடி ஒரு மாதத்திற்குள் இங்கு வந்தடைய வேண்டும். ஆதலால் எல்லோரும் காலத்தை தாமதிக்காமல் உடனே புறப்படுங்கள் என்றான். 

பிறகு இராமன் அனுமனை தனியாக அழைத்துச் சென்று, வீரத்தில் சிறந்தவனே! நிச்சயம் நீ சீதையை கண்டுபிடித்து வருவாய் என நம்புகிறேன். 

சீதையை பற்றி நான் உன்னிடம் கூறுகிறேன். சீதை அழகில் சிறந்தவள். தாமரைப்பூ போன்றவள். மிகவும் நளினம் உடையவள் என சீதையைப் பற்றிக் கூறினார். 

பிறகு இராமர், சீதையிடம் இக்கணையாழியை என் அடையாளமாக காண்பித்து என்னுடைய நலத்தை கூறுவாயாக என வாழ்த்தி அனுமனுக்கு விடை கொடுத்தார்.

பிறகு அனுமன், அங்கதன், ஜாம்பவன் மற்றும் தன் பெரிய படைகளுடன் தென்திசை நோக்கிப் புறப்பட்டனர். அவர்கள் விந்திய மலையை அடைந்தார்கள். அங்கு சீதையை தேடி அலைந்த பின்னர் நர்மதா ஆற்றை கண்டார்கள். 

அங்கும் சீதையை வெகுண்டு தேடினார்கள். அதன்பின் நர்மதை ஆற்றை கடந்து அங்கிருந்து சீதையை தேடி ஏமகூட மலையை அடைந்தனர். அங்கு சீதையை தேடும் போது ஒரு பாலைவனத்தை அடைந்தனர். 

அவர்கள் பாலைவனத்தின் வெப்பத்தை தாங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ஒரு பாதாளம் தென்பட்டது. வெப்பத்தை தாங்க முடியாத அவர்கள் பாதாளத்துக்குள் நுழைந்தனர்.

அப்பாதாளத்துக்குள் மனிதர்கள் நடமாட்டமே இல்லாத ஒரு நகரத்தை கண்டனர். அங்கு சேலைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, உணவுகளும், உடைகளும் இருந்தது. 

சிலர் இது தான் இராவணன் சீதையை சிறை வைத்துள்ள இடம் என்று நினைத்தனர். அங்கு ஓர் அழகிய மண்டபத்தில் ஓர் பெண் தவம் செய்து கொண்டு இருந்தாள். 

அவள் பெயர் சுயம்பிரபை. அப்பெண் நகரக்குள் யாரோ வந்துள்ளார்கள் என்பதை அறிந்து கண் விழித்து பார்த்தாள். அனுமனை பார்த்து, தாங்கள் யார்? என வினவினாள். அனுமன், நாங்கள் இராமருடைய அடியேன்கள். 

என் பெயர் அனுமன் என்றார். பிறகு அனுமன் சுயம்பிரபையை பார்த்து, தாங்கள் யார்? தாங்கள் தனியாக இங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என வினவினான்.

சுயம்பிரபை, முன்னொரு காலத்தில் தேவலோகத்தை சேர்ந்த மயன் என்பவன் இந்த பகுதியில் அழகிய ஊரை அமைத்தான். அவன் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து பிரம்மாவிடம் வரம் பெற்றான். 

அத்துடன் தெய்வப்பெண்ணான ஹேமையுடன் தான் அமைத்த அழகிய நகரில் கூடா ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தான். அவர்களுக்கு நான் துணை புரிந்தேன். மயன் ஹேமையுடன் இருப்பதாக நாரத முனிவர் இந்திரனிடம் கூறினார். 

இதனால் கோபமடைந்த இந்திரன் மயனைக் கொன்று விட்டு ஹேமையை தேவலோகத்திற்கு அனுப்பிவிட்டார். என்னை இங்கேயே தனியாக இருக்கும்படி கூறினார். உனக்கு இராமரின் தூதுவனான அனுமன் விமோட்சனம் தருவார் என கூறிவிட்டு சென்றார்.

நான் தங்களுக்காக தான் இத்தனை நாள் தவம் செய்து கொண்டு இருந்தேன். தாங்கள் எனக்கு இதிலிருந்து மோட்ச பதவியை அளிக்க வேண்டும் என்றாள். பிறகு அனுமன் தன் விஸ்வரூபத்தை எடுத்து, அந்த பாதாளத்தை வேருடன் பிடுங்கி மேலே நிலமட்டம் வரும்போது மற்ற வானர வீரர்களை அங்கிருந்து இறங்கச் செய்தார். 

அப்பாதாளத்தை கடலில் வீசி விட்டார். சுயம்பிரபைக்கு மோட்சத்தை அளித்தார். சுயம்பிரபை தேவலோகத்தை சேர்ந்தாள். பிறகு வானர வீரர்கள் பொய்கையை அடைந்தனர். அங்கு அவர்கள் காய், கனிகளை உண்டு இளைப்பாறினார்கள். பொய்கை கரையில் அன்றிரவை கழித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக