Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 30 ஏப்ரல், 2020

நான்காம் நாள் போர் ஆரம்பம்!

அர்ஜூனன் மேற்கொண்ட போரில் எதிர்ப் படையினரில் பீஷ்மரை தவிர வேறு யாரும் உயிருடன் பிழைக்கவில்லை. துரியோதனனின் படையைச் சேர்ந்த யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட் படைகள் அனைத்தும் அழிந்து விட்டன. 

மாலை நேரம் நெருங்கிய பிறகு அர்ஜூனன் போரை நிறுத்திவிட்டான். மூன்றாம் நாள் போர் முடிவுக்கு வந்தது. அடுத்து நான்காம் நாள் கருட வியூகத்திலும் அர்த்த சந்திர வியூகத்திலுமாகப் படைகள் நிறுத்தப்பட்டு இரு படைவீரர்களும் நான்காம் நாள் போரைத் தொடங்கினர். 

பீமனை எதிர்த்து யானைப் படையினர் தனியாக வளைத்துக் கொண்டு தாக்க முயன்றனர். ஆனால் பீமன் யானைப்படைகளையும், படைவீரர்களையும் தாக்கி அழித்தான்.

பீமனின் தாக்குதலை தாங்க முடியாமல் அனைவரும் பின்வாங்கி ஓடினர். ஆனால் துரியோதனன் பின்வாங்காமல் யானைப்படைகளுக்கு தலைமைதாங்கி முன்னுக்கு வந்தான். 

இதனால் துரியோதனனுக்கும், பீமனுக்கும் தனித்தனியே நேருக்குநேர் போர் ஏற்பட்டது. துரியோதனன் மார்பில் பீமன் தாக்கினான். துரியோதனன் தாக்கப்படுவதை அறிந்த சகுனியும், சல்லியனும் உதவி செய்ய வந்தார்கள். 

பீமனும் தன்னுடைய வீரமிக்க போரினால் கௌரவர்களை அம்புகளால் தாக்கி வீழ்த்தச் செய்தான். பீமனும், அபிமன்யுவும் மற்றும் அர்ஜூனனும் நான்கு திசைகளிலும் கௌரவர் படைகளை தாக்கினார்கள். துரியோதனன் இதனைக் கண்டு மனம் தளர்ந்தான்.

அந்த நிலையில் துரியோதனன் படைகளுக்கு, பகதத்தன் மன்னன் உதவிக்கு வந்தான். யானைப் படையிலிருந்த யானைகளைத் திரட்டிக் கொண்டு, தானும் ஒரு யானைமேல் ஏறிக் கொண்டு, பாண்டவர்களின் அணிவகுப்பிற்குள் துழைந்தான். 

இவன் வந்ததும் பாண்டவ படைகள் அதிர்ச்சி அடைந்தனர். இதைக் கண்ட கடோத்கஜன் பல்லாயிரக்கணக்கான யானைகளாகத் தோன்றும்படி மாயம் செய்து பகதத்தனிடம் மோதினான். கடோத்கஜனை எதிர்த்து பகதத்தனால் போரிட முடியவில்லை. விரைவில் பகதத்தனுக்குத் தோல்வியும் கடோத்கஜனுக்கு வெற்றியுடனுமாக அன்றையப்போர் முடிந்தது.

நான்காம் நாள் போரில் பீமன் கையால் கௌரவர்கள் ஐந்து பேர் இறந்துவிட்டதை அறிந்த காந்தாரி சோகத்தில் அழுது புலம்பினாள். பின்பு பேரொலிகளுடனும், ஆரவாரங்களுடனும், ஐந்தாம் நாள் போர் தொடங்கியது. 

அர்ஜுனன் வில்லுடன் போருக்குச் செல்ல தேரில் ஏறினான். கிருஷ்ணரும் வேகமாக போர்க்களத்திற்கு தேரைச் செலுத்தினார். அர்ஜுனன் பீஷ்மரோடு போர்புரிய வேண்டும் என்பது கிருஷ்ணரின் ஆசையாக இருந்தது. அதற்காக பீஷ்மரின் தேருக்கு முன்னால் கிருஷ்ணர், தேரைப் போருக்கேற்ற முறையில் கொண்டு சென்று நிறுத்தினார். 

ஆனால் கலிங்கவேந்தனைச் சேர்ந்த படைவீரர்கள் அர்ஜூனனை வளைத்து கொண்டார்கள்.

பீஷ்மரை, அர்ஜூனன் தாக்கும் முன்பு கலிங்கவேந்தன் தாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அர்ஜுனனை சூழ்ந்து கொண்டான். கலிங்கவேந்தன் படைகளை அர்ஜுனன் தன் அம்புகளால் துளைத்தான். 

கலிங்கவேந்தன் படைகளில் பலர் மடிந்தனர். இதனைக் கண்ட பீஷ்மர் தானாகவே முன்வந்து அர்ஜூனனோடு போர்புரிய வந்தார். பீஷ்மரும், அர்ஜூனனும் நேரடியாக போர்புரிய ஆரம்பித்தனர். 

அதே நேரத்தில் போர்க்களத்தில் மற்றோர் பகுதியில் தனியே நின்று கொண்டிருந்த பீமனை, துச்சாதனன் மற்றும் பல அரசர்கள் வளைத்துக் கொண்டார்கள். ஆனால் பீமன் அவர்களை எதிர்த்து போரிடத் துவங்கினான். பீமன் கதையினால் அடித்த அடிகளால் துச்சாதனனின் உடலில் இருந்து இரத்தம் வலிந்தது.

பீமனுக்கு பயந்து கொண்டு துச்சாதனனும், படைவீரர்களும் போர்க்களத்தில் இருந்து ஓடினார்கள். அதைக் கண்ட துரியோதனன் பீமனை எதிர்க்க வந்தான். என்னுடைய தம்பிகளை ஓட ஓட விரட்டிய பீமனை இன்றைக்கு கொல்லாமல் விடமாட்டேன் என்று கோபமாக கூறிக்கொண்டு களத்தில் இறங்கினான். வந்த வேகத்தில் தன் கதையினால் பீமனின் மார்பில் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தான். 

பீமனின் மார்புக் கவசம் அறுந்து துளைபட்டு விட்டதும் கோபம் கொண்ட பீமன், வேகமாக தன் கதையை எடுத்துத் துரியோதனன் மார்பைக் குறிவைத்துத் தொடர்ந்து அடித்தான். பீமனின் தாக்குதலை துரியோதனனால் தாங்க முடியவில்லை. துரியோதனன் வலியை பொறுக்க முடியாமல் தேரில் இருந்து கீழே இறங்கி விட்டான்.

அப்போது கௌரவர் படையைச் சேர்ந்த பூரிசிரவா என்பவன் துரியோதனனுக்குப் பதிலாக பீமனோடு போர் செய்ய முன் வந்தான். பூரிசிரவாவும், பீமனும் போரில் வில்லைக் கொண்டும் மாறி மாறிப் போர் புரிந்தார்கள். போரில் மிகுந்த அழிவும் மிகுந்த சேதமும் ஏற்பட்டிருந்தன. 

ஐந்து நாட்களுக்குப் பின்பு ஆறாவது நாள் காலையில் போர் தொடங்கும் பொழுது இருதரப்பு படையினரும் தத்தம் படைகளைப் புது வியூகங்களில் வகுத்து நிறுத்தினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக