Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 18 ஏப்ரல், 2020

அசோக வனமும் சீதையின் துன்பமும்!

அனுமன், இனி நான் தேவியை எவ்வாறு காண்பேன். சம்பாதி, சீதை இலங்கையில் இருக்கிறாள் என கூறினாரே. அவருடைய சொல்லும் பொய்யாகி விட்டதே. இனி என் உடலில் உயிர் இருந்து என்ன பயன்? 

நான் இந்த இலங்கையை கடலில் போட்டு அழுத்தி, நானும் உயிரை மாய்த்துக் கொள்வது தான் சரி என்று உறுதி கொண்டான். இவ்வாறு அனுமன் நினைத்துக் கொண்டு இருக்கையில், அருகில் வனம் ஒன்று இருப்பதை கண்டான். 

அவ்வனத்தின் பெயர் அசோக வனம். பிறகு அனுமன் அவ்வனத்துக்கு அருகில் சென்று பார்த்தான். என்ன இடம் இது? நான் இந்த இடத்தில் சீதையை தேடவில்லையே! அனுமன், இவ்வனத்தில் சென்று சீதையை தேடலாம் என அவ்வனத்திற்குள் சென்றான். 

அனுமன் யார் கண்ணிலும் படாமல் இருக்க தன் உருவத்தை மிகச் சிறிய உருவமாக மாற்றிக் கொண்டான்.

அனுமன் மரத்திற்கு மரம் தாவிக்கொண்டு சீதையை தேடிக் கொண்டு இருந்தான். அங்கு ஓர் குளத்தைக் கண்டான். அனுமன் அங்கு சென்று குளக்கரையில் ஓர் மரத்தின் மேல் ஏறி சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கு தூரத்தில் தங்கத்திலான மண்டபத்தைக் கண்டான்.

சீதையின் நிலை :

அசோக வனத்தில் சீதை அரக்கியர் சூழ ஓர் மரத்தினடியில் மிகுந்த சோகத்துடன் அமர்ந்திருந்தாள். சீதையின் கண்கள் அழுதழுது மிகவும் வாடி போயிருந்தது. அவள் மிகவும் உடல் இளைத்து, தூக்கமின்றி புலியிடம் மாட்டிக்கொண்ட மான் போல அகப்பட்டு மிகவும் வருந்திக் கொண்டிருந்தாள். இராமரின் நினைவால் மிகவும் வருந்தி, சோர்வுற்று, இராமரின் வரவை எதிர்பார்த்து மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்தாள். இராமரின் நினைவு சீதையை வாட்டிக் கொண்டு இருந்தது. இராமர் தன்னை காக்காவிட்டாலும், தன் குலப்பெருமையைக் காக்கும் பொருட்டு நிச்சயம் வருவான் என நாலாபுறமும் இராமரின் வரவை எதிர்நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இராவணன் தன்னை கவர்ந்து வந்த செய்தியை இராமரும், இலட்சுமணரும் அறியவில்லை போலும் என பலவாறு நினைத்து மிகுந்த துன்பப்பட்டுக் கொண்டிருந்தாள். இராவணன் என்னை கவர்ந்து வந்த போது வழியில் அவனை தடுத்து போரிட்ட ஜடாயுவும் இறந்து விட்டான். ஆதலால் இராமரிடம் என் நிலைமையை எடுத்துரைக்க ஆள் இல்லாமல் போய் விட்டது போலும். ஆதலால் இப்பிறவியில் இராமனையும், இலட்சுமணனையும் காண்பது என்பது நடக்காத காரியம் என நினைத்து மிகவும் வருந்தினாள். தான் அமர்ந்த இடத்தை விட்டு சற்றும் நகராத சீதை, இனி இராமருக்கு யார் உணவளிப்பார்கள். முனிவர்கள் எவரேனும் வந்தால் அவர்களுக்கு இராமர் எவ்வாறு உணவளிப்பார் என நினைத்து வருந்தினாள்.

ஒரு வேளை என்னை கவர்ந்து வந்த அரக்கர்கள், இவ்வளவு நாட்கள் ஆகியும் என்னை உயிருடன் விட்டுவிட மாட்டார்கள். இவர்கள் என்னை தின்று இருப்பார்கள் என நினைத்து இருப்பாரோ என்று நினைத்து மிகவும் துன்பப்பட்டாள். ஒருவேளை பெற்ற தாய்மார்களும், தம்பி பரதனும் காட்டிற்கு வந்து இராமரையும் இலட்சுமணரையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார்களோ? என்னவோ? இராமர் தாயின் கட்டளைப்படி பதினான்கு ஆண்டு வனவாசம் முடியாமல் நிச்சயம் நாடு திரும்ப மாட்டார்கள். அவ்விருவருக்கும் ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிட்டதா என நினைத்து மிகவும் வருந்தினாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக