Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

முதல் நாள் போரின் முடிவு..!!

உத்தரன், முறைப்படி போர் முடிந்து விட்டது என்று எண்ணி வில்லையும், முதுகில் கட்டிக் கொள்ளும் அம்புகள் நிறைந்த சிறு கூடையையும் கழற்றிக் கீழே வைத்தான். அப்பொழுது சல்லியன், உத்தரன் மேல் திடீரென்று வேலை ஏவினான். 

இதனால் உத்தரன் எதிர்த்து சமாளிக்க முடியாமல் வேலிற்கு இரையானான். சல்லியன் வீசிய வேல் உத்தரனின் நெஞ்சுக்குழிக்குள் ஆழப் பதிந்துவிட்டது. உத்தரனின் உயிர் விரைவில் உடலை விட்டுப் பிரிந்தது. வெற்றி வீரனாகப் போர்க்களத்தில் ஆரவாரம் செய்து கொண்டிருந்த உத்தரன், சில விநாடிகளில் விண்ணகம் புகுந்து விட்டான். 

சல்லியன் உத்தரனைக் கொன்றான் என்று அறிந்த துரியோதனன் மனமகிழ்ச்சி அடைந்தான். பாண்டவர்கள் தங்கள் துணைவனான உத்தரன் இறந்ததால் மனம் வருந்தினர்.

பீமன், உத்திரனைக் கொன்ற சல்லியனைப் பழிவாங்குவேன் என்று உறுதி செய்து கொண்டு கிளம்பினான். பீமன் கோபமாக சல்லியனைத் துரத்திக் கொண்டு வந்ததால் பயந்து ஓடிப்பதுங்கிக் கொண்டான். 

பீமனைப் பார்த்தவுடன் துரியோதனனும் மற்ற வீரர்களும் சேர்ந்து எதிர்த்து வந்தார்கள். பீமன் துரியோதனனின் படை வீரர்களை கதாயுதத்தால் ஓங்கி அடித்து அவர்களை சிதறச் செய்தான். துரியோதனனுடைய தேரை அடித்து சிதைத்துத் தூள்தூளாக்கினான். 

துரியோதனன் போர்க்களத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் இருந்தான். அவன் தோற்றுவிட்டான் என்று அவனைச் சுற்றி நின்றவர்கள் நினைத்தார்கள்.

பிறகு சல்லியன் பதுங்கி கொண்டிருந்த இடத்தை சுவேதன் அறிந்து கொண்டு அவனைத் தாக்குவதற்கு சென்றான். சுவேதனுக்கும், சல்லியனுக்கும் இடையில் கடுமையான விற்போர் நடந்தது. சல்லியனுக்கு துணையாக, சுவேதனை எதிர்ப்பதற்கு துரியோதனன் ஆறு பெரிய வீரர்களை அனுப்பினான். 

சல்லியனும், உடன் இருந்த ஆறு பேரும் சுவேதனுடன் விற்போர் செய்தார்கள். சுவேதன், போர்த் திறமையால் அந்த ஏழுபேரையும் வீழ்த்தினான். அதனைக் கண்ட துரியோதனன் சுவேதனை எதிர்த்து போரிட வேண்டுமானால் இவனை விட பெரிய வீரராக இருக்க வேண்டும் என்று எண்ணி பீஷ்மரை சுவேதனுடன் போர் புரிய அனுப்பினான். 

சுவேதனின் கலக்கமில்லாத வீரம் பீஷ்மரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சுவேதனுக்கும், பீஷ்மருக்கும் நிகழ்ந்த போரில் பீஷ்மரின் தேர் மற்றும் தேர்க்கொடி எல்லாவற்றையும் சுவேதன் அறுத்துத் தள்ளிவிட்டான். இதனால் சினங்கொண்ட துரியோதனன் போர்க் களத்தில் இருந்து இன்னும் பல வீரர்களை திரட்டி பீஷ்மருக்கு துணையாக அனுப்பினான். சிறிது நேரம் போர் நடந்தது. சுவேதன், மீண்டும் பீஷ்மரின் வில்லை ஒடித்து வீழ்த்தினான். 

இதனால் கோபடைந்த பீஷ்மர், சுவேதனிடம் உனக்கு தைரியம் இருந்தால் வில்லை வைத்து விட்டு வாளைக் கொண்டு போர் செய் பார்க்கலாம்! என்று கூறினார். உடனே சுவேதன் வில்லைக் கீழே வைத்துவிட்டு, வாளை எடுத்துக் கொண்டு போர் புரிய வந்தான்.

திடீரென்று பீஷ்மர், வேறொரு வில்லை எடுத்து சுவேதனின் தோள் பட்டையைக் குறிவைத்து அம்பைத் தொடுத்தார். அம்பு சுவேதனின் தோள் பட்டையில் ஆழமாகப் பாய்ந்து கையைத் தூண்டித்தது. இதனால் கோபமடைந்த சுவேதன் வில்லை எடுக்க முயன்ற போது மீண்டும் பீஷ்மர் இன்னொரு அம்பை சுவேதன் மேல் எய்த போது அந்த அம்பு சுவேதனின் மார்பிலே தைத்து அவனைக்கொன்று விட்டது. சுவேதன் தடுமாறி மண்ணில் வீழ்ந்தான். 

பீஷ்மர், சூழ்ச்சி செய்து சுவேதனைக் கொன்று பழிதீர்த்துக் கொண்டார். முதல் நாள் போரிலே வீரமாகப் போர் புரிந்த உத்தரனும், சுவேதனும் வீழ்ந்தது பாண்டவர்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தியது. விராட மன்னனின் மகன்களான உத்தரன், சுவேதன் இருவரையும் முதல் நாள் போரிலே இழந்ததால் கிருஷ்ணரும், தர்மரும் விராட மன்னனுக்கு ஆறுதல் கூறி மனச் சமாதானம் அடையச் செய்தனர்.

மறுநாள் அதிகாலையிலேயே இரண்டாம் நாள் போருக்கான அறிகுறிகள் விறுவிறுப்பாகத் தொடங்கி விட்டன. கிருஷ்ணர், திருஷ்டத்துய்மனை பாண்டவர்கள் சார்பில் படைத் தலைவனாக்கினார். முதலாம் நாள் போரில் உத்தரனும், சுவேதனும் கொல்லப்பட்டதால், இரண்டாம் நாள் போர் படைகள் திருத்தி அமைக்கப்பட்டன. 

கிரௌஞ்சப் பறவை வடிவில் படைகளை அமைத்தார்கள். அதனால் இரண்டால் நாள் போருக்கு கிரௌஞ்ச வியூகம் என்று பெயர். துருபத மன்னன் அதற்குத் தலைவனாக நின்றான். தர்மர் பின் புறத்தில் நின்றார். திருஷ்டத்துய்மனும், பீமனும் சிறகுகளாக இருந்தனர். பாண்டவர் படைகள் முதல் நாள் போரில் படுதோல்வி அடைந்ததை சரிகட்ட, இரண்டாம் நாள் போரில் பீஷ்மரைக் கொல்லவதற்காக அணி வகுத்தனர். ஆனால் கௌரவர் படைகள் பீஷ்மரைக் காத்து நின்று போரிட்டது. ஆனால் அர்ஜூனன் அனைத்து படை வீரர்களையும் எதிர்த்து பீஷ்மரைக் கொல்ல கடும் போராட்டம் நடத்தினான்.

துரோணர், பாண்டவ படைகளின் தலைமைப் படைத் தலைவனான திருஷ்டத்துய்மனை அம்புகளால் துளைத்து விட்டார். இதனால் பீமன் படுகாயமடைந்த திருஷ்டத்துய்மனை போர்க்களத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று விட்டான். பீமன் திருஷ்டத்துய்மனுக்கு உதவி செய்ய வந்ததைக் கண்ட கலிங்க வேந்தன் எதிர்ப்பக்கத்தில், பீமனை எதிர்ப்பதற்காக வில்லை வளைத்துக் கொண்டு வந்தான். கலிங்க வேந்தனின் படையில் யானைகள் அதிகமாக காணப்பட்டது. மனிதப் படைகளை அழிப்பதை விட யானைப் படைகளை அழிப்பதில் பீமனுக்கு அதிக மகிழ்ச்சி. பீமன், கலிங்க வேந்தனையும் அவன் யானைப் படைகளையும் அழித்துத் துவம்சம் செய்ய ஆரம்பித்தான். கலிங்க வேந்தன் பின் வாங்குவதைத் தவிர வேறு வழி இல்லை என்று எண்ணி தன்னுடைய யானைகளுடன் மட்டும் அன்றிப் பிறபடைகளிலும் பெரும் பகுதி அழிந்ததால் தோல்வியடைந்துவிட்டேன் என்று கூறி ஓடினான். கலிங்கன் ஓடியபின்பு பீஷ்மரை பீமன் எதிர்த்து போரிடத் தொடங்கினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!