Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 12 மே, 2020

பதினான்காம் நாள் போர்.!

அர்ஜூனனின் சபதத்தை கேட்ட ஜெயத்திரதன் பயந்து கொண்டான். அர்ஜூனனை சபதத்தை எண்ணி துரோணர் கலங்கினார். அன்றைய போர் பயங்கரமாய் இருக்கும் என உணர்ந்தார்கள். அதற்கேற்ப பத்மவியூகம், சகடவியூகம் என வியூகங்களை வகுத்தனர். போர் முரசங்கள் பேரொலி செய்து இருதரப்புப் படைகளையும் போருக்கு அழைத்தது. ஜெயத்திரதன், அர்ஜூனனிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக அவனை நடுவில் நிறுத்தி சுற்றிலும் யானை, குதிரை, தேர், காலாள் என்ற நான்கு வகைப் படைகளையும் துரோணர் நிறுத்தினார். வீரமும் வல்லமையும் மிகுந்த பல அரசர்களை துரோணர் ஜெயத்திரதனைச் சுற்றி நிறுத்தி வைத்தார். சகுனி, சல்லியன், கர்ணன் ஆகியவர்களை வியூகத்தின் முகப்பில் காவலாக நிறுத்தினார்கள். போர் தொடங்கிய போது முதலில் அர்ஜூனன் போரிடுவதற்கு முன் வந்தான். அர்ஜூனனுக்கு அருகில் உத்தமோசன், உதாமன் ஆகிய வீரர்கள் புடைசூழ்ந்து இருந்தனர்.

துரோணரால் மிகுந்த நெருக்கமாகவும் அரிய முறையிலும் அமைக்கப்பட்டிருந்த வியூகத்தின் மேல் அர்ஜூனன் தன் தாக்குதலை ஆரம்பித்தான். துரோணர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு முன்னால் இருந்த படைவீரர்களை சிறிது சிறிதாக அர்ஜூனன் அழித்துக் கொண்டிருந்தான். அந்த நிலையில் துரோணருக்கும், அர்ஜூனனுக்கும் விற்போர் தொடங்கியது. நீண்ட நேரமாக இருவரும் போர் செய்து கொண்டிருந்தனர். ஆனால் கிருஷ்ணர், மாலைக்குள் அர்ஜூனன் செய்த சபதப்படி ஜெயத்திரதனை கொன்றாக வேண்டும். இவ்வாறு நீண்ட நேரம் போர் செய்து நேரத்தை வீணாக்கிவிட்டால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அர்ஜூனன் செய்த சபதத்தை நிறைவேற்ற முடியாமல் போய் விடும் என்று நினைத்து தேரை விரைவாக துரோணரை கடந்து அடுத்த வியூகத்திற்குள் வேகமாகச் செலுத்தினார்.

தேர் தன்னைக் கடந்து ஜெயத்திரதன் இருந்த பக்கமாக உட்புறத்தில் முன்னேறுவதைப் பார்த்த துரோணர் வில்லை வளைத்து அர்ஜூனன் தேரைப் போகவிடாமல் மறித்து மேலும் போருக்கு அழைத்தார். ஆனால் அவர்கள் துரோணரை எதிர்த்து முன்னேறி சென்றார்கள். ஜெயத்திரதன் நின்று கொண்டிருந்த இடத்திற்கு முன்னால் பாசப்படை என்று ஓர் படைப்பிரிவைச் சேர்ந்த படை வீரர்கள் அவனைச் சுற்றி கயிறு பிணித்தது போலப் பிணித்து கொண்டு நெருங்கி நின்றனர். அர்ஜூனனுடைய தேர் அந்தப் பாசப்படை வீரர்களுக்கு முன்னால் சென்று நின்றதும், அர்ஜூனனுக்கும் பாசப்படை வீரர்களுக்கும் போர் உண்டாயிற்று. போர் செய்து கொண்டு இருக்கும் போது அர்ஜூனனுடைய தேரை கிருஷ்ணர் உள்ளே கொண்டு சென்றார். உட்புறம் கர்ணன் தன்னைச் சேர்ந்தவர்களோடு முதல் வரிசையில் நின்று கொண்டிருந்தான்.

அர்ஜூனனுடைய தேர் நுழைவதை பார்த்ததுமே கர்ணன் போருக்கு தயாராகி விட்டான். கர்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் போர் நிகழ்ந்தது. கர்ணன், அர்ஜூனனிடம் விரைவாக தோற்றான். கர்ணன் தோற்ற பிறகு வருணராஜன் புதல்வனான சுதாயு என்ற வீரமன்னனுக்கும் அர்ஜூனனுக்கும் போர் ஏற்பட்டது. சுதாயுவுக்கு கருங்கல்லைப் போல பலமான உடல் வாய்த்திருந்தது. அர்ஜூனன் எய்த அம்புகளில் ஒன்றுகூட அவன் உடலில் தைக்கவில்லை. அர்ஜூனன் எய்த அம்புகள் அனைத்தும் முறிந்து கீழே விழுந்தன. பல நூறு அம்புகளை ஒரே சமயத்தில் பாய்ச்சக்கூடிய மிகப்பெரிய வில் ஒன்றை வளைத்து சுதாயு மேல் அர்ஜூனன் அம்புகளை தொடுத்தான். ஆனால் சுதாயு அவற்றையும் தடுத்தான்.

கோபமடைந்த அர்ஜூனன் தன் வில்லை வளைத்து சுதாயுவின் வில் நாணலை அறுத்துவிட முயன்றான். பலமுறை முயன்றபின் அர்ஜூனன் தன் முயற்சியில் வெற்றி பெற்றான். சுதாயுவின் வில் நாணறுந்து கீழே விழுந்தது. தன் வில்லை அர்ஜூனன் ஒடித்து வீழ்த்தியதை கண்டு அளவற்ற கோபம் கொண்ட சுதாயு தன்னுடைய வலிமை வாய்ந்த ஓர் கதாயுதத்தை அர்ஜூனனுடைய மார்பை குறிவைத்து வீசினான். சுதாயுவின் கதாயுதம் தெய்வீகத்தன்மை பொருந்திய யாராவது ஒருவர் மேல்பட்டால் அப்பொழுதே சுதாயு இறந்துபோக நேரிடும்.

கிருஷ்ணர் அதைப் புரிந்து கொண்டு அர்ஜூனன் மார்பில் மோத வேண்டிய கதாயுதத்தை எதிர்பாராத விதமாக தன் மார்பிலேயே தாங்கிக் கொண்டார். சுதாயு வீசிய கதாயுதம் கிருஷ்ணரின் மார்பின் மேல் விழுந்ததும், சுதாயு தன் தேரிலிருந்து கீழே விழுந்து நெருப்பிற்பட்ட புழுப்போலத் துடிதுடித்து இறந்தான். சுதாயு இறந்ததை கண்டு அவன் தம்பியாகிய சதாயு என்பவன் தன் படைகளோடு அர்ஜூனனை எதிர்ப்பதற்கு ஓடி வந்தான். ஆனால் அர்ஜூனன் இவனையும் தோற்கடித்து சென்றான். அர்ஜூனனின் தேர் பலவகையிலும் முயன்று வியூகத்தை உடைத்துக் கொண்டு ஜெயத்திரதன் இருந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

ஆனால் அர்ஜூனனின் தேர் குதிரைகள் தண்ணீர் தாகத்தால் மிகவும் களைத்து ஓய்ந்து போய் விட்டன. குதிரைகளுக்கு தண்ணீர் காட்டினால் தான் போர் புரிவதற்கு செல்ல முடியும் என்று கிருஷ்ணர் கூறியபோது அர்ஜூனன் தன்னிடமிருந்த வருணாஸ்திரத்தை எடுத்தான். சிவபெருமானை தியானித்து கொண்டு அந்த அஸ்திரத்தை ஆழப்பதியுமாறு தரைக்குள்ளே செலுத்தினான். அதன் மாயசக்தியால் போர்க்களத்தின் நடுவே அவர்களுடைய தேருக்கு அருகில் ஒரு குளம் போன்ற நீர்நிலை உண்டானது. கிருஷ்ணர், அந்த நீரில் இறங்கி குதிரைகளுக்கு தண்ணீர் காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக