Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 20 மே, 2020

பதினேழாம் நாள் போர்..! கர்ணன் நாகாஸ்திரத்தை பிரயோகித்தல்..!

கர்ணனின் புதல்வனான விடசேனனுக்கும் நகுலனுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. விடசேனன் நகுலனைத் தாக்கினான். பலசாலியான விடசேனன் தாக்கியதில் நகுலன் மூர்ச்சை அடைந்தான். அதை கண்ட அர்ஜூனன், மனதில் இந்த விடசேனனை அழிக்காவிட்டால் தன் பக்கத்தில் இருக்கும் படைகள் அழிந்துவிடும். 

ஆகையால் இவனை அழிக்க வேண்டும் என்று எண்ணியபடியே விடசேனன் மேல் அம்புகளைச் செலுத்தினான். அர்ஜுனன் விட்ட ஒரு அம்பு விடசேனனின் தலையைக் கொய்து கீழே தள்ளியது. திடீரென களத்தின் நடுவில் தலை அறுந்து வந்து விழுந்ததைக் கண்ட படை வீரர்கள் திடுக்கிட்டு, ஓடிப் போய்க் கர்ணனிடம் முறையிட்டனர். படைவீரர்கள் கூறியதைக் கேட்ட, கர்ணன், களத்தின் நடுவில் தலை விழுந்து கிடந்த இடத்திற்கு வந்து பார்த்தான். 

களத்தின் நடுவில் கிடந்த தலை, தன்னுடைய மகன் தலையாக இருந்ததைக் கண்டு அலறி துடித்தான். கர்ணனின் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்தது.

கர்ணன், தன் மகனை இழந்து தவித்துக் கொண்டிருந்த அந்த சூழ்நிலையில், தன் சொந்த பகையையும் மறந்து, தேர் பாகனாகிய சல்லியன், கர்ணனுக்கு ஆறுதல் கூறினான். பிறகு மீண்டும் போர் தொடங்கியது. போரில் துச்சாதனன், விடசேனன் ஆகியோர் வரிசையாக இறந்து வருவதை, தொலைவிலிருந்து போரில் கலந்து கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்த அசுவத்தாமனுக்கு மனதைக் கலக்கியது. 

எண்ணற்ற உயிர்களைக் கொன்று குவிக்கும் இந்த பயங்கரமான போரை நிறுத்திவிட்டு பாண்டவர்களும், கௌரவர்களும் சமாதானமானால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மனதிற்குள் எண்ணிய அசுவத்தாமன், திடீரென்று துரியோதனனைச் சந்திப்பதற்காக அவன் இருப்பிடத்திற்கு சென்றான். 

அங்கு சென்ற அசுவத்தாமன், துரியோதனனிடம், போரில் இரண்டு பக்கமும் நிறைய சேதங்கள் ஏற்பட்டு இருக்கிறது.

ஆகையால் போரை நிறுத்திவிட்டு, சமாதானம் அடையுங்கள். மேலும் பாண்டவர்களுக்கு சேர வேண்டிய நாட்டையும், அரசாட்சியையும் அவர்களுக்கு அளித்து விடலாம் என்று கூறினான். அதற்கு துரியோதனன், மரணத்திற்கு பயந்து போரை நிறுத்துவது என்பது ஆண்மைக்கு அழகு இல்லை. 

ஆகையால் என்ன நேர்ந்தாலும், எத்தனை வீரர்கள் இறந்தாலும் போர் செய்வதை நிறுத்தமாட்டேன் என்று கூறினான். கர்ணனின் மகன் இறந்த செய்தியை அறிந்த துரியோதனன் போர்க்களத்திற்கு சென்று கர்ணனுக்கு ஆறுதல் கூறினான். 

துரியோதனனிடம், என் மகனைக் கொன்ற அர்ஜூனனைப் போரில் பழிக்குப் பழி வாங்குவேன் என்று சபதம் செய்து விட்டு, மீண்டும் அர்ஜூனனுடன் தொடர்ந்து போரிட்டான்.

அசுவத்தாமன், கர்ணன் இருவருமாகச் சேர்ந்து அர்ஜூனனைத் தாக்கினர். சல்லியன், கிருஷ்ணர், இருவரும் அவரவர் தேர்களைச் செலுத்த, கர்ணனும் அர்ஜூனனும், வில்லைக் கொண்டு குறி தவறாமல் அம்புகளைச் செலுத்தி, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் போரிட்டனர். 

கர்ணனுக்கும், அர்ஜூனனுக்கு இடையே போர் வெகுநேரம் நிகழ்ந்தது. சக்தியும், தெய்வீகமும் வாய்ந்த அஸ்திரங்களை இருவரும் ஒருவர்மேல் ஒருவர் செலுத்திக் கொண்டனர். கர்ணனுக்கு, அவனுடைய தந்தை கொடுத்த சிறப்பான கணைகளால், அர்ஜூனன் எய்த அம்புகளை எல்லாம் முறித்தான்.

பிறகு கர்ணன் அம்புகளாலேயே அர்ஜூனனுடைய தேரைச் சுற்றி ஒரு வலை போலப் பின்னி, தேரை நகர முடியாதபடிச் செய்தான். கர்ணனின் இந்த செயலை பார்த்த கிருஷ்ணர் உடனே கர்ணனுடைய தேரைச் சுற்றிலும் அதே போல் அம்புகளால் வலை போல் அமைக்குமாறு அர்ஜூனனிடம் கூறினார். 

அர்ஜூனனும் அவ்வாறே செய்தான். இதைப் பார்த்து கர்ணன் திகைத்து நின்றான். தொடர்ந்து போரிட முடியாத கர்ணன், போர் செய்வதை நிறுத்தி விட்டான். அர்ஜூனனும் போரை நிறுத்தினான்.

அர்ஜூனனின் தேரை சுற்றியிருந்த அம்புகள் அனைத்தும் கிருஷ்ணரின் அருளால் நீங்கியது. உடனே அர்ஜூனன், போரில் கர்ணனை கொல்வேன் என்று கிருஷ்ணருக்கு உறுதி அளித்துவிட்டு, அர்ஜூனன் மீண்டும் தேரில் ஏறி கர்ணனுடன் போர் புரிய புறப்பட்டான். 

அர்ஜூனன் போரிடுவதற்காக கர்ணன் இருக்கும் இடத்தின் அருகில் வந்தான். அப்போது கர்ணன், பீமனுடன் போர் புரிந்து கொண்டிருந்தான். கர்ணனை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், நெருப்பு கணையை கர்ணன் மேல் செலுத்தினான் அர்ஜூனன். கர்ணன், அர்ஜூனன் செலுத்திய நெருப்புக்கணையை அழித்து விட்டான். பிறகு இருவரும் தொடர்ந்து அம்புகளை எய்தி போரிட்டனர். 

கர்ணன், அர்ஜூனனை கொல்ல வேண்டும் என்பதற்காக வெகுநாட்களாக வைத்திருந்த நாகாஸ்திரத்தை எடுத்து, வில்லில் தொடுத்து அர்ஜூனனுடைய கழுத்துக்கு நேரே குறி வைத்தான்.

அப்போது அவனுடைய தேர்ப்பாகனாகிய சல்லியன், கர்ணனைத் தடுத்தான். கர்ணா! அர்ஜூனனுக்கு அருகில் கிருஷ்ணர் இருக்கிறார். அவர் ஏதேனும் தந்திரம் செய்து அர்ஜூனனை காப்பாற்றி விடுவார். 

அதனால் நீ அர்ஜூனனின் கழுத்திற்கு குறி வைக்காதே, மார்பு பகுதிக்கு குறி வை என்றான். கர்ணன், சல்லியன் வார்த்தைக்கு சிறிதும் மதிப்பளிக்காமல், அர்ஜூனனுடைய கழுத்துக்கு குறி வைத்து நாகாஸ்திரத்தைச் செலுத்தினான். கர்ணன் அர்ஜூனன் கழுத்தை நோக்கி நாகாஸ்திரத்தைச் செலுத்துவதைப் பார்த்த கிருஷ்ணர், நாகாஸ்திரம் அர்ஜூனனுடைய கழுத்தை நெருங்குவதற்கு முன்பாக தேரின் சக்கரங்களை பூமியில் பதிந்துவிடும்படி அழுத்தினார்.

கர்ணன், அர்ஜூனனை நோக்கி செலுத்திய நாகாஸ்திரம் குறி தவறி, அர்ஜூனனின் தலையில் இருந்த கிரீடத்தை உருட்டித் தள்ளிவிட்டு சென்றது. இது கர்ணனுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அப்போதுதான், கர்ணனுக்கு, சல்லியன் சொன்னது போல் மார்புக்கு குறி வைத்திருந்தால், கழுத்திலாவது தாக்கியிருக்கும். 

சல்லியனின் பேச்சை கேட்காமல் அலட்சியம் செய்ததால் ஏமாற்றம்தான் கிடைத்தது என நினைத்து வருந்தினான். அர்ஜுனன், தன் கிரீடத்தை இடறிக் கொண்டு விழுந்த நாகாஸ்திரத்தின்மீது, ஒரு அம்பை எய்தி அதனை இரு இரு கூறாக்கினான். 

ஆனால் அந்த நாகாஸ்திரம், திரும்பி கர்ணனிடம் சென்று, கர்ணா! என்னை மீண்டும் ஒரு முறை அர்ஜூனன் மேல் செலுத்தினால் நிச்சயம் நான் அர்ஜூனனைக் கொன்று விடுவேன் என்றது.

அதற்கு கர்ணன், நான் உன்னை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த மாட்டேன் என்று அன்னை குந்திக்கு வரம் கொடுத்திருக்கிறேன் என்று கூறி மறுத்துவிட்டான். கர்ணன், கூறியதைக் கேட்ட நாகாஸ்திரம் மனவேதனையுடன் அப்பொழுதே அழிந்து மாண்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக