Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 8 மே, 2020

பத்தாவது பாஸ்

ரகு என்பவன் மதுரையில் பத்தாவது படித்து வந்தான். அவன் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தான். அதை அவன் பெற்றோரிடம் மறைத்து விட்டான்.

 ஒரு நாள் ரகு தனது கிராமத்திற்கு வந்தான். பஸ்ஸிலிருந்து இறங்கியதும் நாதஸ்வரமும் மேளதாளமும் முழங்கியது. ரகுவின் தந்தை பாண்டித் தேவர் தன் கையில் இருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார்.

 அந்த கிராமத்தில் ரகு ஒருவன் தான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான். அவன் படித்து அந்த கிராமத்தை முன்னுக்குக் கொண்டு வருவான் என்று எல்லோருமே நம்பினர். ரகுவை எல்லோரும் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

 ரகுவின் அம்மா பேச்சியம்மா ரகுவிற்கு ஆரத்தி எடுத்தாள். பாஸ் பண்ணிட்டியாப்பா என்றாள் அம்மா. ஆமாம்மா பாஸாயிட்டேன். ஒரே ஒரு பொய்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டான். ஆனால் அடுத்தடுத்து ஊரில் கேட்கும் எல்லோருக்கும் அதே பொய்யைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது.

 என்னா தம்பி மேல படிக்கப் போறீயா? நீ டாக்டருக்குப் படிக்கப் போறியாமே, இனி மதுரையிலேயே படிக்கலாமா. இல்லை மெட்ராசுக்குப் போவணுமா? என்று ஆளுக்கு ஒரு கேள்வியாகக் கேட்டனர். இவனும் ஓயாமல் பொய் சொன்னான்.

 ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் சொல்ல வேண்டி வரும் என்று தன் ஆசிரியர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அடுத்த நாள் ரகுவின் அப்பாவும் அம்மாவும் தனது மகன் பாஸ் ஆனால், இவனை பக்கத்து ஊர் கோவிலுக்குக் கூட்டிச் சென்று மொட்டை அடிப்பதாக பிராத்தனை செய்ததை நிறைவேற்றினர்.

 ரகு உண்மையைச் சொல்ல முடியாமல் திண்டாடினான். அடுத்த நாள் ரகுவை காலேஜில் சேர்ப்பதற்கு பாண்டித் தேவர் கறவை மாட்டை கன்றுடன் சந்தையில் விற்றுவிட்டு வந்தார். ரகுவின் அம்மா ஒரு பக்கம் தன் மகன் காலேஜில் படிக்கப் போவது பற்றி ஊர்ப் பெண்களிடம் எல்லாம் முறை வைத்துப் பேசினாள்.

 இனிமேலும் தான் உண்மையை மூடி மறைப்பது சரியல்ல என்று நினைத்த ரகு, அன்று இரவு தன் அப்பா அம்மா இருவரையும் அழைத்து இருவரின் கால்களிலும் விழுந்தான். பெற்றோர்கள் பதட்டம் அடைந்தனர்.

 நான் உங்களிடம் பொய் சொல்லி விட்டேன். நான் தேர்வில் தோல்வியான உண்மையை மறைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லி குலுங்கி அழுதான்.

 ரகுவின் அப்பாவும் அம்மாவும் மலைத்து நின்றனர். பின்னர் பாண்டித்தேவர் அவனை தூக்கி மார்புடன் தழுவிக் கொண்டு என் மகன் காலேஜில் படிக்கிறான் என்று செல்வதை விட அவன் பொய் சொல்ல மாட்டான் என்று சொல்வதையே நான் பெருமையாக நினைக்கிறேன் என்றார் பாண்டித்தேவர்.

 இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொய் சொல்ல மாட்டேன் என்று தந்தையின் கையில் அடித்து உறுதி சொன்னான் ரகு. பாண்டித்தேவர் பெருமைப்பட்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.

நீதி :

பொய் சொல்லி பெற்றோர்களை காயப்படுத்துவதை விட உண்மையை மட்டும் பேசி பெருமையடையச் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!