Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 15 மே, 2020

பதினைந்தாம் நாள் போர்..! துரோணரின் வீழ்ச்சி..!

பதினான்காம் நாள் இரவில் போர் முடிந்து சிறிது நேரத்திற்குள்ளேயே கதிரவன் தோன்றியதால் பகற்போரையும் தொடங்க வேண்டியதாயிற்று. அதனால் பாண்டவர்களும், கௌரவர்களும் பதினைந்தாம் நாள் போருக்காக களத்தில் கூடினார்கள். முதல்நாள் இரவு முழுவதும் உறங்காமல் போர் செய்த களைப்பு இருந்தாலும் இருப்படைகள் உற்சாகத்தோடு போரில் ஈடுபட்டனர். 

துரியோதனன் படையைச் சேர்ந்த பாலவீமன், சோமதத்தன் என்ற இரு சிற்றரசர்களும் அர்ஜூனனுடன் போரிட்டு மாண்டனர். கௌரவர்கள் பக்கம் படைத்தளபதியாக இருந்த துரோணர் தன்னுடைய வில்லாற்றலை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். 

வலிமை வாய்ந்த தேர்ப்படைகளை கொண்டிருந்தவனும், பாண்டவர் படையைச் சேர்ந்தவனுமாகிய குந்தி போஜராஜன் ஒருவன் மட்டும் தைரியமாக துரோணரை எதிர்த்துப் போர் செய்ய முன் வந்தான்.

துரோணருக்கும், குந்தி போஜராஜனுக்கும் போர் நிகழ்ந்து கொண்டிருந்த அதே சமயத்தில் களத்தின் மற்றொரு பகுதியில் சல்லியனுக்கும் நகுலனுக்கும், மாளவரசனுக்கும் பீமனுக்கும், சாத்தகிக்கும் கர்ணனுக்கும், சகுனிக்கும் பாண்டியனுக்கும் போர் நடந்துகொண்டிருந்தன. 

ஆயுதங்களைப் பிரயோகம் செய்வதில் வல்லவர்களாகிய இருசாராரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் யுத்தம் செய்து கொண்டிருந்தனர். கடந்த பதினான்கு நாட்களாக இல்லாத கோபம் துரோணருக்கு இன்று ஏற்பட்டிருந்தது. திடீரென்று போர்க்களத்தில் துரோணருடைய தேருக்கு முன்னால் ரிஷிமுனிவர், அகத்திய முனிவர் முதலிய பெருந்தவச் செல்வர்கள் தோன்றினர். 

உடனே வில்லை மடக்கி போரை நிறுத்திவிட்டு அவர்களை வணங்கி வரவேற்றார்.

முனிவர்கள் துரோணரிடம், நாங்கள் ஓர் உண்மையை அறிவுறுத்திச் சொல்வதற்காக வந்திருக்கிறோம். நீ ஓர் அந்தணன். சாந்த குணத்தினால் சத்தியச்செயல்களை செய்து உண்மையின் வழியில் வெற்றியைப் பெற வேண்டியது உன் குலத்தின் தர்மம். ஆனால் நீ தத்துவத்தையும், யோக ஞானங்களையும் மறந்து இவ்வாறு போர் புரிவது நியாயம் இல்லை. 

ஆயுதங்களையும், இந்தப் போரையும் விட்டுவிட்டு சத்திய சிந்தனையில் இறங்க வேண்டும். இதை உனக்கு நினைவுபடுத்துவதற்காக நாங்கள் வந்தோம் என்று முனிவர்கள் கூறினார்கள். பிறகு துரோணரை வாழ்த்திவிட்டுச் சென்றனர். துரோணருடைய மனம் முனிவர்கள் கூறியதை கேட்டபின் மாறிவிட்டது. துரோணர், முனிவர்களுக்கு நன்றி செலுத்திவிட்டு ஆயுதங்களை கீழே வைத்து விட்டார்.

இதனை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணர், துரோணர் மோட்சம் அடையவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. அதனால் அவர் மோட்சம் அடைவதற்கு நாம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தனக்குள் நினைத்துக் கொண்டார். 

அதற்காக கிருஷ்ணர், துரோணரை மரணமடையச் செய்வதற்கு தந்திரமான ஒரு செயலை தீர்மானித்து தர்மர் இருந்த இடத்துக்குச் சென்றார். கிருஷ்ணர் தர்மரிடம், நான் கூறப்போகிற தந்திரத்தை நீ நிறைவேற்றித்தான் ஆகவேண்டும் என்றார். மாளவ தேசத்தரசனும், பீமனும் சண்டை செய்து கொண்டிருக்கும்போது பீமன் மாளவனுடைய யானையைக் கொன்று விட்டான். 

அதிர்ஷ்டவசமாக அந்த யானையின் பெயரும் அசுவத்தாமன் தான். துரோணருடைய புதல்வன் பெயரும், மாளவ மன்னனுடைய பட்டத்து யானையின் பெயரும் ஒன்றாக இருப்பதனால் நமக்கு நன்மைதான்.

பீமன் அசுவத்தாமனை கொன்று விட்டான் என்று நீ உரத்த குரலில் கூற வேண்டும். அதைக் கேட்ட துரோணர் தன் மகனாகிய அசுவத்தாமன் இறந்து விட்டதாக எண்ணி மகனை இழந்த துயரத்தால் பேசாமல் மலைத்து நின்றுவிடுவார். 

அவர் மலைத்து நிற்கும் நேரத்தில் துஷ்டத்துய்மன், துரோணர் மீது அம்பு எய்து உயிரைப் பறித்து விடுவான் என்று கிருஷ்ணர் கூறினார். முதலில் தர்மர் இவ்வாறு சூழ்ச்சி செய்வதை ஏற்கவில்லை. 

ஆனால் கிருஷ்ணர் தர்மரிடம் நன்மையை தரும் பொய்யை கூறுவது, மெய் கூறுவது போலவே ஆகும். நன்மைக்காக பொய் சொல்லலாம் என்பதை நம்முடைய அறநூல்களே விளக்குகின்றன. தீமையை கொடுக்கின்ற உண்மையை கூறினால் அது பொய்க்கு சமம். நன்மையை கொடுக்கின்ற பொய்யை கூறினால் அது மெய்க்கு சமம் என்று கூறி தர்மரை சம்மதிக்க வைத்தார்.

பிறகு தர்மரும் உரத்த குரலில் அசுவத்தாமன் என்னும் சிறந்த யானையை பீமன் என்னும் பலம் பொருந்திய சிங்கம் கொன்றுவிட்டது என்று துரோணருடைய செவிகளில் தெளிவாக கேட்குமாறு தர்மர் கூறினார். தர்மர் கூறியதை கேட்டவுடன் துரோணர் தன் மகன் அசுவத்தாமனைத்தான் பீமன் கொன்றுவிட்டான் என்று எண்ணிக் கொண்டார். 

உடனே மனம் கலங்கி கையிலிருந்த வில்லையும் தோளிலிருந்த அம்பாறாத் துணியையும் கீழே எறிந்து விட்டார். அந்த நேரத்தில் துரோணரை பழி வாங்குவதற்கென்றே வில்லும் கையுமாக நின்று கொண்டிருந்த துஷ்டத்துய்மன் துரோணரின் மார்பில் அம்புகளைச் செலுத்தினான். துரோணர் தேரிலிருந்து கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் அவருடைய உயிரும் உடலிலிருந்து பிரிந்தது.

கண் இமைத்து திறக்கும் நேரத்திற்குள் துரோணரின் மரணச் செய்தி போர்க்களம் எங்கும் பரவி விட்டது. கிருஷ்ணரின் சூழ்ச்சியும், துஷ்டத்துய்மனின் பழிவாங்கும் எண்ணம் தான் நம் தந்தை இறந்ததற்கு காரணம் என்று அறிந்த அசுவத்தாமன் கோபத்தோடு எழுந்தான். 

தன்னிடமிருந்த நாராயணாஸ்திரத்தை எய்து அவர்களை சர்வ நாசம் செய்யப்போகிறேன் என்று கூறிக்கொண்டு நாராயணாஸ்திரத்தை கையிலெடுத்தான். அசுவத்தாமன் நாராயணாஸ்திரத்தை எடுத்தவுடன் கிருஷ்ணர் அதிர்ச்சி அடைந்தார். கையில் ஆயுதமின்றி முனிவர்களைப் போல அமைதியாக நிற்பவர்களை தவிர மற்ற எல்லோரையும் கொல்லும் சக்தி வாய்ந்தது அந்த அஸ்திரம். 

அந்த அஸ்திரத்தை அவன் பாண்டவர்கள் மேல் எய்துவிட்டால் பாண்டவர்கள் பூண்டோடு அழிந்துவிடுவார்கள். பாண்டவர்களை காப்பற்ற வேண்டுமானால் அவர்கள் எல்லோரையும் ஆயுதமின்றி நிற்கச் செய்ய வேண்டுமென்று கிருஷ்ணர் நினைத்தார்.

உடனே பாண்டவர்களை அழைத்து கையில் எந்த ஆயுதமும் இல்லாமல் சாந்தமாக நிற்குமாறு கூறினார். பீமன் ஒருவனை மட்டும் ஆயுதத்தோடு இருக்கச் செய்தார். பீமனை தவிர மற்றவர்கள் எல்லோரும் ஆயுதங்களின்றி அமைதியாக நின்றனர். 

அசுவத்தாமன் கோபத்துடன் வில்லை வளைத்து அதில் நாராயணாஸ் திரத்தைப் பொருத்தி தொடுத்தான். அந்த அஸ்திரம் ஆயுதமில்லாமல் நின்றவர்களையெல்லாம் எதுவும் செய்யாமல் பீமன் மேல் மட்டும் பாய்ந்தது. 

ஆனால் பீமன் தன் பலத்தினால் நாராயணாஸ்திரத்தையும் அதில் தோன்றிய கிளை அஸ்திரங்களையும் துண்டித்து எறிந்தான். தோல்வியினால் முடக்கப்பட்ட நாராயணாஸ்திரம் திரும்பி வந்து பயனற்ற பொருளாக அசுவத்தாமனையே அடைந்தது.

பிறகு அசுவத்தாமன் நாராயணாஸ்திரத்தை விட வலிமையான பாசுபதாஸ்திரத்தை கையிலெடுத்தான். அதை அவன் வில்லில் தொடுத்து எய்வதற்காக வளைத்தபோது, சற்றும் எதிர்பாராத விதமாக வியாச முனிவர் அவன் முன்பு தோன்றினார். 

அசுவத்தாமனிடம் முனிவர், துஷ்டத்துய்மன் கையால்தான் உன் தந்தை இறக்க வேண்டும் என்பது நியதி. இறப்பு மனிதனுக்கு இயற்கை விதிப்படி நேருவது. அதற்கு யாரும் எப்போதும் காரணமாக முடியாது. வியாசர் கூறிய சொற்களால் மனம் தெளிந்த அசுவத்தாமன் பாசுபதாஸ்திரத்தை உபயோகிக்கும் எண்ணத்தை விட்டுவிட்டான். 

அதன் பின் சூரியன் அஸ்தமித்தவுடன் போர் முடிந்தது. இருசாராரும் பாசறைக்கு திரும்பினர். துரோணர் தங்களுக்கு எதிரியானாலும் பாண்டவர்கள் அவருடைய மரணத்துக்காக மனம் வருந்தினர். துரோணரின் வீழ்ச்சியோடு பதினைந்தாம் நாள் போர் முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!