Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 4 ஜூன், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 035

திருநாளைப் போவார் நாயனார் !!

நீர் வளமும், நில வளமும் நிரம்பப் பெற்ற சோழ மண்டலத்தில் கொள்ளிட நதியின் அருகில் மேற்காநாடு அமைந்துள்ளது. அந்நாட்டில் ஆதனூர் என்னும் சிவத்தலம் அமையப்பெற்ற சிற்றூர் உள்ளது. பசுமையும், செழுமையும் நிறைந்த வயல்வெளிகள் யாவும் நிரம்பப் பெற்ற பகுதிக்கு அருகாமையிலேயே சிறு சிறு குடிசைகள் அமைத்து புலை‌‌யர் குல மக்கள் யாவரும் குடும்பம் குடும்பமாக வாழ்ந்து விவசாய பணிகளை மேற்கொண்டு மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். அவ்விதம் வாழ்ந்து வந்த மக்கள் கூட்டத்தில் ஒருவர்தான் நந்தனார் என்பவர் ஆவார்.

பூமி தாயின் மடியில் பிறந்து அவர்களை செம்மைப்படுத்தும் தொழிலை மேற்கொண்டு இருந்தாலும், பரமனுடைய எண்ணங்களையும் அவருடைய திருவடியையும் எந்நிலையிலும் மறவாது மற்றொன்றையும் மறந்தும் நினையாதவராக வாழ்ந்து வந்தார். தாம் வாழ்ந்து வந்த ஊரில் தமக்கு விவசாய பணிகளை மேற்கொண்டு சீர் அமைப்பதற்காக விடப்பட்டிருக்கின்ற மானியமாகிய நிலத்தில் விளையும் பொருட்களின் மூலம் தனக்கான ஜீவனம் செய்து கொண்டு தம்முடைய குலத்தினர் செய்யும் தொழில்களில் மற்றவர்களை காட்டிலும் மேம்பட்டு விளங்கினார் நந்தனார்.

அதாவது தமக்கு கிடைக்கும் தோல், நரம்பு போன்றவற்றை வியாபாரம் செய்து தம்முடன் வாழும் மக்களை போல் தன்னுடைய செல்வத்தை அதிகமாக சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் கோவில்களுக்கு பயன்படும் பேரிகை முதலான கருவிகளுக்கு வேண்டிய பொருட்களை எவ்விதமான எதிர்பார்ப்பும் இன்றி அரணாருக்கு அர்ப்பணித்து வந்தார். எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களுக்கு இப்பிறவியில் தம்மால் இயன்றளவு தொண்டுகள் பல புரிந்து வந்தார். திருத்தலங்களில் உள்ள வீணைக்கும், யாழுக்கும் தேவையான நரம்புகள் மற்றும் எம்பெருமானை ஆராதனை செய்வதற்கு தேவையான பொருட்களான கோரோசனை போன்ற நறுமணப் பொருட்களை வழங்கி வந்தார்.

இவ்விதமாக நந்தனார் இறைவனுக்கு தன்னால் இயன்றளவு பல வழிகளில் இடையுறாது அருந்தொண்டு செய்து வந்தார். அக்காலத்தில் தாழ்ந்த குலத்தோர் எனக் கருதப்படுவோர் எம்பெருமான் இருக்கும் தலத்திற்கு சென்று இறைவ‌னை வழிபடத் தடைகள் இருந்து வந்தது. அவ்விதமாக ஏற்படுத்தப்பட்ட தடைகளால் நந்தனார் திருத்தலத்திற்கு உள்ளே சென்று வழிபடாமல் வெளி‌யே இருந்த வண்ணம் இறைவனை மனதிலேயே எண்ணி வழிபட்டு அவரை போற்றி பாடி ஆனந்தக் கூத்தாடி பெருமகிழ்ச்சி கொண்டார்.

எம்பெருமானை தமக்கு அறிந்த பொருள்களை கொண்ட பாடல்களினால் மகிழ்வித்து ஆடிப்பாடி வாழ்ந்து வந்த நந்தனார் ஒருமுறை திருப்புன்கூர் திருத்தலத்திலுள்ள திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் சிவலோகநாதரைத் தரிசிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டார். மேலும் அத்திருத்தலத்திற்கு தம்மால் இயன்றளவு திருப்பணிகள் யாவும் செய்து மனம் மகிழ வேண்டும் என்று விரும்பி, ஒருநாள் அத்திருத்தலத்தினை நோக்கி பயணத்தை மேற்கொண்டு அக்கோவிலை அடைந்தார்.

திருத்தலத்தின் உள்ளே சென்று வழிபட முடியாமையால் சிவலோக நாதரை தலத்தின் வெளியி‌லேயே நின்று வழிபட்டு போக விரும்பினார் நந்தனார். அவருடைய எண்ணமும், ஆசையும் நிறைவேறாதது போல் சூழல் ஏற்பட்டது. அதாவது, சிவலோகநாதரை காணாத வகையில் மறைத்துக் கொண்டு இருந்தார் நந்திதேவர். அதைக் கண்டதும் நந்தனாருக்கு தாங்க இயலாத வகையில் மனக்கவலை ஏற்பட்டது. காண வந்த எம்பெருமானின் திவ்ய தரிசனம் தம்முடைய விழிகளுக்குக் கிடைக்காமல் போய்விடுமோ?... என்று அச்சம் கொண்டு விழி கலங்கினார்.

அச்சமயத்திலும் மனதில் சிவ சிவ என்று பரமனின் திருநாமத்தையே எண்ணிக் கொண்டிருந்தார். திருத்தலத்தின் வெளியே மனம் உடைந்து தன்னை காண வேண்டும் என்று காத்துக்கொண்டு இருக்கும் பக்தரின் விருப்பத்தினை நிறைவேற்றும் பொருட்டு சிவலோகநாதர் தம்மை மறைத்துக் கொண்டிருந்த நந்தியைச் சிறிது விலக்கினார். கர்ப்பக்கிரகத்தில் தீபாராதனை ஒளியில் ஆனந்தச் சுடராய் அருள் வடிவமாக காட்சியளிக்கும் சிவலோக நாதரின் திருத்தோற்றத்தை தமது விழிகளால் கண்டு மனதாலும், உள்ளத்தாலும் மகிழ்ந்து, நிலத்தில் வீழ்ந்து பலமுறை வணங்கினார் நந்தனார்.

மேலும் சிவலோகநாதரைப் பல வழிகளில் போற்றிப் பாடிப் பாடி ஆனந்தம் கொண்டார். இறை வெள்ளத்தில் மூழ்கி... மிதந்து... தத்தளித்து கொண்டிருந்தார். மனதில் இதுவரை இல்லாத மகிழ்ச்சியும், பேரின்பமும் கொண்டு திருத்தலத்தினை பலமுறை வலம் வந்தார். எம்பெருமான் அளித்த திவ்ய தரிசனத்தால் நந்தனார் மன நிறைவோடு ஊருக்குப் புறப்பட்டார்.

தனது ஊருக்கு திரும்பிக் கொண்டு இருக்கும்போது ஊரின் மையப்பகுதியில் ஒரு பெரிய பள்ளம் ஒன்று இருப்பதைக் கண்டார். பள்ளத்தைக் கண்டதும் நந்தனார் மனதில் ஒரு நல்ல எண்ணம் கொண்டது. அப்பள்ளத்தில் ஊற்றுகள் உள்ளதா? என ஆராய்ந்து ஊற்றுகள் நிறைந்த பள்ளமான அவ்விடத்தைச் சீராக வெட்டிக் குளமாக்கத் தீர்மானித்து இரவென்றும், பகலென்றும் பாராமல் சிவநாமத்தை மனதில் எண்ணிய வண்ணம் கொண்டு பள்ளத்தை சுவாமி அர்ப்பணித்தார். தமது மனதில் எண்ணிய எண்ணத்தை செயல் வடிவமாக மாற்றி செய்து முடித்தார். தமது பணிகள்யாவும் நிறைவு பெற்ற பின்பு தமது ஊரான ஆதனூருக்கு திரும்பினார். ஆதனூரை அடைந்ததும் நந்தனார் திருப்புன்கூரில் கண்ட சிவலோகநாதர் காட்சியானது நினைவில் இருந்து அகலாமல் இருந்தது.

மனமானது திருப்புன்கூர் மீண்டும் சென்று திருப்புன்கூர் பெருமானை வழிபட வேண்டும் என்ற எண்ணம் உதயமானதும் உடனே சிவலோகநாதரை காண ஆதனூரை விட்டு புறப்பட்டு சென்று திருப்புன்கூரை அடைந்து எம்பெருமானை வழிபட்டார். மீண்டும் மீண்டும் எம்பெருமானை தரிசித்த பின்பு இப்பிறவியில் தாம் எடுத்த பிறவியின் முழுப்பயனையும் அடைந்துவிட்டதாக மனம் மகிழ்ந்தார். சித்தமே எம்பெருமானின் திருவடிகளில் இருந்தமையால் அரணார் பற்றிய எண்ணங்களில் மூழ்கி வந்தார் நந்தனார். நாட்கள்யாவும் நகரத் துவங்கின.

நந்தனார் மேற்கொண்ட தொண்டு பணிகள்யாவும் எவ்விதமான தடைகள் இன்றி எண்ணிய விதத்தில் நடைபெற்று வந்தன. அது மட்டுமல்லாது பல்வேறு தலங்களுக்கு சென்று எம்பெருமானை வழிபாடு செய்து வந்த நந்தனாரின் பக்தி உள்ளத்தில் ஒரு ஆசை பிறந்தது. சிவத்தலங்களில் ஒப்பற்றதாய் விளங்கும் சிதம்பர தலத்திற்கு சென்று அம்பலக்கூத்தனை வழிபட்டு வரவேண்டும் என்ற தணியாத காதல் அவரிடம் எழுந்தது. இரவு வேளையில் துயில் கொள்ளப் போகும்போது பொழுது விடிந்ததும் எப்படியாவது தில்லைக்குப் புறப்பட்டு செல்ல வேண்டும் என்று எண்ணம் கொண்டு துயில் கொள்வார்.

ஆனால் பொழுது விடிந்ததும் அவரது மனதில் தோன்றிய எண்ணமானது கதிரவனைக் கண்ட பனி விலகுவது போல் மறைந்துவிடும். விடிந்தபின் நான் சிதம்பர தலத்திற்கு போனால் திருக்கோவிலினுள்ளே சென்று எம்பெருமானை வழிபட முடியாது என்பது புலப்பட்டவுடன் இதுவும் எம்பெருமானின் திருவிளையாடல்தான் என்று எண்ணி தமது எண்ணத்தை மாற்றி அன்றைய பொழுதிற்கான பணிகளை மேற்கொள்ள துவங்கிவிடுவார். பின்னும் ஆசைகள் அதிகம் ஆவதால் 'நாளைக்குப் போவேன்" என்று கூறிக்கொண்டு இருப்பார். இப்படியே 'நாளைக்குப் போவேன் நாளைக்குப் போவேன்" என்று அநேக நாட்களை கழித்தார். அதனால் அவருக்குத் திருநாளைப்போவார் என்னும் பெயர் உண்டாயிற்று.

ஒருநாள் நந்தனாரின் இதயத்தில் எழுந்த தில்லைக்கு சென்று வழிபட வேண்டும் என்ற ஆசையானது அவருக்கு வேண்டிய தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அளித்தது. நாளை சென்று வழிபடுவோம் என்று நாட்கள் கடத்தி கொண்டு வந்த நந்தனார் ஒருநாள் மனதில் துணிவு கொண்டு தில்லைக்குப் புறப்பட்டார். நந்தனார் தில்லையின் எல்லைக்கு வந்தடைந்தார். தில்லை நகரில் வாழ்ந்து வந்த அந்தணர்கள் நடத்திய வேள்வியில் எழுந்த புகையானது விண்ணை முட்டி மேகத்தோடு ஒன்றாக கலந்திருந்தது. வேள்வி சாலைகளில் இருந்து எழும்பிய எம்பெருமானின் திருநாமம் தில்லை எங்கும் ஒலித்துக்‌ கொண்டிருந்தன.

இந்த காட்சிகளை கண்டதும் பனி மேகம் சூழ்ந்த கைலாய மலையானது தில்லைக்கு இடம் பெயர்ந்தது போல் காட்சியளித்தது. இங்கு நிகழ்பவை அனைத்தையும் கண்டதும் நந்தனாருக்கு என்ன செய்வது? என்று புலப்படாமல் தில்லையின் எல்லையிலேயே நின்று கொண்டிருந்தார். எல்லையில் வெகுநேரமாக நின்று கொண்டிருந்த நந்தனாருக்கு நகருக்குள் சென்று எம்பெருமான் வீற்றிருக்கும் திருத்தலத்தை காண முடியாததை எண்ணி மனம் கலங்கினார். இருப்பினும் எம்பெருமானின் மீது கொண்ட காதலும், பக்தியும் அதிகரித்தது. எம்பெருமானின் எண்ணம் அவர் மனதில் தோன்றியதும் அவரின் மனக்கவலைகள் குறைய தொடங்கின.

கவலையில்லாத மனமும், எம்பெருமான் சிந்தையுடன் கூடிய மனதாலும் சிரத்தின் மீது கரத்தை தூக்கி இவ்விடத்தை தொழுது வணங்கினார். இவ்விதமாக ஆடிப்பாடி மகிழ்ந்த நிலையில் தன்னையும் அறியாமல் தில்லையின் எல்லையைத் தாண்டி நகரத்தை சுற்றி அமைந்திருந்த மதிற்புறத்தை அடைந்தார். அதைக் கண்டதும் வணங்கி நின்றார். இரவு, பகல் என்று பாராமல் அந்த மதிலை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார். அவரால் திருத்தலத்தின் அருகில் இருந்தும் உள்ளே செல்ல முடியாத நிலையில் இருந்தார்.

திருக்கோவிலின் வாயில் கதவானது இரவு, பகல் என்று பாராமல் திறந்து இருந்த போதும் தீண்டாமை என்னும் நோயானது அவரை உள்ளே செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தியது. தனக்கு ஏற்பட்ட இந்த நிலையை எண்ணி மனம் வருந்தினார். எம்பெருமானை திருத்தலத்தின் உள்ளே சென்று வழிபாடு செய்யும் பேறு எமக்கு இல்லையே...! ஆனந்த நடனம் புரிந்து, அருள்புரிந்து கொண்டிருக்கும் எம்பெருமானின் காட்சியை தரிசிக்க கொடுத்து வைக்காத விழிகளை கொண்டிருந்தும் என்ன பயன்? கண்கள் இருந்தும் காணமுடியாத குருடன் போல் நிற்கின்றேனே...! என்றெல்லாம் பலவாறாக எண்ணிய வண்ணம் அம்பலத்தரசனை சிந்தையில் கொண்டு தன்னை மறந்த நிலையில் நிலத்தில் சாய்ந்தார். இப்படியாக நாட்கள் பல உருண்டோடின. ஆயினும் அவருடைய ஆசை மட்டும் ஈடேறவே இல்லை.

பக்தர்களின் அன்புக்கு அடிப்பணிந்தவர் ஆயிற்றே எம்பெருமான். நந்தனார் அடைந்து வந்த இன்னல்களை புரிந்து கொண்டதும் அவருடைய மனதில் கொண்ட ஆசையை நிறைவேற்றும் பொருட்டு எம்பெருமான் நந்தனாருக்கு காட்சியளிக்க விருப்பம் கொண்டு அருள்புரிய தமது திருவிளையாடலை துவங்கினார். ஒருநாள் எம்பெருமானின் எண்ணங்களை மனதிலும், சிந்தையிலும் கொண்டு தம்மை மறந்து துயில் கொண்டிருந்த நந்தனார் கனவில் எம்பெருமான் எழுந்தருளி நந்தா... வருத்தம் கொள்ள வேண்டாம்... எமது தரிசனம் உமக்கு கிடைக்க யாம் வழி செய்கிறோம்... நீ இந்த பிறப்பு நீங்கும்படி நெருப்பில் மூழ்கி எழுந்து முப்புரி நூலுடன் எம்முன் வந்து அணைவாய் என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்.

பரமன் நந்தனாருக்கு சொப்பனத்தில் தோன்றி அருள் செய்தாற்போல், தில்லை நகரில் இருந்துவந்த தில்லைவாழ் அந்தணர் சொப்பனத்தில் தோன்றி எம்மை எந்நாளும் வழிபாடு செய்து மகிழும் நந்தன் திருக்குளத்திலே உதயமானவன். அவன் உள்ளே வர இயலாமல் திருமதில் புறத்தே அவன் துயில் கொண்டு உள்ளான். நீவிர் அவனை அழைத்து வந்து தீயிடை மூழ்கச் செய்து என் சன்னிதிக்கு அழைத்து வாருங்கள் என்று ஆணையிட்டு மறைந்தார்.

எம்பெருமானின் ஆணைப்படியே மறுநாள் காலைப் பொழுதில் தில்லைவாழ் அந்தணர்கள் அனைவரும் மனமகிழ்ச்சியோடு எழுந்து எம்பெருமானை பணிந்தபடி மதிலின் புறத்தே வந்தனர். எம்பெருமானை மனதில் நினைத்து ஆறாக் காதல் கொண்டு உருகும் நந்தனாரின் அருகில் சென்று அம்பலத்தரசன் ஆணையை நிறைவேற்ற நாங்கள் வந்துள்ளோம் என்றும், எம்பெருமான் எங்கள் இடத்தில் ஆணையிட்டதற்கு ஏற்ப நீங்கள் மூழ்கி எழுவதற்காக தீ மூட்டித்தருகிறோம். நீங்கள் நெருப்பிடை மூழ்கி எழுக... என்று வேண்டிக் கொண்டனர்.

தில்லை அந்தணர்கள் தம்மை நோக்கி வந்து தம்மிடம் மொழிந்‌ததைக் ‌கேட்டதும் மனம் மகிழ்ந்து அவர்களை வணங்கினார். அந்தணர்கள் மதிற்புறத்தே நெருப்பை மூட்டி நந்தனார் மூழ்கி எழுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். நந்தனார் எம்பெருமானின் திருவடிகளை மனதில் எண்ணிய வண்ணம் அக்னியை வலம் வந்தார். கொழுந்துவிட்டு எரிந்த அக்னி பகவானிடம் தியான நிலையிலேயே நெருப்பில் மூழ்கினார். அக்னியில் மூழ்கிய நந்தனாரின் பழைய தேகத்தை ஒழித்து,

கலங்கம் எதுவும் இல்லாத பசுவின் மடியில் இருந்து கறந்த பால் போன்ற மேனியும்...

நெற்றியில் திருவெண்ணீற்று ஒளியும்...

கண்டத்தில் ருத்ராட்ச மாலையும்...

முப்புரி நூலும் விளங்க...

தூய முனிவரைப் ‌போல் சடை முடியுடன்..

இருள் நீக்கும் கோடி கதிர்கள் கொண்ட கதிரவனின் பிரகாசத்துடன்...

அவருக்காக மூட்டப்பட்டு இருந்த அக்னில் இருந்து புதிய தேகத்துடன் வெளியே வந்த நந்தனாரின் அருள் வடிவத்தை கண்டதும் தில்லைவாழ் அந்தணர்கள் மனம் மகிழ்ந்தனர்.

நந்தனாரை வாழ்த்தியும், வணங்கியும் ஆசியும் பெற்றனர்.

வானில் இருந்த தேவர்கள் அனைவரும் மலர்மாரி பொழிந்தனர்.

சிவகணங்கள் யாவும் வேதம் முழங்கினர்.

நான்மறைகள் ஒலித்தன.

நந்தனார் எம்பெருமானை காண்பதற்காக தில்லைவாழ் அந்தணர்கள் வழிகாட்டி முன் சென்றனர்.

தமது மனதில் இருந்த கவலைகள் யாவும் அறவே அழித்து தாம் விரும்பியது போல் எம்பெருமானின் அருளால் கிடைத்த புதிய தேகத்துடன் திருத்தலத்தின் உள்ளே சென்றார். உள்ளே சென்றதும் கோடி புண்ணியம் அருளும் கோபுரத்தை அணுகி, அதனை நமஸ்கரித்து எழுந்து, உள்ளே சென்று கனகசபையை அடையும் பொருட்டு சென்று கொண்டிருந்தார்.

மனதில் ஐந்தெழுத்து மந்திரத்தை எண்ணிக் கொண்டே ஆடல் புரியும் கூத்தபிரானின் திரு உருவத்தின் முன் சென்றார். குவித்த கரங்களோடு சபாநாயகரின் முன்சென்ற நந்தனார் அவ்விடத்தில் இருந்து எம்பெருமானின் அருளால் அவருடைய திருவடி நிழலிலேயே ஐக்கியமாகி, அர்த்தநாரீஸ்வரரோடு கலந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக