Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 4 ஜூன், 2020

அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் பணியில் மத்திய அரசு! லிஸ்டில் ஒரு சென்னை வங்கி!

என்ன காரணம்
தனியார்மயம். இந்த சொல்லைக் கேட்டாலே, நம் நாட்டில் பலருக்கு ஒரு விதமான பயமும், தயக்கமும் வந்துவிடுகிறது.
இப்போது மத்திய அரசு, ஒரு சில பொதுத் துறை வங்கிகளை தனியாருக்கு கொடுக்க (Bank Privatization) ஆலோசித்துக் கொண்டு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஏன் அரசு வங்கிகளை தனியாருக்குக் கொடுக்கிறார்கள்? எந்த வங்கிகள் பெயர் எல்லாம் இதில் இருக்கிறது? யார் ஐடியா இது போன்றவைகளைத் தான் உள்ளே விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.
என்ன காரணம்
ஒவ்வொரு முறையும் பொதுத் துறை வங்கியை காப்பாற்ற, மத்திய அரசு ஆயிரக் கணக்கான கோடிகளில் பணத்தைக் கொடுக்க வேண்டி இருக்கிறது. இப்படி மக்கள் வரிப் பணத்தை வங்கிகளுக்கு செலவழிப்பதை தவிர்க்கவே, நிதி ஆயோக்கின் ஐடியா படி, அரசு வங்கிகளை தனியாருக்கு கொடுக்க ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.
வங்கிகள் விவரம்
பஞ்சாப் & சிந்த் பேங்க், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மற்றும் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு வங்கி சேவை அளித்து வரும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் போன்ற அரசு வங்கிகளைத் தான் தனியாருக்கு கொடுக்க வழி வகைகளைத் தேடிக் கொண்டு இருக்கிறார்களாம். இந்த வங்கிகள் அரசின் பொதுத் துறை வங்கிகள் ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ் வராத வங்கிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சட்ட ரீதியான நடவடிக்கை
இப்படி மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளை, தனியாருக்கு கொடுப்பதற்கு முன், வங்கிகள் தேசியமயமாக்கல் சட்டத்தில் (Bank Nationalisation Act)-- முதலில் திருத்தம் கொண்டு வர வேண்டுமாம். அதன் பிறகு தான் வங்கிகளை தனியாருக்கு கொடுக்க முடியும் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
நிதி அமைச்சர்
இந்தியாவின் முக்கியமான துறைகள் (Strategic Sector) முதல் தனியார் முதலீடு (Private Capital) வரை எல்லா துறைகளையும் திறந்து விட விரும்புவதாகச் சொல்லி இருந்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதே போல, இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 4 பொதுத் துறை நிறுவனங்கள் தான் முக்கிய துறைகளில் இருக்கும் எனவும் குறிப்பிட்டதாகச் சொல்கிறது டைம்ஸ் நவ் செய்திகள். இது இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது.
அரசு கவனம்
நம்மைப் போன்ற வெகு ஜன மக்கள், சில பெரிய தனியார் வங்கிகளின் பெயரைக் கேட்டாலே, அவர்களிடம் கடன் வேண்டாம் என பயந்து ஓடுவதைப் பார்த்து இருப்போம். அந்த அளவுக்கு தனியார் மீதான பயம், நாட்டில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இப்போது தான் மக்கள் பரவலாக வங்கி சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நேரத்தில் போய் அரசு வங்கிகளை, தனியாருக்கு கொடுக்கும் வேலைகளைப் பார்ப்பது சரியா? என்பதை அரசு ஒன்றுக்கு இரண்டு முறை ஆலோசித்துக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!