Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 23 ஜூலை, 2020

வங்கி ஊழியர்களுக்கு 15% சம்பள உயர்வு- அள்ளிக்கொடுத்த வங்கிகள்!

சம்பள உயர்வு

சுமார் 8.5 லட்சம் வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீதம் வருடாந்தர சம்பள உயர்வு வழங்க இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு சுமார் 7,900 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். விரிவான செய்திகள் உள்ளே...!

பொதுத்துறை வங்கி ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தித் தர வேண்டுமென கடந்த சில ஆண்டுகளாக ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக வங்கி ஊழியர் சங்கங்கள் இந்திய வங்கிகள் சங்கத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் வங்கி ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு வழங்க இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், பொதுத்துறை வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,900 கோடி கூடுதலாக செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வால் சுமார் 8.5 லட்சம் வங்கி ஊழியர்கள் பயனடைவார்கள்.


நேற்று (ஜூலை 22) ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, பொதுத்துறை வங்கி ஊழியர்களின் திறனுக்கு (Performance) ஏற்ப ஊக்கத் தொகை வழங்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. வங்கியின் நிகர லாபத்திற்கு ஏற்ப ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மேலும், அடிப்படை ஊதியம் அகவிலைப்படியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக இந்திய வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்திய வங்கிகள் சங்கத்தின் ஒப்பந்தம் பொதுத்துறை, தனியார், வெளிநாட்டு வங்கிகள் என சுமார் 37 வங்கிகளுக்கு பொருந்தும்.


ஒவ்வொரு ஆண்டும் சம்பளம் மற்றும் படி தொகை 15 விழுக்காடு உயர்த்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஊழியர்களின் திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்குவது பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த நிதியாண்டு முதல் தொடங்குகிறது. ஆனால், தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் விரும்பினால் மட்டுமே வழங்கலாமே தவிர கட்டாயமில்லை.

இந்த புதிய ஒப்பந்தத்தின் விளைவாக தேசிய பென்சன் திட்டத்திற்கு வங்கிகளின் பங்களிப்பு 14 விழுக்காடாக உயரும். இந்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு சுமார் 35 கட்ட பேச்சுவார்த்தை கூட்டங்கள் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!