Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 3 ஜூலை, 2020

இரண்டு தேவதைகள்

நயாகரா நீர்வீழ்ச்சி தொடர்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. நீர்வீழ்ச்சியின் அழகை, இரண்டு தேவதைகள் ரசித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, அனீலஸ் என்ற பறவை, அந்த நீர்வீழ்ச்சிக்கு வந்தது. தேவதைகள் இருவரும் அந்தப் பறவையைப் பார்த்து அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில் குளிக்க வந்துள்ளது, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் நீராடும் என்று இரு தேவதைகள் பேசிக்கொண்டனர். 

அது நீராடுகிற காட்சியைப் பார்ப்பதற்க்கு யோகம் செய்தவர்களாக இருக்கிறோம், என்று பெருமைப்பட்டு கொண்டனர். 

அனீலஸ் பறவையோ, தன் அருகே இரண்டு தேவதைகள் இருப்பதைப் பார்த்து நீர்வீழ்ச்சியில் இன்பமாக குளித்தது.

அந்த நேரத்தில், நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நீர் வேகத்தை தாங்காமல் அனீலஸ் பறவை, தடுமாறியபடி நீரில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ட தேவதைகள் இருவரும் பயந்தனர். 

அதில் ஒரு தேவதை, அனீலஸ் பறவை ஆபத்தில் சிக்கிவிட்டது. நான் சென்று உடனே காப்பாற்றுகிறேன்! என்றாள். உடனே மற்றொரு தேவதை, வேண்டாம். 
அனீலஸ்ஸை நானே சென்று காப்பாற்றுகிறேன். அந்த பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டும் என்றாள். 

அதைக் கேட்ட மற்றொரு தேவதையோ, நானே அனீலஸ்ஸைக் காப்பாற்றப் போகிறேன். எக்காரணம் கொண்டும் உன்னை அனீலஸ்ஸைக் காப்பாற்றும்படி விட்டுக்கொடுக்க மாட்டேன்! என்று பிடிவாதமாகக் கூறியது. 

இப்படியே இரண்டு தேவதையும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்தில், கீச்... கீச்... என்ற கீச் குரல் கேட்டது. இரண்டு தேவதைகளும் திடுக்கிட்டு பார்த்தன. அவர்கள் பக்கத்தில் அனீலஸ் பறவை நின்று கொண்டிருந்தது.

தேவதைகளே! உங்களுக்குள் சண்டை எதற்கு? நான் உயிர் பிழைத்து விட்டேன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன். நானே முயற்சி செய்து உயிர் பிழைத்து உங்கள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன்! என்றது. 

அதைக் கேட்ட இரண்டு தேவதைகளும், வெட்கத்தில் தலை குனிந்தனர். நமக்குள் போட்டியிட்டு தற்பெருமைப்பட்டுக் கொண்டோமே! இந்தப் பறவைக்கு இருக்கிற அறிவு கூட தேவதைகளான நமக்கு இல்லையே! என்று வருத்தப்பட்டனர்.

நீதி :

பிறரை நம்புவதை விட நாம் நம்மை நம்பினால் வாழ்க்கையில் முன்னேரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக