Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 27 ஜூலை, 2020

வெள்ளை யானை பறக்கிறது

மதுராந்தகம் மன்னனுக்குக் கண் பார்வைக் குறைந்து போனது. வெள்ளை யானையின் தந்தங்களைத் தேய்த்து, கண்களில் பூசினால் மறுபடி கண்பார்வை வந்துவிடும், என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். வெள்ளை யானையை உயிரோடு பிடித்து வந்தால், ஒரு ஊரையே பரிசாகத் தருவதாக மன்னன், அறிவித்த செய்தி பரமார்த்தருக்கும், அவரது சீடர்களுக்கும் எட்டியது.

குருநாதா! வெள்ளை யானை கூட இருக்கிறதா? எனக் கேட்டான், மட்டி. தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளையாக இருக்குமாம், என்றான் மடையன்.

குருவே! அந்த யானையைப் பிடித்து வர தைரியம் இருக்கிறதா? என்றான், முட்டாள். உடனே குருவுக்குக் கோபம் வந்து விட்டது! கோழையே! என்னால் முடியாத காரியம் எதுவும் இல்லை? ஆனால், இந்திரனுக்கும் எனக்கும் போன ஜென்மத்தில் இருந்தே தீராத பகை. அதனால் நான் போக விரும்பவில்லை, என்றார்

குருவே! வீட்டுக்கு வெள்ளை அடிப்பது மாதிரி, யானையின் மேல் சுண்ணாம்பினால் வெள்ளை அடித்து விட்டால், கருப்பு யானை வெள்ளையாக மாறிவிடும்! என்றான், மூடன்.

ராஜாவுக்கு சரியாகக் கண் தெரியாததால்! நம் மோசடியைக் கண்டுபிடிக்க முடியாது! ஆளுக்கு ஒரு ஊர் பரிசாகக் கிடைக்கும் என்று மகிழ்ந்தார்கள். பலே, பலே! இப்போதுதான் உங்கள் மூளை நன்றாக வேலை செய்கிறது! எனப் பாராட்டினார், பரமார்த்தர்.

யானைப் பாகனிடம் சென்று, ஒரு நாளைக்கு மட்டும் உங்கள் யானையை வாடகைக்குக் கொடுங்கள். தேவையான பணம் தருகிறோம். நீங்களும் கூடவே வரவேண்டும், என்று கேட்டதும் பணத்துக்கு ஆசைப்பட்டு சரி என்றான்.

நன்றாக இருட்டிய பிறகு, பானை பானையாகச் சுண்ணாம்பு எடுத்து அபிஷேகம் செய்வது போல, யானையின் மேல் ஊற்றி கொஞ்சம் சுண்ணாம்பை வாரி எடுத்து, பயந்து கொண்டே யானையின் வாயில் பூசிவிட்டனர் சீடர்கள். பரமார்த்தரும் வரி வரியாக வெள்ளை அடித்தார்.

குருவே! யானை கருப்பாக இருக்கும்போது தந்தம் வெள்ளையாக இருக்கிறது, அதுபோல யானை வெள்ளையாக இருந்தால், தந்தம் கருப்பாக அல்லவா இருக்க வேண்டும்? எனக் கேட்டான், பாகன். ஆமாம்! சொல்வதும் சரி! என்று அடுப்புக்கரியால் தந்ததில் தேய்த்தான், முட்டாள். இது தேவலோகத்தில் இருந்து பிடித்து வந்தது என்பதை அரசன் நம்புவதற்க்கு இரண்டு இறக்கைகள் கட்டினார்கள்.

யானையைப் பார்த்த குரு, அற்புதம்! இது இந்திர லோகத்து யானையே தான்! என்றபடி அதன் தும்பிக்கையைத் தொட்டுக்கும்பிட்டார். மறுநாள், அரண்மனைக்கு முன்னால் மக்கள் ஜே ஜே என்று இருந்தனர். வெள்ளை யானையைப் பார்ப்பதற்காக மந்திரிகள் புடைசூழ மன்னனும் வந்தான்.

வெளியில் கட்டிய யானையைப் பார்த்த அரசன், அதிசயமாக இருக்கிறதே! இந்த யானையை எங்கிருந்து பிடித்து வந்தீர்கள்? என்று கேட்டான். தேவலோகம் வரை சென்று இதைப் பிடிக்க நாங்கள் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்! என்றான் மூடன்.

தந்தம் மட்டும் கருப்பாக இருக்கிறதே? என்று மந்திரி கேட்டதும், அது வைரம் பாய்ந்த தந்தம்! அப்படித்தான் இருக்கும்! என்றான் முட்டாள். திடீரென்று பலத்த காற்று அடித்ததும். உடனே யானையின் இறக்கைகள் பிரித்துக்கொண்டு கீழே விழுந்தன. உடனே பலத்த மழையும் பெய்தது.

மழை நீரினால் யானையின் மீது உள்ள சுண்ணாம்பு எல்லாம் கரைந்து, வெள்ளை யானை கருப்பாக மாறியது. இதைப் பார்த்த குருவும், சீடர்களும் பயத்தால் நடுங்கினர்! பரமார்த்தரின் சாயம் வெளுத்தது, வழக்கம்போல் தண்டனைக்கு ஆளானார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக