Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

பேராசைக்கொண்ட மந்திரி

 பரமார்த்த குரு, அரசனை ஏமாற்றி, மட நாட்டின் முதல் மந்திரி ஆக ஆனார். அவருக்குத் துணையாகச் சீடர்களும் அரண்மனை ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர்.

நம் குரு அமைச்சர் ஆகிவிட்டதால், இனி கவலையே இல்லை என்று ஐந்து சீடர்களும் மகிழ்ந்தனர். ஒருநாள், மட மன்னன், நமது நாட்டுப் படை பலம் எப்படி இருக்கிறது? என்று பரமார்த்தரிடம் கேட்டான்.

இதுதான் நல்ல சமயம் என்று நினைத்து, மன்னா! உங்களிடம் சொல்லவே கஷ்டமாக இருக்கிறது. நம் நாட்டு யானைகள் எல்லாம் பட்டினியால் வாடி இளைத்து, பன்றிகள் போல் ஆகிவிட்டன! என்று புளுகினார். சீடர்களும், ஆமாம் அரசே! என்று ஒத்து ஊதினார்கள்.

அதைக் கேட்ட மன்னன், அப்படியா? இரண்டு யானைகளை இங்கே அழைத்து வாருங்கள் என்று கட்டளை இட்டான். மட்டியும் மடையனும் இரண்டு பன்றிக்குட்டிகளை அரண்மனைக்குள் ஓட்டி வந்தனர்.

அதைப் பார்த்த அரசன், பார்க்கவே சகிக்கவில்லையே! இவையா நம் நாட்டு யானைகள்? என்று கேட்டான். முதலில் மட மன்னனுக்குக் கொஞ்சம் சந்தேகம் எற்பட்டது. இது யானை என்றால், தும்பிக்கையைக் இல்லையே? என்று கேட்டான்.

மன்னா! எல்லாம் முதலில் தும்பிக்கையுடன் இருந்த யானைகள், பட்டினி கிடப்பதால் உடலும் மெலிந்து, தும்பிக்கையும் சுருங்கி விட்டது என்று விளக்கினார் பரமார்த்தர். இவை மறுபடியும் பழைய உருவம் அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்றான் மடமன்னன்.

மன்னா! இன்னொரு விஷ்யம். அதையும் பாருங்கள், பிறகு வைத்தியம் சொல்கிறோம் என்றார் குரு. நமது நாட்டுக் குதிரைப் படைகளும் இளைத்து ஆட்டுக் குட்டிகள் மாதிரி ஆகிவிட்டன! என்றான் மூடன். அப்படியா? வியப்பாக இருக்கிறதே! என்ன செய்யலாம் என்றான் மன்னன்.

மன்னா! நாங்கள் ஒரு திட்டம் சொல்கிறோம் அதற்கு ஆயிரம் பொற்காசுகள் செலவாகும். அந்த ஆயிரம் பொற்காசுகளையும் எங்களிடமே கொடுத்து விடுங்கள். நாங்கள் எல்லாவற்றையும் பழையபடி குண்டாக்கி விடுகிறோம்! என்றனர், முட்டாளும், மூடனும்.

மடமன்னனுக்கு செலவழிக்க விருப்பமில்லாமல். வேறு ஏதாவது யோசனை இருந்தால் சொல்லுங்கள்! என்று கட்டளையிட்டான். நம் திட்டம் எல்லாம் பாழாகி விட்டதே! என்று வருந்தினார், பரமார்த்தர். அரசே! எல்லா யானைகளையும், குதிரைகளையும் நாட்டில் உள்ள வயல்களில் மேயவிடுவோம்! கொஞ்ச நாளில் சரியாகிவிடும்! என்றான் மண்டு. சரி! என்றான் மடமன்னன்.

 பரமார்த்தரின் ஆணையின்படி, மடநாட்டில் உள்ள பன்றிகள், ஆடுகள் அனைத்தும் அவிழ்த்து விட்டதும், குடி மக்களின் வயல்களில் சென்று மேயத்தொடங்கின. இரண்டே நாளில் எல்லா வகையான தானியங்களும் பாழாகி விட்டன. அடுத்த மாதமே நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்டது. பலபேர் சோற்றுக்கே வழியில்லாமல் இறந்தனர்.

பரமார்த்தரும், சீடர்களும் ஒரு பயனும் இன்றித் தண்டச்சோற்றுத் தடிராமன்களாக இருப்பதைக் கண்ட மன்னன், எல்லோரையும் விரட்டி அடித்தான்.

அடடா! எப்படியாவது ஆயிரம் பொற்காசுகளைச் சம்பாதித்து விடலாம் என்று நினைத்தோம். கடைசியில் இப்படிப் பாழாகி விட்டதே! என்று புலம்பியபடி பழையபடி மடத்துக்கே திரும்பினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!