Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

ஆன்லைன் மூலமாகவே வேலை... பொறியியல் மாணவர்கள் மகிழ்ச்சி!



ஆன்லைன் மூலமாக நேர்காணல் நடத்தி வேலைக்கு எடுக்கும் பழக்கம் சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி செல்லும் பெரும்பாலான மாணவர்களின் நோக்கமும் ஆசையும் படித்து முடித்தவுடன் நல்ல வேலைக்குப் போகவேண்டும் என்பதாகவே இருக்கும். ஒருசிலர் மட்டுமே சொந்தத் தொழில் தொடங்குவதும், அரசு வேலை அல்லது வேறு ஏதேனும் வேலைக்குச் செல்பவர்களும் உள்ளனர். கல்லூரிப் படிப்பை முடிப்பதற்கு முன்னரே கையில் ஒரு வேலை இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதன்படியே கல்வி நிறுவனங்கள் சார்பாகவே வளாக நேர்காணல்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனால்தான் எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என்று பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை மாணவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றனர். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் கூட வளாக நேர்காணல்கள் வாயிலாக மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்துகின்றன. இந்த நடைமுறையில் புதிய டிரெண்ட் உருவாகியுள்ளது. அதாவது, வளாக நேர்காணல்களை கல்வி நிறுவனங்களுக்கு வராமலேயே ஆன்லைன் மூலமாக நடத்தும் பழக்கம் அதிகரித்துவிட்டது. இந்த நடைமுறையில் மாணவர்கள் பலர் வேலைவாய்ப்பு பெற்று நல்ல இடத்தில் செட்டில் ஆகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், இதுமாதிரியான ஆன்லைன் நேர்காணல்கள் வாயிலான வேலைவாய்ப்புகள் சமீபத்தில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போதைய கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி நிறுவனங்கள் மூடிக் கிடப்பதாலும் நேரில் சந்தித்து நேர்காணல் நடத்துவதில் சிரமங்கள் இருப்பதாலும் ஆன்லைன் மூலமான நேர்காணல்களும் மற்ற நடைமுறைகளும் மேலும் சூடுபிடித்துள்ளன. இவ்வாறாக ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்ட நேர்காணலில் வேலைவாய்ப்பு பெற்றதாகவும், 45 நிமிடங்கள் மட்டுமே நேர்காணல் நீடித்ததாகவும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு இறுதியாண்டு மாணவரான புருஷோத்தம் ஹரி கூறுகிறார். ஜூம் செயலி போன்ற வீடியோ கான்பெர்னஸ் தளங்கள் வாயிலாக இதுபோன்ற நேர்காணல்கள் நடத்தப்படுகின்றன.

சென்னையைச் சேர்ந்த கல்லூரியொன்றின் எலெக்ட்ரிகல் & எலெக்ட்ரானிக் பிரிவு பொறியியல் மாணவரான கே.கோவிந்த் கூறுகையில், ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்ட நேர்காணலுக்குப் பிறகு பிராஜெக்ட் ஒன்றைக் கொடுத்து 24 மணி நேரத்தில் முடித்துத்தரும்படி கூறியதாகவும் அதை முடித்த மாணவர்கள் அடுத்தகட்ட தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறாக, சென்னை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளிலும் ஆன்லைன் மூலமான நேர்காணல்களும் அதன் வாயிலான வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!