Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

கடவுளின் அனுமதி

ஒரு நாள் முல்லா ஒரு காட்டு வழியாக வெளியூருக்கு சென்று கொண்டிருக்கும்பொழுது வழியில் ஒரு முரடனிடம் மாட்டிக்கொண்டார். அந்த முரடன் முல்லாவைப் பார்த்து, நீ எவ்வளவு பெரிய ஆபத்து வந்தாலும் அதிலிருந்து உமது சாமர்த்தியத்தால் தப்பி விடுவதாக மக்கள் அனைவரும் உன்னைப்பற்றி பேசிக்கொள்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இங்கே பார் முல்லா, இதோ இந்த உடைவாளால் உன் கழுத்தை இப்பொழுது நான் வெட்டப் போகிறேன். எங்கே உமது அறிவுச் சாதுரியத்தால் என்னிடம் இருந்து தப்பித்து செல் பார்க்கலாம் என்றான் முரடன். உடனே முல்லா திடீரென வானத்தைப் பார்த்து மகிழ்ச்சியுடன் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்று முரடன் கேட்டான்.

அன்பரே, உன்னுடைய கைவாள் என் தலையைத் துண்டிப்பதற்கு முன்பு அதோ வானத்திலே பறந்து கொண்டிருக்கும் வினோதமான தங்கப் பறவையை ஆசை தீரப் பார்த்து விடுகிறேன். அதற்குப் பிறகு நீ என் தலையை வெட்டி விடு என்றார்.

என்னது வானத்தில் தங்கப் பறவையா? என்று கேட்டுக் கொண்டே முரடன் ஆச்சரியத்துடன் ஆகாயத்தை அண்ணாந்து பார்க்கலானான். அதுசமயம் முல்லா முரடனின் கையிலிருந்த வாளைத் தட்டிப் பறித்து கொண்டார்.

நண்பரே, உன்னுடைய உயிர் இப்போ என் கையில் உள்ளது. நான் நினைத்தால் உன் தலையை வெட்டி வீழ்த்த முடியும் என்றார் முல்லா.

முல்லா அவர்களே நீர் வெற்றி பெற்றுவிட்டீர். முல்லாவிடம் மன்னிப்புக்கேட்டான்.

அன்பரே, கடவுள் அனுமதியில்லாமல் எந்த உயிரையும், யாரும் அழித்துவிட முடியாது என்பதை உணர்ந்து கொள் என்று கூறி வாளை முரடனிடம் தந்துவிட்டு முல்லா பயணத்தைத் தொடர்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக