இந்திய ரீடைல் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் பியூச்சர் குரூப் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி அமேசான் சிங்கப்பூரில் வழக்கு நடத்தி வரும் இந்த மோசமான தருணத்தில் ரிலையன்ஸ் ரீடைல் புதிய முதலீட்டைப் பெற்றுள்ளது.
சவுதி அரேபியா நாட்டின் பொது முதலீட்டு நிதி நிறுவனம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் சுமார் 9,555 கோடி ரூபாய் முதலீடு செய்து சுமார் 2.04 சதவீத பங்குகளைக் கைப்பற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.இது தான் இந்திய ரீடைல் சந்தையில் பன்னாட்டு நிறுவனம் செய்த மிகப்பெரிய முதலீடாக உள்ளது.
9வது முதலீடு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ரீடைல் வர்த்தகப் பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை ஈட்ட திட்டமிட்டு நாளில் இருந்து பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக இருந்த நிலையில், தற்போது சவுதி சவரின் பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்டு நிறுவனம் 1.3 பில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 9,555 கோடி ரூபாய் முதலீடு செய்ய ரிலையன்ஸ் ரீடைல் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் சவுதி சவரின் பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்ட், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் 2.04 சதவீத பங்குகளைப் பெற உள்ளது. இந்திய ரீடைல் சந்தையில் பன்னாட்டு நிறுவனம் செய்த மிகப்பெரிய முதலீடாக இது உள்ளது.
47,265 கோடி ரூபாய்
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் சவுதி சவரின் பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் 9வது நிறுவனமாக முதலீடு செய்து 2.04 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.
இதுவரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் சுமார் 10.5 சதவீத பங்குகளை விற்பனை செய்து சுமார் 47,265 கோடி ரூபாய் தொகையை முதலீடாகப் பெற ஒப்பந்தம் செய்துள்ளது.
சில்வர் லேக்
சவுதி சவரின் பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் நிறுவனத்திற்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் முதலீட்டு நிறுவனமான சில்வர் லேக் நிறுவனத்தின் 7,500 கோடி ரூபாய் முதலீடு தான் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடாக இருந்தது.
63,000 கோடி ரூபாய் இலக்கு
ரிலையன்ஸ் ரீடைல் தனது 15 சதவீத பங்குகளை விற்பனை செய்து 60,000 முதல் 63,000 கோடி ரூபாய் தொகையை முதலீடாகப் பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இது நாள் வரையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதலீடு பெற்று வந்தது ரிலையன்ஸ் ரீடைல்.
20 பில்லியன் டாலர்
ரிலையன்ஸ் ஜியோ தனது 33 சதவீத பங்குகளைக் கூகிள், பேஸ்புக், இன்டெல், குவால்காம் என மொத்தம் 14 பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து சுமார் 20 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும் உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக