Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 21 ஜூன், 2021

சளைக்காமல் 22 முறை அபராதத்தை செலுத்தியுள்ள இளம்பெண் வாகன ஓட்டி!! இப்படியும் மனிதர்கள் இருக்காங்க...

ஹைதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போக்குவரத்து போலீஸாரிடம் கிட்டத்தட்ட 22 முறை அபாரதத்தை செலுத்தி இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளார். யார் இவர், ஏன் 22 முறை இவருக்கு செல்லான் வழங்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் எவ்வாறு சுதந்திரமாக செயல்பட உரிமைகள் உள்ளதோ அதேபோன்று அரசாங்கத்தின் சட்டத்திட்டங்களை மதித்து நடக்க வேண்டிய கடமையும் உள்ளது.

இதை ஒவ்வொருத்தரும் புரிந்து கொண்டாலே சட்ட மீறல்கள் நடைபெறுவது குறையும். குறிப்பாக சாலைகளில் நமது ஒழுக்கத்தை கவனிப்புடன் பேண வேண்டும். ஏனெனில் நமது இந்தியா சாலை விபத்துகள் நடைபெறும் நாடுகளில் முதன்மையான இடத்தில் உள்ளது.

இதன் காரணமாக அரசாங்கங்கள் எப்போதும் தவிர்க்க முயற்சிகளை மேற்கொண்டுவரும் விஷயங்களில் சாலை விபத்தின் எண்ணிக்கையும் ஒன்றாக உள்ளது. இதனாலேயே ஹெல்மெட் அணிவது கட்டாயம், நிர்ணயிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் பயணிக்கக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கட்டாயமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஓட்டுனர் மட்டுமின்றி பின் இருக்கையில் அமருபவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் தற்போதைய கொரோனா சூழலை கருத்தில் கொண்டு இ-பாஸ் முறையும் அமலில் உள்ளது.

இப்படி சாலையில் வாகனத்தில் இயங்குவதற்கு பல கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், ஹைதராபாத், நிஸாம்பேட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சாலை விதிமீறல்களில் ஈடுப்பட்டதற்காக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிஸாம்பேட் நகர்பகுதியில் சாலை விதிமீறல்களில் அவ்வப்போது ஈடுப்படுவதினாலேயே பிரபலமானவராக விளங்கிவந்த இந்த இளம்பெண் மொபைல் போனில் பேசிக்கொண்டே மற்றும் ஹெல்மெட் அணியாமல் தனது இருசக்கர வாகனத்தை ஓட்டியதற்காக சுமார் 22 முறை போலீஸாரிடம் அபராதத்தை செலுத்தியுள்ளார்.

இந்த வகையில் சமீபத்தில் மீண்டும் சாலை வீதிமீறலில் ஈடுப்பட்டதற்காக போலீஸாரிடம் சிக்கிய இந்த பெண்ணை போலீஸார் இம்முறை நேரடியாக காவல் நிலையத்திற்கே அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் பெண்ணின் பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சில அறிவுரைகளை வழங்கிய பிறகே அந்த பெண்ணை விடுவித்துள்ளனர். இதுவரையில் இந்த பெண்ணிற்கு விதிக்கப்பட்ட அபராதங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.9 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலீஸார் மட்டுமின்றி இவ்வாறான செயல்களில் தொடர்ந்து ஈடுப்பட்டால் மனநல மருத்துவரிடமும் அழைத்து சென்று இத்தகைய நபர்களை பரிசோதிக்க வேண்டும். ஏனெனில் இத்தகைய செயல்களினால் அவருக்கு மட்டுமின்றி மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!