ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஏற்படுத்திய கடுமையான பாதிப்புகளில் இருந்து இந்தியா மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. ஆனால் இரண்டாவது அலை முழுமையாக ஓய்வதற்கு முன்பே, மூன்றாவது அலை குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் அதிகப்படியான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் மூன்றாவது அலையின் பாதிப்புகளை குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. ஆனால் அரசு அதிகாரிகள், திரை பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகும் கூட, தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு ஒரு சிலர் தயக்கம் காட்டி வருகின்றனர்.
எனவே தடுப்பூசி செலுத்தி கொள்வோருக்கு வித்தியாசமான பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தடுப்பூசி செலுத்தி கொண்டால் புத்தம் புதிய கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் 5 பேர் தேர்வு செய்யப்பட்டு, கார் பரிசளிக்கப்படவுள்ளது.
இந்த வரிசையில் தற்போது புதுச்சேரியிலும் இதேபோன்று விலை உயர்ந்த ஒன்றை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளனர். பெட்ரோல்தான் அந்த விலை உயர்ந்த பரிசு! புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வருகிற ஜூன் 26ம் தேதி தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று அறிவித்துள்ளது. இதன்படி ஜூன் 26ம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை தடுப்பூசி செலுத்தி கொள்ளும் அனைவருக்கும் அரை லிட்டர் பெட்ரோல் வழங்கப்படவுள்ளது.
அதே நேரத்தில் முன்களப்பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் போன்றோர் தடுப்பூசி செலுத்தி கொண்டால், 1 லிட்டர் பெட்ரோல் வழங்கப்படவுள்ளது. பெட்ரோல் இலவசமாக கிடைக்கிறது என்பதால், தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வமாக முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த அறிவிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். நாட்டின் ஒரு சில பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை கடந்திருப்பது வாகன ஓட்டிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விடும் என்பதே இதற்கு காரணம். மத்திய அரசு தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் எண்ணத்தில் இல்லை. மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ''தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது'' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக