ஒரு நிறுவனத்தில் இருந்து ஊழியரை பணியில் இருந்து நீக்குவது என்பது அனைத்து இடத்திலும் நடக்கும் ஒன்று தான், ஆனால் இந்தியரான விஷால் கர்க் தலைமையில் இயங்கி வரும் அமெரிக்க நிறுவனமான பெட்டர்.காம்-ல் சுமார் 900 ஊழியர்களை ஓரே நேரத்தில் எவ்விதமான முன் அறிவிப்பும் இல்லாமல் சில நிமிட வீடியோ கால் வாயிலாக மொத்தமாகப் பணிநீக்கம் செய்திருந்தார்.
விஷால் கர்க் ஜூம் கால் வாயிலாக 900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த வீடியோ உலகம் முழுவதும் வைரலானது, இதுமட்டும் அல்லாமல் வீடியோ கால் முடிந்த உடன் ஊழியர்கள் வைத்திருக்கும் லேப்டாப் பயன்படுத்த முடியாமல் செய்தது பெட்டர்.காம். ஊழியர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத பெட்டர்.காம் மற்றும் விஷால் கர்க் மீதும் கடுமையான வெறுப்பு உலகம் முழுவதும் பரவியது.
900 ஊழியர்களுக்கு மன்னிப்பு
இதைத் தொடர்ந்து விஷால் கர்க் 900 ஊழியர்களிடம் பொது மக்கள் மத்தியிலும் மன்னிப்பு கேட்டார், மேலும் 900 ஊழியர்களை ஜூம் காலில் பணிநீக்கம் செய்யலாம் என்று கூறியது நான் தான் எனவும் விஷால் கர்க் ஒப்புக்கொண்டார். இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க முடியாமல் சில வாரங்கள் விடுமுறைக்குச் சென்றார் விஷால், ஆனால் இதேவேளையில் இந்நிறுவனத்தின் பல உயர் அதிகாரிகள் வெளியேறினர்.
1200 பேருக்கு வேலைவாய்ப்பு
இந்நிலையில் பிரச்சனையை மொத்தமாகச் சமாளிக்கும் வரையில் பெட்டர்.காம் நிறுவனத்தில் புதிதாக 1200 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. இந்த 1200 ஊழியர்களில் பெரும் பகுதி ஊழியர்கள் இந்தியாவில் பணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். தற்போது பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தும் காரணத்தால் 1000 ஊழியர்களையும் இந்தியாவில் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது பெட்டர்.காம்.
இந்தியாவில் 1000 பேருக்கு வேலை
பெட்டர்.காம் நிறுவனத்தின் வருவாய் குறைந்து வரும் வேளையில், செலவுகளும் அதிகரித்து வருகிறது, இதேவேளையில் பெட்டர்.காம் ஐபிஓ வெளியிடவும் திட்டமிட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் வர்த்தகத்தைச் சீர்படுத்த இந்தியாவில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பை அளிப்பதன் மூலம் குறைந்த செலவுகளில் நிறுவனத்தின் சேவைகளை எவ்விதமான தொய்வும் இல்லாமல் நிர்வாகம் செய்ய முடியும்.
இந்திய ஊழியர்கள்
ஜூன் 30ஆம் தேதி SEC-க்கு சமர்ப்பித்த அறிக்கையில் பெட்டர்.காம் நிறுவனம் அமெரிக்காவில் 5000 பேரும், இந்தியாவில் 3100 பேரும் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தது. டிசம்பர் 2021 முடிவில் அமெரிக்காவில் 5200 ஊழியர்களும், இந்தியாவில் 4100 ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 6 மாதத்தில் இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்களின் அளவீடு 38 சதவீதத்தில் இருந்து 44 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக