இந்த கோயில் எங்கு உள்ளது?
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுக்கிரவாரப்பேட்டை என்னும் ஊரில் அருள்மிகு பசுவண்ணன் (சித்தி விநாயகர்) திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து மருதமலை செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள சுக்கிரவாரப்பேட்டை என்னும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
கருவறையில் மூலவராக சித்தி விநாயகர் பசுவண்ணன் என்ற திருநாமத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.
வலது கரங்களில் அங்குசம், தந்தம் மற்றும் இடது கரங்களில் பாசம், மோதகம் ஏந்தி சதுர்புஜ இடம்புரி நாயகனாகத் திகழ்கிறார்.
இடது காலை மடக்கி வலது காலை தாமரை பீடத்தின் மீது வைத்து கம்பீரமாக காட்சியளிக்கிறார். சிலையின் பின்புறம் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கல்லினால் உருவாக்கப்பட்ட திருவாச்சி அமைந்துள்ளது.
ராவணனிடம் ஆத்ம லிங்கத்தைப் பறித்து பிரதிஷ்டை செய்ததால், இவரை வணங்கினால் சிவனையும் தொழுத பலனைப் பெறலாம்.
வேறென்ன சிறப்பு?
கோயில்களில் ஒரு வித்தியாசமான கோயில் இது. முகப்பில் விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பெருமாள், நந்தி மற்றும் வள்ளி, தெய்வானை சமேத முருகன் என சுதை சிற்பங்களின் அணிவகுப்பு உள்ளது.
அர்த்த மண்டபத்தில் சிவலிங்கமும், வாகனமாகிய நந்தியம் பெருமானும் அருளுகின்றனர். முருகன், ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை, தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள் ஆகியோர் தனிச் சன்னிதிகளில் வீற்றிருக்கின்றனர்.
இச்சன்னிதியின் தென்கிழக்கு மூலையில் அரசமரத்தடியில் விநாயகர், நாகம், சிவன் ஆகிய திருமேனிகள் உள்ளன.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
இத்தலத்தில் சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், கோகுலாஷ்டமி ராமநவமி ஆகிய தினங்களில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தாலும் விநாயகர் சதுர்த்தி மட்டுமே தலையாய பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
புதிதாக தொடங்கும் எந்த செயலிலும் தடைகள் வராமல் இருக்க பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது. ஆன்ம பலம் பெறவும், இறைவழிபாடு அதிகரிக்கவும் பசுவண்ணனை வணங்கலாம்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
விநாயகருக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும், அருகம்புல் மாலை சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக