பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களை அழிக்கும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களால் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை கையை மீறி சென்று கொண்டுள்ளது. எனவே டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்துவதற்காக மிக கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய பெட்ரோல் வாகனங்களை டெல்லி சாலைகளில் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை இதற்கு ஒரு உதாரணமாக சொல்ல முடியும். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை டெல்லி அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை அழிக்கும் பணிகளை டெல்லி அரசு தொடங்கியுள்ளது. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.
டெல்லி அரசின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக சமீபத்தில் கூட 12 எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. பொது நிர்வாக துறை இந்த எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கியுள்ளது. பொதுமக்களுக்கு முன் மாதிரியாக டெல்லி அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வேகமாக மாறி கொண்டுள்ளது.
இதுகுறித்து பொது நிர்வாக துறை அதிகாரிகள் கூறுகையில், ''ஆயுட்காலம் முடிந்து விட்ட, அதாவது பழைய வாகனங்களை கண்டறிந்து, அவற்றை அழிப்பதற்கு அனுப்பும் பணிகளை தொடங்கி விட்டோம்'' என்றனர். டெல்லி அரசின் பல்வேறு துறைகளும் தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றன.
இதன்மூலம் வரும் காலங்களில் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி மட்டுமல்லாது, இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளுமே தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் கூட கொடுக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் டாடா நெக்ஸான், எம்ஜி இஸட்எஸ் மற்றும் ஹூண்டாய் கோனா போன்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அத்துடன் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரும் கூட இங்கு மிகவும் பிரபலமாக உள்ளது. மேலும் பல்வேறு எலெக்ட்ரிக் சொகுசு கார்களும் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால் அவற்றின் விலை மிகவும் அதிகம் என்பதால், அவற்றை அனைவருக்குமான தயாரிப்புகளாக பார்க்க முடியாது. தற்போது விற்பனையில் இருக்கும் ஒரு சில எலெக்ட்ரிக் கார்களின் புதிய வெர்ஷன்கள் உள்பட வரும் காலங்களில் இந்திய சந்தையில் ஏராளமான புதிய எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது விற்பனையில் உள்ள நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் புதிய மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய மாடலில் இருக்கும் பேட்டரியை விட இந்த புதிய மாடலில் பெரிய பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதேபோல் எம்ஜி நிறுவனம் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் புதிய வெர்ஷனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. தற்போதைய இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் இருக்கும் பேட்டரியை காட்டிலும் சிறிய பேட்டரியை இந்த புதிய மாடல் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர டாடா அல்ட்ராஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அடுத்த ஒரு சில ஆண்டுகளில், இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் ஆதிக்கம் முழுமையாக அதிகரிக்க தொடங்கி விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக