இந்த கோயில் எங்கு உள்ளது?
சென்னை மாவட்டத்தில் உள்ள பெசன்ட் நகரில் அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
சென்னையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள பெசன்ட் நகரில் அஷ்டலட்சுமி திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னையின் எல்லா பகுதியிலிருந்தும் இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில் நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது.
8 லட்சுமிகளும் ஒரே கோயிலில் தனித்தனி சன்னதிகளில் வீற்றிருப்பது சிறப்பு. இந்த எட்டு லட்சுமிகளும் நான்கு நிலைகளில் காட்சியளிக்கின்றார்.
முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரியலட்சுமி உள்ளனர். இரண்டாம் தளத்தில் மகாலட்சுமியும், மகாவிஷ்ணுவும் உள்ளனர்.
மூன்றாம் தளத்தை அடைந்தால் அங்கு சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்தியா லட்சுமி மற்றும் கஜலட்சுமியும் உள்ளனர். நான்காம் தளத்தில் தனலட்சுமியும் காட்சியளிக்கிறார்.
அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயிலில் கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது, இது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பை ஒட்டி அமைந்துள்ளது.
வேறென்ன சிறப்பு?
இத்திருக்கோயிலில் ஆறுகால பூஜைகள் நடப்பது சிறப்பம்சமாகும்.
இங்கு முழுக்க முழுக்க நெய் விளக்குகள் மட்டுமே ஏற்றப்படுகின்றன.
அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயிலில் பத்து தசாவதாரங்கள், குருவாயூரப்பன், கணபதி, தன்வந்திரி மற்றும் அனுமன் ஆகியோருக்கும் சன்னதிகள் அமைந்துள்ளது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
புரட்டாசி நவராத்திரி திருவிழா 10 நாட்கள் இத்தலத்தில் பத்து விதமான அலங்காரங்களில் நடைபெறும்.
தீபாவளி, லட்சுமி பூஜை, தை வெள்ளி, ஆடி வெள்ளி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இத்தலத்தில் என்னென்ன பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
இத்திருக்கோயிலில் உள்ள மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயிலில் உள்ள சந்தான லட்சுமியை வணங்கினால் குழந்தைவரம் கிடைக்கும்.
வித்யா லட்சுமியை வணங்கினால் கல்வி ஞானம் அதிகரிக்கும்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இத்திருக்கோயிலில் வேண்டியவை நிறைவேறியவுடன் அஷ்டலட்சுமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள், புடவை சாற்றுதல் போன்ற நேர்த்திக்கடன்களை செய்கின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக