Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 11 ஏப்ரல், 2022

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் சிங்கிரிகுடி கடலூர்

இந்த கோயில் எங்கு உள்ளது?

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிங்கிரிகுடி என்னும் ஊரில் அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

கடலூரிலிருந்து சுமார் 37 கி.மீ தொலைவில் உள்ள சிங்கிரிகுடி என்னும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. புதுச்சேரியிலிருந்தும் நேரடி பேருந்து வசதி உள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

பிரகலாதனின் விருப்பப்படி நரசிம்மர் மூலஸ்தானத்தில் 16 திருக்கரங்களுடன், இரணியனை வதம் செய்த கோலத்தில் மிக பிரம்மாண்டமாக அருள்பாலிக்கிறார்.

வடக்கு நோக்கி சிறிய வடிவில் யோக நரசிம்மர், பாலநரசிம்மர் ஆகியோரும் உள்ளனர். இவ்வாறு ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிப்பதை காண்பது அரிது.

நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் தரிசனம் வேண்டி மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர்.

தாயார் கனகவல்லி தனி சன்னதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். பிரகாரத்தில் ராமர், ஆண்டாள், கருடன், விஷ்வக்சேனர், 12 ஆழ்வார்கள், மணவாள மாமுனிகள், தும்பிக்கை ஆழ்வார், விஷ்ணு துர்க்கை, ஆஞ்சநேயர் ஆகியோர் தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.

வேறென்ன சிறப்பு?

உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் பாவன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

நரசிம்மர் தன் 16 திருக்கரங்களில் பதாகஹஸ்தம், பிரயோக சக்கரம், க்ஷீரிகா எனப்படும் குத்து கத்தி, பாணம், சங்கு, வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை ஆகியவை ஏந்தியுள்ளார். மற்ற கரங்களால் இரணிய சம்ஹாரம் நடக்கிறது. குடலைக் கிழிப்பது, குடலை மாலையாகப் பிடித்திருத்தல், இரணியனின் தலையை அழுத்தி பிடித்திருப்பது ஆகிய சாகசங்களைச் செய்கிறார்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

நரசிம்மர் ஜெயந்தியன்று தேர்த்திருவிழா நடக்கிறது. அதற்கு 9 நாட்கள் முன்பாக கொடியேற்றி பிரம்மோற்சவம் தொடங்குகிறது.

மாசி மகத்தன்று புதுச்சேரி கடலில் தீர்த்தவாரி, ஐப்பசியில் பவித்ர உற்சவம், வைகுண்ட ஏகாதசியன்று காலையில் சொர்க்க வாசல் திறப்பு, மாலையில் கருட சேவை, ஜனவரி மாதம் மாட்டுப்பொங்கலன்று தீர்த்தவாரி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், மன நிலை பாதிப்பு, கடன் தொல்லை, எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இத்தலத்தில் வேண்டுதல் நிறைவேறியதும், நரசிம்மருக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து புது வஸ்திரம் சாற்றுகிறார்கள். பக்தர்களுக்கு அன்னதானம் செய்வது இத்தலத்தின் முக்கிய நேர்த்திக்கடனாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!