Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 17 டிசம்பர், 2019

அலசி ஆராய்ந்து... முட்டாளை கண்டுபிடிச்சாச்சு... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!! இது சிரிக்க மட்டுமே...!!

மனைவி : என்னங்க...! முதன் முதலா நீங்க என் கையை பிடிச்சப்ப எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?
கணவன் : அதை வேற ஏன் ஞாபகப்படுத்தணும்னு நினைத்தவாறே எப்படி இருந்துச்சு செல்லம்?
மனைவி : அப்படியே கடவுள் என் கண் முன்னாடி சொர்க்கத்தை காண்பிச்சார்.
கணவன் : இந்த கடவுளுக்கு என்ன ஒரு ஓரவஞ்சனைப் பாரேன். ஒரே நேரத்துல ஒருத்தருக்கு சொர்க்கத்தையும், ஒருத்தருக்கு நரகத்தையும் காட்டியிருக்காரு.
மனைவி : 😠😠
-------------------------------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது...!!

நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது.

உடனடியாக அமைச்சரை வரவழைத்தார். நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன். ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா? என்று அமைச்சரிடம் கேட்டார்.

ஆம் மன்னா! அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்? என்பதை தேடி கண்டுபிடித்து கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு என்றார்.
அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால்கூட ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால், என்ன செய்வது? சொன்னது மன்னராயிற்றே என்பதால் சரி மன்னா... என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டு பேரை மட்டும் அழைத்துக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ? இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்! என்றார் அமைச்சர்.

தொடரும் என்றார் மன்னர். மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்து கொண்டு தன் துணி மூட்டையை தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான். ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னை சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான். இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய முட்டாள் என்றார் அமைச்சர்.

சரி... அடுத்தது யார்? என்று கேட்டார் மன்னர்... இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையை கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான். இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப்பெரிய முட்டாள் என்றார்.

களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்? அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்து கொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் அடுத்தது யார்? என்றார். நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது அதை கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது முட்டாள் என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை. உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான் என ஒத்துக்கொண்டார் மன்னர்.

சரி எங்கே முதலாவது முட்டாள்? மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்து கொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக