Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 3 டிசம்பர், 2019

தனித் தீவில் நித்தி தஞ்சம்..!






குழந்தைகளை அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை செய்த வழக்கில் தேடப்படும் கிராபிக்ஸ் சாமியார் நித்தி, போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டிற்கு தப்பி இருப்பது தெரியவந்துள்ளது. ஈக்வடார் நாட்டின் தீவு ஒன்றில் பதுங்கி இருந்து 30 சிஷ்யைகளுடன் ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நித்தியின் மறுபக்கம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

பாலியல் குற்றச்சாட்டு, சிறுமிகள் கடத்தல், அடைத்து வைத்து சித்ரவதை, பக்தரின் மரணத்தில் சர்ச்சை என திரும்பும் திசையெல்லாம் நித்தியானந்தா மீது புகார்களும், குற்றச்சாட்டுகளும் அடுக்கடுக்காக குவிந்து வருகின்றன. குஜராத் – கர்நாடகம் என மாநில அரசுகளுக்கு ஆட்டம் காட்டி வந்த நித்தியின் தற்போதைய நடவடிக்கையை பார்த்து அதிர்ந்து போய் இருக்கிறது மத்திய அரசு.

இண்டர்போல் உதவியுடன் நித்தியானந்தாவை வளைத்துப் பிடிக்க குஜராத் போலீசாருக்கு நீதிமன்றமே உத்தரவிட்டுள்ள போதும், ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு தன்னை ஒன்றும் செய்து விட முடியாது என சவால் விடும் விதமாக வீடியோ வெளியிட்டு வருகிறார் நித்தியானந்தா.
கர்நாடக மாநிலம் பிடதியிலிருந்து கடந்த ஆண்டு வெளியேறிய நித்தி ஆரம்பத்தில் இமயமலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டதால், வெளிநாடுக்கு தப்பியிருக்க முடியாது என வெளியுறவுத்துறை அப்பாவியாக நம்பி இருக்க, நேபாளம் சென்று அங்கிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் அடப்பாவி என்று சொல்லும் விதமாக விமானத்தில் ஏறி கண்டம் விட்டு கண்டம் தப்பியுள்ளார் நித்தி.

நித்தியை பொறி வைத்து பிடிக்க போலீசார் மேற்கொண்ட அனைத்து ராஜ தந்திர நடவடிக்கைகளும், அவரது நரித் தந்திரத்திற்கு முன் வீணாக போனது. அதே வேளையில் நித்தியானந்தா எங்கு உள்ளார் என்பது குறித்த தகவலை உள்துறை அமைச்சகத்துக்கு அண்மையில் ரா அமைப்பு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள தீவு ஒன்றை விலைக்கு வாங்க சில ஆண்டுக்கு முன்னரே திட்டம் தீட்டியிருந்த நித்தி, அதற்கான நிதியை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் மூலம் சேகரித்து தனித்தீவை விலைக்கு வாங்கியுள்ள தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஈக்வடாரில் உள்ள தனித்தீவுக்கு சென்றுள்ள நித்தியானந்தா, சகலவசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளை கொண்ட அந்த தீவில் 30 பேர் கொண்ட பெண் சீடர்களை தன் பிடியில் வைத்துக்கொண்டு, தினம் தினம் ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.

நித்தியானந்தா பிடியில் இருக்கும் அந்த கும்பலில் பெரும்பாலானோர் இளம்பெண்கள் என்றும், அதில் கடத்தப்பட்ட ஜனார்த்தன சர்மாவின் இரண்டு மகள்களும் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களும் நித்தியை ரொம்ப நல்லவர் என்று விளக்கி தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

இத்தனை குற்றங்களை செய்துவிட்டதால் எப்படியும் போலீசார் விட்டுவைக்க மாட்டார்கள் என எண்ணியுள்ள நித்தியானந்தா, ஈக்வடார் நாட்டிலேயே தங்கியிருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆன்மீக ஞானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நித்தியின் ஆசிரமத்தில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துவிட்ட பெற்றோர், அவர்கள் பத்திரமாக திரும்பி வரவேண்டும் என பரிதவிப்புடன் காத்திருக்கின்றனர்.

இதனிடையே, கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள ஆசிரமத்திற்கு வந்த குஜராத் போலீசார் மற்றும் உளவுப்பிரிவு அதிகாரிகள், தப்பி ஓடிய நித்யானந்தா எங்கே இருக்கிறார் என ஆசிரம மேலாளர்களிடம் விசாரணை நடத்தினர். ஆசிரமத்தில் எத்தனை பேர் உள்ளனர், கட்டாயத்தின் பேரில் பெண்கள் தங்கவைக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும் அவர்களிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டனர்.
இந்த நிலையில், ஈக்வடாரில் தனித்தீவை இந்து நாடாக மாற்றும் நித்தியின் முயற்சிக்கு அர்ஜூன் சம்பத் ஆதரவு தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!