Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 20 டிசம்பர், 2019

அடடே.. குறையப் போகுது வெங்காய விலை!

ராமநாதபுரம் பகுதியில் வெங்காயம் அதிக அளவில் விளைவிக்கப்பட்டுள்ளதால் விரைவில் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
விளைச்சல் பாதிப்பு, பதுக்கல் ஆகிய காரணங்களால் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென புதிய உச்சத்தை தொட்டது. வெங்காயம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்வதால் ஒவ்வொரு குடும்பத்திலும் வெங்காயத்திற்கென்று தனி பட்ஜெட் ஒதுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் தமிழக அரசால், எகிப்து, துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு விலை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில், ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட கரிசல் நிலங்களில் வெங்காயம் பயிரிடப்பட்டு நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது.

ராமநாதபுரத்தை அடுத்த உத்தரகோசமங்கை, வீரவனேந்தல், செவ்வூர், எக்ககுடி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் கரிசல் நிலங்களில் வெங்காயம் பயிரிடப்பட்டு ஊடு பயிராக மல்லியும் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது வெங்காயம் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. தற்போது பறிக்கும் நிலையை அடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அங்கு விளைச்சலடைந்துள்ள வெங்காயம் மாவட்டம் முழுவதிற்கும் விநியோகம் செய்ய போதுமானதாக இருக்கும். இந்த வெங்காய விளைச்சல் பொதுமக்களுக்கு ஆறுதலை தந்துள்ளது, மேலும், தற்போது நீடித்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும் என பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
 

இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், தற்போது இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு மாவட்டத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே இனிமேல் மழை தொடர்ந்தால், வெங்காய விளைச்சல் பாதிக்கும். தற்போது வரை பெய்துள்ள மழை வெங்காய மகசூலுக்கு போதுமானதாக உள்ளது என தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!