Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 20


 உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஆசைகளை உண்டாக்கி அவர்களை நல்வழிப்படுத்துவதும் அவர்களை ஆயுதங்களால் துன்பப்படுத்தாமல் அவர்களின் ஆசைகளால் துன்பத்திற்கு ஆளாக்கக் கூடிய வல்லமை உடைய காமதேவனே! உயிர்கள் இடத்தில் அன்பையும் காமத்தையும் உருவாக்கும் திறன் கொண்ட நீர் இப்பூவுலகில் இமயமலையில் உள்ள ஒரு குகையில் தியான நிலையில் உள்ள எம்பெருமானுக்கும், அங்கு அவருக்கு பணிவிடை செய்ய வரும் பார்வதி தேவிக்கும் காதல் எண்ணங்களை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

பரம்பொருளான சிவபெருமானுக்கு காதல் எண்ணங்களை உருவாக்க வேண்டும் என்று கூறியதும் காமதேவனின் மனைவியான ரதி தேவி மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இப்பணியை மேற்கொண்டால் என் பதியானவரின் (காம தேவனின்) அழிவுக்கு அது வித்திடும் என தன் பதியிடம் கூறி இதை மேற்கொள்ள வேண்டாம் என்று கூறினார்.

இவ்விதம் ரதி தேவி உரைத்ததும் தேவேந்திரன் சினம் கொண்டு நீர் செய்யும் இந்த செயலால் இந்த பிரபஞ்சமே அடையும் நன்மை எண்ணில் அடங்காது என்றும் தேவர்களுக்கு பல்வேறு இன்னல்களை உருவாக்கும் தாரகாசுரனின் அழிவு நிச்சயிக்கப்படும் என்றும் கூறினார்.

தந்தையின் விருப்பங்களுக்கு தாயின் அனுமதி கிடைக்காததால் தான் சிவபெருமானை காண முடியாத நிலை உண்டாகுமோ என தனிமையில், அரண்மனையில் உள்ள குளத்தில் ஆழ்ந்த சிந்தனையில் லயித்துக் கொண்டு இருந்தார் பார்வதி தேவி.

இவ்வேளையில் தன் மகளை காண தேவியின் அறைக்கு தாயான மேனை சென்றார். ஆனால், அங்கு பார்வதி தேவி காணவில்லை. பின் தேவியை தேடி அரண்மனையில் எப்போதும் தேவி இருக்கும் இடத்தை தேடி சென்றார்.

அங்கு சென்று பார்த்த போது பார்வதி தேவி மிகவும் கவலையுடனும், தோய்வுற்ற முகத்துடனும் காணப்பட்டார். தேவியின் வருத்தத்தை உணர்ந்த அன்னை தனக்கு விருப்பம் இல்லை என்றாலும் தன் மகளுக்காகவும், தன் கணவரின் விருப்பங்களுக்கும் மனம் இறங்கி வேறு வழி ஏதும் இல்லாத சூழலால் சிவபெருமானுக்கு பணிவிடை செய்ய அனுமதித்தார். ஆனால், விவாகம் என் விருப்பம் போல் இருக்க வேண்டும் என்று கூறினார்.

ரதி தேவியின் கூற்றுகளால் கோபம் அடைந்த தேவேந்திரனை, சமாதானப்படுத்தும் விதமாக காமதேவன் தேவந்திரனிடம் அதிபதியே! என் பதி கூறிய கூற்றுகளில் ஏதேனும் பிழை இருப்பின் அவளை மன்னித்தருள்வாயாக. ஏனெனில், நான் அவளின் கணவன் ஆவேன்.

ஏதேனும் விபரீதம் நடந்தால் தன்னுடைய மாங்கல்யத்திற்கு பாதிப்பு நேரிடுமோ என அஞ்சுகிறாள் என்று கூறி தன் மனைவியின் எண்ணங்களை காமதேவன் விளக்கினார். காமதேவன் அளித்த கூற்றுகளை ஏற்றுக்கொண்டு ரதி தேவியை மன்னித்துவிட்டேன் என்று தேவேந்திரன் கூறினார். மேலும் இப்பணியை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்றும் கூறினார். நீர் செய்யும் இப்பணியால் பூவுலகில் உள்ளோர்கள் மட்டுமல்லாது தேவலோகமும் புனிதம் அடையும் என்று கூறினார்.

தேவேந்திரனின் கூற்றுகளை ஏற்றுக்கொண்டு தன் அன்பு மனைவியோடு சிவபெருமான் தியானம் மேற்கொள்ளும் இமயமலையை காமதேவன் அடைந்தார். அங்குள்ள இயற்கை அமைப்புகளை தனது வில்லில் அம்பை ஏய்து ஆசைகளை தூண்டக்கூடிய வனமாக மாற்றினார்.

அதாவது இலையுதிர் பருவத்தால் வனத்தில் இருந்த செடிகள் மற்றும் மரங்கள் யாவும் வாடிய நிலையில் மலர்கள் இல்லாத வனமாக இருந்தததை அழகிய வனமாக மாற்றினார்.

செடி மற்றும் மரங்களில் புதிய இலைகள் தோன்ற வைத்து அதில் மனதை மயக்கக்கூடிய பூக்களை உருவாக்கி மணத்தால் சஞ்சலம் அடையக்கூடிய சூழலாக காமதேவன் மாற்றி அமைத்தார். இலையுதிர் காலமாக இருந்த வனத்தை கணப்பொழுதில் வசந்த காலத்தில் இருக்கும் நிலைக்கு மாற்றினார்.

அசுரர்களின் ஒற்றர்கள் மூலம் சிவபெருமானை மீண்டும் மணக்க தாட்சாயிணி தேவி புனர் ஜென்மம் எடுத்து வந்துள்ளார் என்றும் தேவர்கள் அவ்விருவரையும் ஒன்று சேர்க்க முயல்கின்றனர் என்பதையும் அசுர குல வேந்தனான தாரகாசுரன் அறிந்தான்.

தாட்சாயிணி தேவி, பார்வதி தேவியாக கையிலை மலையின் எல்லையில் உள்ள இமவான் (பர்வ ராஜன்) மன்னனுக்கு மகளாக பிறந்துள்ளார் என்பதையும் அறிந்தான்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!