Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 24




 பார்வதி தேவி சிவபெருமானை நோக்கி முன்னேறும் போது எரிமலை பிளம்பின் நடுவே குகைகள் யாவும் நெருப்பாக காட்சியளித்தன. 

எரிமலை பிளம்பின் இடையே தந்தையுடன் தாட்சாயிணி தேவியாக இருந்து கற்ற கல்வி அவர் தம் மீது கொண்டுள்ள பாசம் மற்றும் சகோதரிகளுடன் விளையாட்டு மற்றும் தன்னை கொல்ல வந்த அசுரனை பார்த்து பயந்த போது சிவபெருமான் அங்கு காட்சியளித்த காட்சிகள் யாவும் தோன்றி மனதை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தின. 

தேவி பொறுமையாக எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி நெருப்பு தத்துவத்தை குறிக்கும் மணிப்பூரகம் சக்கரத்தை கட்டுப்படுத்தினார். அதன் பின் நெருப்புகள் நிறைந்த எரிமலை நிலைகள் யாவும் விலகி இயல்பு நிலைக்கு வந்தன.

சகோதரி பாசம் மற்றும் சிவன் மீது கொண்ட மையல் எண்ணங்களால் நான் அடைந்த இன்னல்கள் மற்றும் தாய் தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை போன்ற காட்சிகள் தோன்ற அனாகதம் சக்கரத்தை கட்டுப்படுத்தி அடுத்த நிலையான விசுக்தி சக்கரத்தை அடைந்தார். 

ஆகாய தத்துவத்தை குறிக்கும் மேலும் சிவபெருமானுடன் தன் தந்தையான தட்சனின் யாகத்திற்கு சென்று வருவதாக கூறி சிவனுடன் வாதம் புரிந்த காட்சிகளும் நிகழப் போவதை தவிர்க்க சிவபெருமான் கூறிய அறிவுரைகளை மறந்து தட்சனின் யாகத்திற்கு சென்று தட்சனுக்கு சாபம் இட்டதும் நீர் வளர்க்கும் யாகம் பயனற்றதாக போகட்டும் என சாபம் அளித்த காட்சிகள் தோன்றின. 

மாயையை அறிந்து மனதை ஒரு நிலைப்படுத்தி விசுக்தி சக்கரத்தை கட்டுப்படுத்தி அடுத்த நிலையான ஆக்ஞா சக்கரத்தை கட்டுப்படுத்த முயன்றார். இறுதியில் பேரானந்தம் அளிக்கக்கூடிய சகஸ்ரஹ சக்கரங்களை கட்டுப்படுத்திய பின்பு சிவபெருமான் தவம் மேற்கொண்ட குகையில் தன்னுடைய பழைய நிலையை அடைந்தார். 

அங்கே சிவபெருமான் பல ஆண்டுகளாக எதையும் உட்கொள்ளாமலும் யாவரிடமும் பேசாமல் தியான நிலையில் அமர்ந்து இருந்தார். சூரியனின் ஒளிக் கதிர்கள் எல்லா திசைகளிலும் பரவும் போது மையத்தில் அமைதி இருப்பது போன்று சிவபெருமான் வீற்றிருந்தார். 

எவ்விதமான அசைவும் இல்லாத பரம்பெருளான எம்பெருமானை பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்களிடத்தும் வாசம் செய்யும் சிவபெருமானை கண்ட நொடியில் திகைத்தும், மனவருத்தத்துடனும் அவரின் அருகில் பார்வதி தேவி சென்றார். 

சிவபெருமான் தியான நிலையில் இருந்த நிலையை கண்டதும் தாட்சாயிணி தேவிக்கு சிவபெருமான் அடைந்த இன்னல்கள் யாவும் நினைவுக்கு வர தன்னுடைய செயல்களால் தான் சிவபெருமான் இந்நிலையில் உள்ளார் என்பதை உணர்ந்த பார்வதி தேவி மிகவும் வருத்தமடைந்தார். மேலும், தன் மீதே அவர் சினம் கொண்டார். 

பின் சிவபெருமானிடம் தன்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் படி நின்றார். ஆனால், பரம்பொருளான இறைவனிடம் இருந்து எவ்விதமான பதில்களும் வரவில்லை. இதனால் சோர்வுற்ற தேவி என்ன செய்வது என யோசித்த கணத்தில் சிவனின் மீது இருந்த தூசிகளை அகற்றி தன்னை மன்னிக்க கோரி வேண்டி நின்றார். 

இருப்பினும் சிவபெருமானிடம் இருந்து எவ்விதமான அசைவுகளும் உண்டாகவில்லை. இவை யாவற்றையும் கவனித்து பார்த்துக் கொண்டு இருந்தார் மன்மதன். தேவர்கள் மற்றும் நாரத ரிஷியும் சிவன் பார்வதி இணைவிற்கான சந்தர்ப்பம் இதுவென நினைத்து அந்த நேரத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தனர்.

நாரதரோ தேவேந்திரனிடம் மன்மதன் ஏன் தனது வேலைகளை செய்யாமல் இருக்கிறார் என வினாவினார். எனக்கும் அதற்கான காரணம் புரியவில்லை என தேவேந்திரன் பதில் உரைத்தார்.

மன்மதன் இனியும் பொறுமை காத்தல் என்பது உசிதமானதல்ல என நினைத்தார். முதலில் இந்த குகையை ரசனை உள்ள இடமாக மாற்ற எண்ணி தன் வில்லில் இருந்து குகையின் மேல் பக்கத்தை நோக்கிய வண்ணம் அம்புகளை எய்தார். அடுத்த கணப்பொழுதில் அந்த குகை தனது பழைமையான தோற்றத்தை இழந்து பசுமையான சூழலுடன் ஆசைகள் அதிகரிக்கும் வண்ணம் உள்ள இடமாக மாறின. 

பின் அடுத்த வில்லை தேவியை நோக்கி எய்தார். தேவியும் மனதில் இருந்த கசந்த நினைவுகளை மறந்து புத்துணர்ச்சியுடன் அழகிய தோற்ற பொழிவுடன் காணப்பட்டார். குகையில் நிகழும் மாற்றங்கள் தன்னிடத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் யாவற்றையும் உணர்ந்து இந்த பிரபஞ்சம் தன்னையும், சிவனையும் இணைக்க முயல்வதை எண்ணியும் முனிவரின் கூற்றுகள் நினைவுக்கு வர மனம் மகிழ்ந்தார் பார்வதி தேவி.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!