Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 57

ன்னியர்களோ வந்திருப்பவர்கள் யார் என்பதை அறிந்து பணிந்து வணங்கினர். பின் குமரனிடம் தாங்கள் அறுவரும் உன்னை வளர்த்தவர்கள் மட்டுமே என்று கூறினர். உன்னை ஈன்றவர் அனைத்திற்கும் தாயான பார்வதி தேவி என்று உரைத்தனர். இதை சற்றும் எதிர்பாராத குமரன் மிகுந்த குழப்பத்திற்கு ஆளானார்.

பின்பு எம்பெருமான் குமரனின் பிறப்பில் உள்ள அவசியம் பற்றி எடுத்துரைத்தார். ஒருபுறம் தன்னை ஈன்றவர்கள், மறுபுறம் தன்னை வளர்த்தவர்கள் என மனதில் குழப்பத்துடன் இருந்தார் குமரன். பின் ஆறு கன்னியர்களும் முருகனிடம் சென்று அனைத்தையும் அவர் புரியும் பொருட்டு எடுத்துரைத்தனர்.

தாங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு வந்த போது இருந்த நிலையையும் எடுத்துக்கூறி பார்வதி தேவியின் மகத்துவத்தை எடுத்துரைத்தனர். பின் தன்னை ஈன்ற தாயிடம் சென்று தங்களிடம் அவ்விதம் கூறியமைக்கு மன்னிக்க வேண்டினார் குமரன். பின் குமரன் பார்வதி தேவியை தன் தாயாக முழு மனதோடு ஏற்றுக்கொண்டார்.

குமரனுக்கு குழந்தை முதலே கார்த்திகை பெண்களான அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்து வந்தார்கள். அதன் பொருட்டு சிவபெருமான் குமரனுக்கு கார்த்திகை பெண்கள் பாலூட்டி வளர்த்து வந்தமையால் இனிமேல் குமரன் 'கார்த்திகேயன்" என்று அழைக்கப்படுவான் என்றும், கார்த்திகை பெண்களான கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகேயனை எண்ணி விரதமிருக்கும் அனைவரின் வாழ்விலும் இருந்த இன்னல்கள் யாவும் நீங்கி சகல வசதிகளையும் பெற்று நலமுடன் வாழ்வார்கள் என கூறி அருள் பாவித்தார்.

பின் சிவபெருமான், பார்வதி தேவி மற்றும் கார்த்திகேயனுடன் கைலாய மலைக்கு வந்தனர். பின்பு தேவர்களின் அரசனான தேவேந்திரன் இனியும் காலம் தாமதிக்காமல் தாரகாசுரன் மீது படையெடுத்து அவனை சம்காரம் செய்ய வேண்டும் என எம்பெருமானிடம் உரைத்தார்.

தேவேந்திரன் கார்த்திகேயனை படைக்கு தலைவனாக்கி பின் தாரகாசுரனோடு போர் புரிய தயாராக வேண்டும் என்று கூறினார்.

தேவேந்திரன் தேவர்கள் அடங்கிய படையை யுத்தத்திற்கு தயாராக இருக்கும் பொருட்டு அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்தார். ஆனால், கார்த்திகேயனோ மனதில் ஏதோ குழப்பத்தில் இருப்பதாக இருந்தார். இதை உணர்ந்த எம்பெருமான் தன் அம்சமான பதினொரு ருத்திரர்களின் அவதாரங்களில் இருந்து பதினொரு ஆயுதங்களை கார்த்திகேயனுக்கு வழங்கினார்.

அனைத்து வித ஆயுதங்களையும் கொடுத்து அவற்றை பயன்படுத்தும் விதத்தையும் எடுத்துரைத்தார். தேவர்கள் கார்த்திகேயனை தங்களது சேனாதிபதியாக ஏற்றுக்கொண்டு தாரகாசுரன் மீது போர் புரிய தயாராக இருந்தனர். மேலும், எட்டுதிக்கும் கேட்கும் வண்ணம் போர் முரசுகள் முழங்கின.

தாரகாசுரனிடம், அசுர ஒற்றர்கள் சிவபுத்திரன் வருகையைப் பற்றியும், தேவர்கள் போருக்கு தயாராக இருப்பது பற்றியும் கூறினர். தாரகாசுரனும், அசுரர்களின் படைகளும் அவர்களின் தலைநகரை அடுத்துள்ள சோணிதபுரத்தில் தயார் நிலையில் இருந்தனர்.

பின், பார்வதி தேவியை பார்த்த எம்பெருமான் நம் மைந்தனுக்கு போரில் வெற்றி கொள்ள ஆயுதமொன்றை வழங்கச் சொன்னார். உமாதேவி தனது சக்தியை ஒரு பகுதியாக தனது மைந்தனுக்கு அளித்தார். அதாவது, பஞ்ச பூதங்களை ஒரு சேர அழிக்கக் கூடியதும், எவர் மீது விடுத்தாலும் அவர்களின் வலிமைகளையும் தாண்டி அவரின் உயிரை எடுக்கக்கூடிய வல்லமை கொண்ட வேலாயுதத்தை பார்வதி தேவி கார்த்திகேயனுக்கு அளித்தார்.

பார்வதி தேவி கார்த்திகேயனிடம் என்னுடைய அம்சமான இந்த வேலானது உன் மனதில் எதை நினைத்து விடுக்கிறாயோ, அதை நீ எவ்விதம் நினைத்தாயோ அவ்விதம் முடித்து மீண்டும் உனது கரங்களுக்கே வந்து சேரும் என கூறினார்.

பின் தனது தாய், தந்தையிடம் ஆசிப்பெற்ற முருகன் படைகளுக்கு தலைமை தாங்கி அசுரர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றார். அவ்வேளையில் முருகனின் உருவத்தை பார்த்து தாரகாசுரன் ஏளனம் செய்தான்.

அதாவது, ஒரு சிறுவனை நம்பி அனைத்து தேவர்களும் இன்று தாரகாசுரனின் மாபெரும் படைகளால் உயிர் இழக்கப் போகிறார்கள் என்று கூறி எள்ளி நகையாடினான்.

தாரகாசுரன் முருகனை பார்த்து எள்ளி நகையாடினான். ஆனால், சிவனின் மைந்தனான குமரனோ எவ்விதமான கலக்கமுமின்றி உருவத்தை எண்ணி யாரையும் நம்பிவிடக்கூடாது என்று கூறியவுடன் போர் முரசுகள் முழங்கின. அப்போது தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தமானது தொடங்கியது.

மாய வித்தைகளின் உதவியால் தாரகாசுரன் முருகனின் முன்னால் போர் தொடுத்தும், அவரின் ஒவ்வொரு மாய தோற்றத்தையும், சிவபெருமான் அருளிய ஆயுதங்களையும், பராசக்தியின் அம்சமான வேலினைக் கொண்டும், தாரகாசுரனின் முயற்சிகள் யாவும் முறியடிக்கப்பட்டன.

தேவர்களின் வலிமையும் அதிகரித்து கொண்டே போனது. இழப்பானது தேவர்களிடம் குறைவாகவும் அசுரர்களிடம் அதிகமாகவும் ஏற்பட்டது. ஒரு சிறிய பாலகனிடம் தாம் பயின்ற அனைத்து மாயசக்திகளையும் பிரயோகம் செய்து நமக்கு தோல்வியே ஏற்படுகின்றது என எண்ணிய தாரகாசுரன் தனது முயற்சியை விடாது ஒவ்வொரு முறையும் புதுவிதமான அஸ்திரங்களை கொண்டு போரிட்டான்.

யுத்தமானது இரண்டு, மூன்று நாட்கள் என பத்து நாட்கள் வரை நீடித்தது. முருகனோ தாரகாசுரனின் முயற்சியை கண்டு இனியும் பொறுமை காத்தல் என்பது உசிதமானதாக இருக்காது என எண்ணி இறுதியில் தனது தாயின் அம்சமான வேலினை கரங்களில் ஏந்தி தனது மனதில் தன்னை ஈன்றவர்களை எண்ணி வேலினை தாரகாசுரனை நோக்கி விடுத்தார்.

முருகன் தனது பெற்றோர்களை மனதில் எண்ணியவுடன் எம்பெருமானும், பார்வதி தேவியும் அருள் பாவித்தனர். கரங்களில் இருந்து புறப்பட்ட வேலானது தாரகாசுரனின் அனைத்து வித மாய தோற்றத்தையும் அழித்து அவனை நோக்கி முன்னேறி சென்று அவனை தாக்கி அவனது உயிரை பறித்தது.

தாரகாசுரன் மரணமடைந்த செய்தியை தேவர்கள் அறிந்ததும் அவர்களின் வீரமும், வேகமும் அதிகரித்தது. அசுரர்களின் படைகள் எல்லாம் பலம் குறைந்ததால் போரில் ஈடுபடாமல் தப்பித்து ஓடினார்கள். பின் தேவர்கள் அனைவரும் ஒன்றாகக்கூடி முருகப்பெருமானின் வெற்றிக்கு அடிபணிந்து அவரை பலவாறு துதித்து போற்றி பாடினார்கள்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக