Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 10 பிப்ரவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 83

 த்திரி முனிவர் தன்னுடைய யோக நிலையில் அமர்ந்து பரம்பொருளான சிவபெருமானை எண்ணி தவத்தில் ஆழ்ந்தார். அனுசுயா தேவியும் தனக்கு எவ்விதமான பணிகளும் இல்லாததால், தான் என்றும் பூஜித்து வந்த சிவலிங்கத்தை தன் கணவர் முன்னிலையில் நிலைநிறுத்தி தன் கணவரையும், தான் வணங்கும் சிவலிங்கத்தையும் வணங்கி அவரும் யோகத்தில் அமர்ந்தார்.
காலங்கள் நகரத் தொடங்கின. நாட்கள், மாதங்கள் மற்றும் வருடங்கள் யாவும் கடந்தன. இவர்களின் யோக நிலையானது யாவரும் அறியா வண்ணம் இருந்தன. ஆனால், காலம் என்பது அனைத்திற்கும் பதில் சொல்லும் விதமாக இவர்களின் யோக நிலையானது எல்லை இல்லாமல் தொடர்ந்தன.

அவை ஒன்று, இரண்டு வருடங்கள் அல்லாமல் ஐம்பத்தி நான்கு வருடங்கள் உருண்டோடின. மானிடர்கள் அல்லாத அந்த வனத்தில் அசுரர்கள் வரத் தொடங்கினார்கள். யோக நிலையில் இருக்கும் அத்திரி முனிவர் மற்றும் அனுசுயா தேவியை இடையூறு செய்து அவர்களை அந்நிலையை விட்டு வெளியேற பல யுக்திகளை மேற்கொண்டனர்.

ஆனால், அனுசுயாவின் பதிவிரத தன்மையால் அசுரர்களின் அனைத்து முயற்சிகளும், செயல்பாடுகளும் தோல்வியை தழுவின. அசுரர்களின் இவ்விதமான தாக்குதலே அவர்கள் மேற்கொண்டு வந்த யோக நிலையை உலகம் முழுவதும் அறிய வைத்தது. அசுரர்கள் பலவிதமான செயல்பாடுகளை மேற்கொண்டாலும், அனுசுயா தேவியின் உடலில் இருந்து வீசிய யோகாக்கினியால் (நெருப்புத்திரள்) அவர்களை நெருங்கவே முடியாமல் தடுத்து அரணாக இருந்து வந்தது.

காலமே அனைத்திற்கும் விடையளிக்கும் வகையில் இவர்களின் யோக நிலைகளை பற்றிய செய்தி தேவலோகம் முழுவதும் சென்றடைந்தது. எதிர்ப்புகளும், தடைகளும் இருக்கும் பட்சத்தில் நம் செயலானது அனைவராலும் ஏற்புடையதாகும் (அதாவது செய்யும் செயலானது தீமையின்றி நன்மை பயக்கும் விதமாக இருப்பின்) என்பதை அத்திரி முனிவர் மற்றும் அவருடைய துணைவியான அனுசுயா தேவியின் தவமும் உணர்த்தின.

விண்ணுலகத்தில் மாட மாளிகையில் வாழ்ந்து வந்த அனைத்து தேவர்களும் அவர்களின் தேவிகளோடு காலத்தினால் வறட்சியின் பிடியில் மாட்டிக்கொண்ட காமதம் என்னும் வனத்தை நோக்கி வந்தனர்.

வந்தவர்கள் அனைவரும் அவர்களின் யோக நிலைக்கு கடுகளவிற்கு கூட எவ்விதமான இடர்பாடுகளையும் ஏற்படுத்தாமல் அவர்களை கண்டு மனம் மகிழ்ந்து வணங்கி சென்றனர்.

வந்த தேவர்கள் அனைவரும் அவர்களை வணங்கி விட்டு பலவாறு பாராட்டி பேசினர். பின்பு அவரவர்களின் பணியை தொடர தேவர்கள் தங்களின் இருப்பிடம் நோக்கி சென்றனர். ஆனால், அங்கு வந்தவர்களில் கங்கை தேவி மட்டும் எங்கும் செல்லாது அவ்விடத்திலேயே தங்கினார். ஏனென்றால், அத்திரி முனிவரும் அவருடைய துணைவியான அனுசுயா தேவியும் தூய மனதோடு பரம்பொருளான சிவபெருமானை வணங்குகின்றனர்.

சிவபெருமானின் திருமுடியில் கங்கை தேவியும் இருக்கின்றார். அவ்விருவருக்கும் தன்னால் இயன்ற அளவு அருள் புரிய வேண்டும் என எண்ணி கங்கா தேவி அவர்களின் விழி விழித்திடும் காலம் வரை காத்திருந்தார்.

இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பதையும், கங்கா தேவி அவர்களுக்காக காத்திருப்பதையும் தனது ஞான திருஷ்டியில் கண்ட சிவபெருமான் காலம் வரும்போது அவர்கள் செய்த தவத்தின் பலனை அடைவார்கள் எனக் கூறினார்.

யோக நிலையில் இருந்து கண் விழித்த அத்திரி முனிவர் தன் துணைவியான அனுசுயா தேவியை அழைத்தார். தன் பதியானவரின் குரலைக் கேட்டதும் அனுசுயா தேவி அவர் முன் சென்றார். அத்திரி முனிவர் அனுசுயா தேவியிடம் ஆசமனத்திற்கு நீர் எடுத்து வா என்று கூறினார்.

ஆசமனம் என்பது மனதையும், சொல் வாக்கையும் தூய்மைப்படுத்தும் செயலாகும். பல்வேறு நல்ல செயல்களை செய்வதற்கு முன்பும், செய்த பின்பும் ஆசமனத்தை செய்வார்கள். இதோ எடுத்து வருகிறேன் சுவாமி என்று கூறி அனுசுயா தேவி கையில் மண் குடத்தினை எடுத்துக்கொண்டு தண்ணீர் இருக்கும் இடத்தினை தேடி ஆசிரமத்திற்கு வெளியே வந்தார். வறட்சியின் காரணமாக அந்த வனத்தில் ஒரு துளி நீரும் இல்லாமல் இருந்தது. இதை அறிந்தும் மனம் தளராமல் பல இடங்களில் சென்று தேடினார். இருப்பினும் நீரானது எங்கும் இல்லை.

தண்ணீர் இல்லாததை கண்ட தேவி என்ன செய்வது என்று புரியாமல், காலம் வேறு கடந்து கொண்டிருக்கிறதே, இப்போது நான் என்ன செய்வேன்? என மன வேதனையோடு நின்று கொண்டிருந்தார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக