Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

பகாசூரனை வதம் செய்யும் பீமன்...!


பாண்டவர்களும், குந்தியும் அந்த வனத்தில் இருந்து புறப்பட்டனர். அப்பொழுது வியாசர் அவர்களை காண வந்தார். வியாசர், அவர்களிடம் நீங்கள் அனைவரும் பிராமணர்கள் வாழும் ஏகசக்கர நகரத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கான நல்ல நேரம் விரைவில் வரும் எனக் கூறிவிட்டு சென்றார். வியாசர் கூறியவாறே பாண்டவர்கள், பிராமணர்கள் வேடமணிந்து அந்நகரத்திற்குச் சென்றனர். தங்கள் நகரத்திற்கு புதியதாக வந்த பாண்டவர்களை, மக்கள் நன்றாக உபசரித்தனர். பாண்டவர்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் தங்க வைத்து நன்றாக உபசரித்தனர். இவ்வாறு ஒரு நாள், பாண்டவர்கள் தங்கியிருந்த வீட்டில் ஒரு பெண் மிகவும் கவலையுடன் அழுதுக் கொண்டு இருந்தாள்.

குந்தி அப்பெண்ணிடம் சென்று, மகளே! நீ எதற்காக அழுதுக் கொண்டு இருக்கிறாய்? எனக் கேட்டாள். அப்பெண், தாயே! இந்நகரத்தில் இருக்கும் காட்டில் பகாசூரன் என்னும் அரக்கன் வாழ்ந்து வருகிறான். அவனுக்கு இந்நகரத்தில் இருந்து தினமும் வண்டி நிறைய உணவுகள் கொடுக்கப்படுகின்றன. அந்த உணவை கொண்டு செல்பவரையும் அவன் சேர்த்து உண்டு விடுவான். இன்று எங்கள் வீட்டில் இருந்து உணவை கொடுக்க வேண்டும். அவனுக்கு உணவு கொண்டு செல்பவரும் அவனுக்கு பலியாக கூடும். அதனால் நான் மிகவும் கவலையுடன் இருக்கிறேன் என்றாள். குந்தி, மகளே! நீ கவலைக் கொள்ள வேண்டாம்.

எனது மகன்களில் பீமன் மிகவும் பலசாலியானவன். அவன் இடும்பன் என்னும் அரக்கனைக் கொன்றவன். அதனால் இன்று என் மகன் பீமன் உணவை கொண்டு செல்லட்டும். அவன் நிச்சயம் பகாசூரனை அழிப்பான் என்றாள். அப்பெண்ணும் இதற்கு சம்மதம் தெரிவித்து வண்டி நிறைய உணவை நிரப்பி வைத்தாள். அந்த உணவுடன் பீமன் காட்டிற்கு சென்றான். பீமனை பார்த்த பகாசூரன், ஏ அற்ப மனிதனே! உனக்கு உணவை கொண்டு வர இவ்வளவு தாமதமா? நான் மிகவும் பசியுடன் இருப்பேன் என்பது உனக்கு தெரியாதா? எனக் கூறிவிட்டு உணவை சாப்பிடச் சென்றான். பகாசூரன் சாப்பிடுவதற்கு முன் அந்த உணவுகளை பீமன் சாப்பிட்டான். இதைப் பார்த்து கோபங்கொண்ட பகாசூரன், பீமனை பிடித்து உண்பதற்கு சென்றான்.

இதனால் இருவருக்கும் பெரும் சண்டை உருவானது. இச்சண்டை நெடுந்நேரம் நடந்தது. பீமனின் பலமான தாக்குதலை தாக்கு பிடிக்காமல் அந்த இடத்திலேயே பகாசூரன் மாண்டான். பகாசூரன் இறந்துவிட்டான் என்னும் செய்தி அப்பகுதி மக்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு மக்கள் அனைவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பிறகு மக்கள், பாண்டவர்களை தங்களை காக்க வந்த தெய்வம் போல் மரியாதை செலுத்தி வந்தனர். பாண்டவர்களும் அந்நகரத்தில் எந்தவொரு இடையூறும் இல்லாமல் வாழ்ந்து வந்தனர்.

பாஞ்சாலத்தில் துருவதன், அர்ஜூனனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க காத்து கொண்டிருந்தான். பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் எரிந்த தீயில் மாண்டார்கள் என்னும் செய்தியையும் அவனால் நம்பமுடியவில்லை. நிச்சயம் பாண்டவர்கள் உயிருடன் இருப்பார்கள் என நம்பிக்கை வைத்திருந்தான். ஆனால் பாண்டவர்கள் பற்றி எந்த செய்தியும் வெளி வராததால் துருபதன் தனது மகளுக்கு சுயம்வரம் வைக்க முடிவு செய்தான். தன் மகளுக்கு விருப்பமானவரை அவளே தேர்ந்தெடுப்பாள் என்றான். அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டான். சுயம்வரத்தில் கலந்து கொள்ள பல நாடுகளிலும் இருந்து அரசர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

ஜராசந்தன், சல்லியன், சிசுபாலன், துரியோதனன், கர்ணன் முதலானவர்கள் கலந்து கொள்ள அங்கு வந்தனர். இச்செய்தி பிராமணர்கள் மூலம் பாண்டவர்களுக்கு தெரியவந்தது. பாண்டவர்களும் சுயம்வரத்தில் கலந்து கொள்ள பாஞ்சாலலத்திற்கு சென்றனர். அவர்கள் போகும் வழியில் வியாசர் அவர்களின் எதிரில் வந்தார் அவர்களை பார்த்த வியாசர், பாண்டவர்களே நீங்கள் செல்லும் காரியம் நிச்சயம் வெற்றியைக் கொடுக்கும் எனக் கூறி அனுப்பினார். தங்களது தாயை குயவன் ஒருவனது வீட்டில் தங்க வைத்து விட்டு அவர்கள் பாஞ்சாலத்திற்குச் சென்றனர். பாண்டவர்கள் பிராமிணர்கள் வேடம் அணிந்து சென்றதால், பிராமிணர்களுக்கான இருப்பிடத்தில் சென்று அமர்ந்தனர்.

கிருஷ்ணன் மற்றும் பலராமனும் வந்தனர். துருபதனும் அவைக்கு வந்து சேர்ந்தான். திரௌபதி பொன்னால் அலங்கரிக்கப்பட்டு அழகுச்சிலை போல் அரங்கத்திற்கு வந்து சேர்ந்தாள். ஆனால் திரௌபதியின் மனதில் அர்ஜூனன் மட்டுமே இருந்தான். நிச்சயம் அர்ஜூனன் இந்த சுயம்வரத்தில் கலந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் இருந்தாள். அவையில் அனைவரும் கூடிய பின்னர் திட்டத்துய்மன் தன் தங்கை திரௌபதியை அழைத்துக் கொண்டு சபையியின் நடுவில் வந்து நின்றான். திட்டத்துய்மன், மன்னர்களே! நீங்கள் வீரத்திலும், அழகிலும் சிறந்தவர்கள். உங்களில் யார் வீரத்திலும், திறமையிலும் சிறந்தவர் என்பதை அறிய இங்கு ஒரு போட்டி நடைபெற உள்ளது. அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு திரௌபதி மாலை சூடுவாள் என்றான்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக